Wednesday, May 12, 2021

கம்பன் கவித்தேன் – பால காண்டம் – நகரப் படலம்

நகரப் படலத்தில் அயோத்தி நகரின் அழகு, பெருமை, அதன் மதிலின் சிறப்பு, அகழியின் தன்மை, சோலை, அந்நகர மக்களின் செல்வச் செழிப்பு ஆகியவற்றை அழகான சித்திரமாக நம்முன்னே காட்டுகிறார் கம்பர். அப்படி காட்டிச் செல்கையில் கம்பன் பல கருத்துக்களையும், அறங்களையும் சொல்லிச் செல்கிறார். காண்போம்.
படலத்துவக்கத்தில் அயோத்தின் பெருமையைக் கூறும் பொழுது, ஒரு நல்ல கவிதையின் இலக்கணத்தை நமக்குக் காட்டுகிறார் கம்பர்.

செவ்விய மதுரம் சேர்ந்த நல் பொருளின் சீரிய கூரிய தீம் சொல்
வவ்விய கவிஞர்

ஒரு கவிதை என்பது செவ்வியதும், இனிமை நிறைந்ததும், சொல்லுகின்ற பொருளால் சிறந்ததும், நுட்பமானதும் சிறந்த சொற்களாலானதுமாக இருக்கவேண்டும் என்பது கம்பன் நமக்கு இங்கு காட்டுவது.

வார்த்தைகளின் குவியல் அல்ல கவிதை. அடுக்குச் சொற்களின் அலங்காரமல்ல கவிதை. 

சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லும்சொல் இன்மை அறிந்து

என வள்ளுவனும் சொல்லவில்லையா! அப்படி மிகச் சிறப்பாக அமைய வேண்டும். சிறந்த சொற்களால் ஆனதாக இருக்க வேண்டும். இலக்கணப்படி சரியானதாக அமைந்தால் மட்டும் போதாது. இனிமையானதாக இருக்க வேண்டும். பொருள் நிறைந்ததாய் இருக்க வேண்டும். அப்பொருளும் மேலானதாக இருக்க வேண்டும், நுட்பமானதாக அமையவேண்டும் என்று காட்டுகிறார் கம்பன்.

இவ்வாறு பல இடங்களில் கவிதையின் கூறுகளை எடுத்துச் சொல்லும் பொழுது, சில இடங்களில் உவமையாகவும் சிலேடையாகவும் கவிதையின் அமைப்பை எடுத்துக் காட்டும் அழகு நயமிக்கது. இதோ!

அன்னமா மதிலுக்கு ஆழிமால் வரையை அலைகடல் சூழ்ந்தென அகழி
பொன்விலை மகளிர் மனமெனக் கீழ்ப்போய்ப் புன்கவி எனத்தெளி வின்றிக்
கன்னியர் அல்குல் தடமென யார்க்கும் படிவரும் காப்பின தாகி
நன்னெறி விலக்கும் பொறியென எறியும் கராத்தது நவிலலுற் றதுநாம்

இப்பாடலில் அகழியின் தன்மையைக் காட்ட வந்த கம்பன் அவ்வகழி புன்கவி எனத் தெளிவின்றி இருந்தது என உவமிக்கிறார். தெளிவில்லாமல் இருப்பது சிறந்த கவிதையல்ல. சொல்லிலும் பொருளிலும் தெளிவிருக்கவேண்டும். அப்படி யில்லாமல் இழிவான கவிதைகளைப் போல் இவ்வகழி தெளிவில்லாமல் இருந்ததாம். அகழி கலங்கிய தன்மையை இவ்வாறாகக் குறிப்பிடுகிறார். இப்பாடலில் உவமை அழகை இரசித்து மகிழவேண்டும்.

அதே போல், ஆரண்ய காண்டத்தில் கோதாவரியின்பொலிவைக் காட்டும் பொழுதும்

புவியினுக்கு அணி ஆய், ஆன்ற பொருள் தந்து, புலத்திற்று ஆகி,
அவி அகத் துறைகள் தாங்கி, ஐந்திணை நெறி அளாவி,
சவி உறத் தெளிந்து, தண்ணென் ஒழுக்கமும் தழுவி, சான்றோர்
கவி என, கிடந்த கோதாவரியினை வீரர் கண்டார்.

இப்பாடல் சிலேடையாக கோதாவரி ஆற்றின் சிறப்பையும் நல்ல சான்றோரின் சிறந்த கவிதையின் இலக்கணத்தையும் காட்டுவதாய் அமைந்திருப்பது அறிந்து மகிழத்தக்கது. சிலேடை என்பது ஒரு பாடல் இரு பொருளுக்கு ஆகி இரண்டு விதமாகவும் பொருள் தருவதாக அமைவது. இப்பாடல் ஆற்றையும் ஒரு நல்ல கவிதையையும் குறிப்பதாக அமைந்துள்ளது.

ஆறாக காணும் பொழுது

புவியினுக்கணியாய் : நிலமகளுக்கு ஒரு அணிகலன் போல, ஆற்றொழுக்கை பூமியின் ஆரமாக, மேகலையாக உவமிப்பது கவி மரபு.

ஆன்ற பொருள் தந்து :ஆற்றில் அடித்துவரப்பட்ட அகில், சந்தன மரம், யானை தந்தம், மணிகள் போன்ற பல பொருட்கள் துறைதோரும் தங்கும். அப்படி வளம் தந்து

புலத்திற்று ஆகி : புலம் என்றால் வயல். வயலில் விளையும் பொருட்களுக்கு ஆதாரமாகி,

அவி அகத் துறைகள் தாங்கி: தன்னுள் பலத் துறைகள் கொண்டு

ஐந்திணை நெறி அளாவி : குறிஞ்சி, முல்லை, மருதம் நெய்தல் பாலை என்ற ஐந்து நிலங்களின் வழி ஓடி

சவி உறத் தெளிந்து : செம்மையாக தெளிவுற்று

தண்ணென் ஒழுக்கமும் தழுவி : குளுமையான நீரோட்டமாக ஓடி
இப்படிக்கிடந்ததாம் கோதாவரி ஆறு என்று காட்டுகிறார் கம்பர்.

சான்றோர் கவியுடன் இதை எப்படி உவமிக்கிறார் என்று பார்ப்போம்.

நல்ல கவிதையாக இப்பாடலைக் காணும் பொழுது:

புவியினுக்கணியாய்: கவிதை என்பது பல அணிகள் கொண்டதாக அமைய வேண்டும். உவமை, உருவகம், வேற்றுப்பொருள் வைப்பணி, தற்குறிப்பேற்ற அணி என்று பல அணிகள் ஒரு கவிதைக்கு அழகு சேர்ப்பன, கவிதை மொழிக்கும், மொழி பேசும் மக்களுக்கும் பெருமை சேர்ப்பது.

ஆன்ற பொருள் தந்து : சிறந்த அறம் சொல்வதாய் அமைந்து

புலத்திற்று ஆகி: இங்கு புலங்களுக்கு விருந்தாகி

அவி அகத் துறைகள் தாங்கி : சிறப்பாக அமைந்த அகத்துறைகள் கொண்டு

ஐந்திணை நெறி அளாவி : குறிஞ்சி, முல்லை, மருதம் நெய்தல் பாலை என்ற ஐந்திணை ஒழுக்க வழி நின்று

சவி உறத் தெளிந்து: குழப்பமில்லாமல், செம்மையானதாக தெளிவானதாக அமைந்து

தண்ணென் ஒழுக்கமும் தழுவி: நல்லொழுக்கத்தைச் சொல்லி

சான்றோர் கவி :அமைந்திருப்பது நல்ல அறிஞர்களின் கவிதையாகும் என்று காட்டுகிறார்.

இப்படி கோதாவரியின் அழகைக் காட்ட வந்த கம்பர் ஒரு சிறந்த கவிதைக்கான இலக்கணத்தையும் நாமறியக் காட்டுகிறார். கவிதையின் சிறப்பைக்கூறும் பாடலே சிலேடையாக அமைந்து இருப்பது நயமிக்கது. இந்த அனைத்து கூறுகளும் கம்பனின் கவியில் நிறைவுற அமைந்து பல நூற்றாண்டுகளாக தமிழ் மொழிக்கும் தமிழருக்கும் பெருமை சேர்த்து நிற்பது அழகு.

அடுத்து நகரப் படலத்தில் அயோத்தி நகரின் அழகை பெருமையை சற்று உயர்வு நவிற்சியாகவே எடுத்துக் காட்டுகிறார் கம்பர்.

அயின் முகக் குலிசத்து அமரர்கோன் நகரும் அளகையும் என்றிவை அயனார்
பயிலுற வுற்ற படிபெரும் பான்மை பகர்திரு நகரிது படைப்பான்
மயன்முதற் றெய்வத் தச்சரும் தத்தம் மனத் தொழில் நாணினர் மறந்தார்
புயல்தொடு குடுமி நெடுநிலை மாடத்து இந்நகர் புகலுமாறு எவனோ.

இந்திரபுரியும் அளகாபுரியும் படைத்தது இந்நகரை படைப்பதற்கான ஒரு பயிற்சியாகவே என்றும்,

உமைக்கொரு பாகத் தொருவனும் இருவர்க்கு ஒருதனிக் கொழுநனும் மலர்மேல்
கமைப் பெருஞ் செல்வக் கடவுளும் உவமை கண்டிலர் அங்கது காண்பான்
அமைப்பருங் காதல் அது பிடித்து உந்த அந்தரம் சந்திரா தித்தர்
இமைப்பிலர் திரிவர் அதுவலால் இதனுக்கு இயம்பலாம் ஏதுமற் றியாதோ.

சந்திரனும் சூரியனும், தேவரும் தினமும் வருவது இந்நகரின் அழகை காண்பதற்காகவே என்றும் சிவனும் திருமாலும் கூட இந்நகரைப் போன்ற ஒன்றை காண்டிலர் என்றும் மிக சிறப்பாக உயர்வு நவிர்சியாக காட்டியிருப்பார். மேலும்

புண்ணியம் புரிந்தோர் புகுவது துறக்கம் என்னும் ஈது அரு மறைப் பொருளே
மண்ணிடை யாவர் இராகவன் அன்றி மா தவம் அறத்தொடும் வளர்த்தார்.
எண் அருங் குணத்தின் அவன் இனிது இருந்து இவ் ஏழ் உலகு ஆள் இடம்

என்ற பாடலிலும்

தங்கு பேரருளும் தருமமும் துணையாத் தம் பகைப் புலன்கள் ஐந்து அவிக்கும்
பொங்கு மா தவமும் ஞானமும் புணர்ந்தோர் யாவர்க்கும் புகலிடம் ஆன
செங்கண் மால் பிறந்து ஆண்டு அளப்ப திருவின் வீற்றீருந்தனன் என்றால்,
அங்கண் மா ஞாலத்து இந்நகர் ஒக்கும் பொன் நகர் அமரர் நாட்டு யாதோ.

என்றபாடலிலும்

தனது இறைகருத்தையும் காட்டி இந்நகரினை புகழ்ந்து இருப்பார். இங்கு இம்மையில் புண்ணியம் செய்வோர் மறுமையில் சொர்க்கம் சேர்வார்கள் என்பது வேத கருத்து என்றும் கருணையும் அருளும் துணையாக ஐம்புலங்களாகிய பகையை வென்று தவமும் ஞானமும் பெற்று சிறக்கவேண்டும் என்ற அற கருத்துக்களையும் மக்களுக்குச் சொல்லி செல்வார் கம்பர்.

அடுத்து மதிலின் பெருமையை விளக்கும் இடத்தில்

நால்வகைச் சதுரம் விதிமுறை நாட்டி நனிதவ உயர்ந்தன பனிதோய்
மால்வரைக் குலத்தின் யாவையும் இல்லை ஆதலால் உவமைமற் றில்லை
நூல்வரைத் தொடர்ந்து பயத்தொடு பழகி நுணங்கிய நூலவர் உணர்வே
போல் வகைத் தல்லால் உயர்வினொடு உயர்ந்து என்னலாம் பொன் மதில் நிலையே.

இப்பாடலில், அன்று சிற்ப கலை மிகச் சிறந்து இருந்து என்பதை நாமறிகிறோம். இங்கு ஒரு அழகான உவமைமூலம் நல்ல கருத்தையும் சொல்லியிருப்பார். சிற்ப கலை நூல் விதிப்படி நான்கு தூண்கள் அமைக்கப்பட்டு அமைந்துள்ள இம்மதிலின் உயர்விற்கு உலகின் எந்த மலையும் உவமைக் கூற முடியாது. எந்த மலையும் மதில் போல் அவ்வளவு சிறப்பாக அமையவில்லை மேலும் மதில், மலைகளை விடப் பெரியது. எப்படி எனில், ஞான நூல்களை முற்றும் கற்று, கற்றதோடு மட்டுமல்லாமல் அதன் பயனாக பெற்று உணரக்கூடிய மெய்யுணர்வைப்போல் உயர்ந்தது என்று உயர்வு நவிற்சியாக மெய்யுணர்வை உவமைப்படுத்தி இருப்பது நயமானது. மெய்யுணர்வு என்பது கற்று மட்டும் பெறுவதல்ல, கற்றதன் பயனாக உணரக்கூடியது. இங்கு மதிலை சொல்ல வந்தவர் மெய்யுணர்வையும் நமக்கு தெளிவுறுத்துகிறார்.

மேவரும் உணர்வின் முடிவிலா மையினால் வேதமும் ஒக்கும் விண் புகலால்
தேவரும் ஒக்கும் முனிவரும் ஒக்கும் திண்பொறி யடக்கிய செயலால்
காவலிற் கலையூர் கன்னியை யொக்கும் சூலத்தாற் காளியை ஒக்கும்
யாவையும் ஒக்கும் பெருமையால் எய்தற்கு அருமையால் ஈசனை ஒக்கும்.

இப்பாடலில் மிகச் சிறப்பாக சிலேடையுடன் கூடிய சில உவமைகளைக் காட்டியிருப்பார். இம்மதில் முடிவில்லாது நீண்டு இருப்பதால் முடிவில்லாத வேதத்தை ஒத்து இருந்ததாம், மிக உயர்ந்து வானுலகை எட்டுவதால் தேவரை ஒத்ததாம், பொறிகளை அடக்கியதால் முனிவரை ஒத்ததாம், இங்கு பொறிகள் என்பது சிலேடையாக போர் கருவிகளையும் ஐம்பொறிகளையும் குறித்து நிற்கும், இதன் மேல் அமைந்துளள இடிதாங்கி சூலத்தைப் போன்றுள்ளதால் காளியைப் போலவும் காவல் செய்வதால் துர்கையைப் போலவும் இருந்ததாம், மேலும் இது பெருமைமிக்க எல்லாவற்றையும் ஒத்திருப்பதாலும் அடைவதற்கு கடினமானதாக இருப்பதாலும் இது ஈசனை ஒத்தும் இருந்ததாம். இப்படி அந்நகருக்கு அணியாக விளங்கிய மதிலை சிறப்பித்துக் கூறுவார். இங்கும் வேதம் ஆதியந்தமில்லாதது, ஐம்பொறிகளை அடக்கியவரே முனிவர், பெருமைமிக்க அனைத்தையும் ஒத்ததாகவும் அடைய முடியாததாகவும் இருப்பதே ஈசன் என்று அறிய முடியாததை உவமிப்பதின் மூலம் இரண்டின் பெருமையையும் உணரவைக்கிறார்.

இப்படி பல பாடல்களில் சிலேடையாக மதிலை சூரிய குல அரசர்களோடு உவமித்துக் காட்டியவர்

பூணினும் புகழே அமையும் என்று இனைய பொற்பில் நின்று உயிர் நனி புரக்கும்
யாணர்

என்று பூணுவதற்கு அணிகலங்களைக் காட்டிலும் புகழே சிறந்து என்று நல்லொழுக்கத்தோடு மக்களைக்காத்தவர் சூரிய குல அரசர்கள் என்று காட்டுவதன் மூலம் ஒழுக்கமும் அதனால் வரும் புகழுமே ஒருவருக்கு அணி என்பதைச் சொல்கிறார்.

அடுத்து மதிலைச் சூழ்ந்த அகழியைக்கூறுவார்.

ஒரு அழகான பாடல்

ஏகுகின்ற தன்க ணங்க ளோடும் எல்லை காண்கிலா
நாகம் ஒன்று அகல்கி டங்கை நாம வேலை ஆமெனா
மேகம் மொண்டு கொண்டெ ழுந்து விண்தொ டர்ந்த குன்றமென்று
ஆக நொந்து நின்று தாரை அம்மதிற்கண் வீசுமே.

மேகக் கூட்டம், மிகவும் ஆழமானதான அகழியை கடல் என்று எண்ணி மயங்கி நீரை முகந்துக் கொண்டதாம், நீரை முகந்துக் கொண்ட மேகம் மேலே சென்று மிக உயர்ந்த மதிலை மலை என்று மயங்கி அதன் மேல் மழையைப் பொழிந்ததாம். இங்கு மழைப்பொழியும் அறிவியல் நிகழ்வு விவரிக்கப்படுவதோடு, அகழியின் பெருமையையும் மதிலின் உயர்வையும் ஒருசேர நாமுணர சொல்லால் காட்சிபடுத்தியிருப்பதும் அழகு. இது ஒன்றை மற்றொன்றாக நினைத்து மயங்குவதாக காட்டுவதால் இது மயக்கவணி என்பதும் அறியத்தக்கது.

இப்படி அவ்வகழியில் இருக்கும் முதலை, அன்னம், மலர்கள் என்று பலவற்றை சிறப்பாகக் காட்டி நம்முன்னே ஒரு கவிச்ச்சித்திரம் வரைந்து இருப்பார் கம்பர்.

அன்ன நீள் அகன் கிடங்கு சூழ்கிடந்த ஆழியை
துன்னி வேறு சூழ்கிடந்த தூங்கு வீங்கு இருட் பிழம்பு
என்னலாம் இறும்பு சூழ்கிடந்த சோலை எண்ணில் அப்
பொன்னின் மா மதிட்கு உடுத்த நீல ஆடை போலுமே.

அழகிய நகர், நகரைச் சுற்றி அமைந்த மதில் , அதனைச்சுற்றி ஆழ்ந்து பரந்து நின்ற அகழி, அடுத்து காடு போல் அடர்ந்த சோலை இவற்றைக்காட்டியவர். அச் சோலையைக் குறிக்கும் போது, சக்கரவாள மலையைச் சுற்றிய இருட்பிழம்பைப்போல் மதிலைச் சுற்றி இருந்த சோலையைப் பார்த்தால் அழகான அம்மதிலுக்கு உடுத்திய ஆடைப்போல் இருந்ததாக தற்குறிப்பேற்றி நயம் படக் காட்டுகிறார்.

சிற்ப கலை மட்டுமல்ல சித்திரக் கலையும் சிறந்து விளங்கியதை அடுத்தப்பாடலில் காட்டுகிறார்.

தா இல் பொன் தலத்தின் நல் தவத்தினோர்கள் தங்கு தாள்
பூ உயிர்த்த கற்பகப் பொதும்பர் புக்கு ஒதுங்குமால்
ஆவி ஒத்த அன்பு சேவல் கூவ வந்து அணைத்திடா
ஓவியப் புறாவின் மாடு இருக்க ஊடு பேடையே.

ஓவியத்தில் வரையப்பட்டிருந்த பெண்புறாவை உணமைப்புறா என மயங்கிய ஆண் புறா அதனிடத்திலேயே நின்றிருக்க, ஊடல் கொண்ட அதன் பெண்புறா கற்பகச் சோலையில் போய் மறைந்துக் கொண்டதாம். குற்றமற்ற நல்ல தவமுடையவர் தங்கும் கற்பகச் சோலை என்று காட்டியதும் அறியத்தக்கது.

புள்ளியம் புறவுஇறை பொருந்து மாளிகை
தள்ளருந் தமனியத் தகடு வேய்ந்தன
எள்ளருங் கதிரவன் இளவெ யிற்குழாம்
வெள்ளியங் கிரிமிசை விரிந்த போலுமே

கம்பன் அந்நகர மாளிகைகளைக் காட்டும் பொழுது சந்திரனையும் பழிக்கும் வெண்ணிற மாளிகைகள் பாற்கடலைப்போல் இருந்தன எனக்காட்டுகிறார்.

மேற்சொன்னப் பாடலில் அப்படிப்பட்ட வெண்ணிற மாளிகையில் பொன் தகடுகள் பதிக்கப்பட்டிருக்கின்றன. இது வெள்ளியங்கிரி எனும் கைலாய மலையின் மீது சிறந்த சூரியனின் கதிர்கள் பரவியிருப்பதை ஒத்து இருந்ததாகக் காட்டுகிறார்.

இங்கு சுந்தரரின் ‘பொன்னார் மேனியனே!’ என்ற தேவாரப்பாடல் நினைவிற்கு வருகிறதல்லவா!!

இன்னுமொரு பாடலில் இம்மாளிகைகளைக் காண வந்தவர் ஆச்சரியத்தால் கண்ணிமைக்காமல் பார்ப்பராம், இவர்கள் மேல் இவ்வொளி பட்டு அவர்களும் கண்ணிமைக்காத தேவரை போலிருப்பார்களாம்.

மேலும் இம் மாளிகையைச் சொல்லும் பொழுது

வானுற நிவந்தன வரம்பு இல் செல்வத்த
தான் உயர் புகழ் எனத் தயங்கு சோதிய
ஊனம் இல் அறநெறி உற்ற எண் இலாக்
கோன் நிகர் குடிகள் தம் கொள்கை சான்றன.

இங்கு எங்கும் பரவியிருக்கும் புகழைப்போல் பரந்து வீசும் ஒளி பொருந்தியவை என்னும் உவமை அழகு அறிந்து மகிழத்தக்கது. அற நெறி தவறாத மன்னனைப் போலவே மக்களும் இருப்பதற்கு இவைச் சான்றாக உள்ளன எனக்காட்டுவதும் அறியத்தக்கது.

மற்றொரு பாடலில் சந்திரன் தினமும் தேய்வது அந்நகரில் உள்ள உயர்ந்த கொடிகளில் உரசுவதால்தான் என்று தற்குறிப்பாக சொல்லும் நயமும் ,

எழுமிடத் தகன்றிடை யொன்றி எல்படு
பொழுதிடைப் போதலிற் புரிசைப் பொன்மதில்
அழன்மணி திருத்திய அயோத்தி யாளுடை
நிழலென பொலியுமால் நேமி வான்சுடர்.

இப்பாடலில் சூரியனுக்கு ஒளி இருக்குமாயின் உதயத்திலேயே ஒளியுடன் உதிக்க வேண்டும், மாலையிலும் சூரியனில் ஒளி மங்குகிறது என்வே சூரியன் இந்நகரின் வழியே செல்வதால் இந்நகரிமிருந்தே ஒளியைப் பெறுகிறான் என்ற கற்பனை நயமும் அழகு. இந்நகரின் அழகை பாடவந்த கம்பருக்கு கற்பனை ஊற்றென பிறந்தது போலும்…

குழலிசை மடந்தையர் குதலை கோதையர்
மழலையங் குழலிசை மகர யாழிசை
எழிலிசை மடந்தையர் இன்சொல் இன்னிசை
பழையர்தம் சேரியிற் பொருநர் பாட்டிசை.

இப்பாடலில் பெண்களை மூன்று நிலைகளில் காட்டி அவர்தம் பேச்சின் இனிமையை மூன்றுவிதமாக காட்டியிருக்கும் அழகு இரசிக்கத்தக்கது.

பொழுதுணர் வரியவப் பொருவின் மாநகர்த்
தொழுதகை மடந்தையர் சுடர்வி ளக்கெனப்
பழுதறு மேனியைப் பார்க்கும் ஆசைகொல்
எழுதுசித் திரங்களும் இமைப்பி லாதவே.

இப்பாடலிலும் ஒரு அழகான தற்குறிப்பு. ஓவியங்கள் கண்ணிமைக்குமோ! கண்ணிமைக்கவில்லையாம் ஏன் தெரியுமா, இந்நகர பெண்களின் பழுதில்லா மேனியை பார்க்கும் ஆசையால் தான் அவை இமைக்க மறந்தனாவாம். அழகிய கற்பனை!!

பதங்களில் தண்ணுமை பாணி பண்ணுற
விதங்களின் விதிமுறை சதிமி திப்பவர்
மதங்கியர் அச்சதி வகுத்துக் காட்டுவ
சதங்கைகள் அல்லன புரவித் தாள்களே.

இப்பாடலில் நடன கலையின் அழகைக் காட்டுகிறார். தாள ஒலி, மத்தளம், பாடல் ஒலி இவற்றிகேற்ப சதங்கைகள் அணிந்து பெண்கள் ஆடுவர். அவரது சதங்கைகள் போலவே குதிரைகளும் தாளத்துடன் ஆடுமாம்..

முளைப்பன முறுவல் அம்முறுவல் வெந்துயர்
விளைப்பன அன்றியும் மெலிந்து நாள்தொறும்
இளைப்பன நுண்ணிடை இளைப்ப மென்முலை
திளைப்பன முத்தொடு செம்பொன் ஆரமே.

இந்தப்பாடலும் மிகவும் இரசிக்கக்கூடியது. இந்நகர பெண்களின் முகத்தில் எப்பொழுதும் புன்னகை பூத்திருக்குமாம். அதே புன்னகை ஆடவருக்கு வருத்தத்தைக் கொடுக்குமாம். நாளும் இளைப்பது பெண்களின் இடையாம் ஆனால் இவ்விடை மேலும் வருந்துமாறு அவரது முத்தனிந்த மென்முலைகள் திளைத்திருக்குமாம். இப்படி இன்பமும் துன்பமுமாக எதிரெதிராக காட்டியிருப்பது நயமிக்கது. இது உலக இயற்கையுமல்லவா!!

இப்படலம் முழுதும் கம்பனின் பாடல்களில் காணப்படும் கற்பனை வளமும், கருத்தாழமும் கவி நயமும், சொல்லழகும் படிக்கப் படிக்க இன்பமளிக்கக்கூடியது. நமது சிந்தனைக்கு விருந்தாகக் கூடியது. படைப்பாளிகளுக்கு இப்பாடல்கள் ஒரு பொக்கிஷம்.

முத்தாய்ப்பாக படலத்தின் இறுதிப்பாடல் அமைந்திருக்கிறது.

ஏகம் முதல் கல்வி முளைத்து எழுந்து எண் இல் கேள்வி
ஆகும் முதல் திண் பணை போக்கி அருந் தவத்தின்
சாகம் தழைத்து அன்பு அரும்பி தருமம் மலர்ந்து
போகங் கனி ஒன்று பழுத்தது போலும் அன்றே.

இப்பாடல் ஒரு முற்றுருவகம்

கல்வி என்னும் வித்து முளைத்து, எண்ணற்ற பல நூற் கேள்வியாகிய பல கிளைகள் பெற்று, தவமாகிய இலைகள் துளிர்த்து, அன்பாகிய அரும்பு அரும்பி, அறமாகிய மலர்மலர்ந்து, அறத்தினால் விளைந்த இன்பம் என்னும் பழம் பழுத்த மரத்தைப் போன்று அயோத்தி நகரம் பொலிவாக விளங்கியதாம். 
அடடா! என்னே அழகு! நற்கல்வி, கல்வியால் கேள்வி, தவம் துணையிருக்க, அன்பை அடிப்படியாகக் கொண்டு அறம், அவ்வறத்தால் விளைந்த நல்லின்பம் என்று வாழும் மிகச்சிறப்பான வாழ்வை கம்பன் இப்பாடலில் காட்டுகிறார்.

ஒரு சிறப்பான கவிதையின் தன்மையைச் சொல்லி துவங்கிய இப்படலம் முழுதும் பாடலில் கூறியது போலவே நல்ல கவிதையின் அனைத்துக் கூறுகளும் அமையப்பெற்று சிறந்திருப்பது தமிழால் கம்பன் உயர்வுற்றாரா! கம்பனால் தமிழ் உயர்வுற்றதா! என்று வியக்குமாறு உள்ளது.

‘கம்பன் கவியே கவி’      சுவைப்போம்!!!

அடுத்தப் பதிவு விரைவில்..

அன்புடன்
உமா

Sunday, March 28, 2021

கம்பன் கவித்தேன் - பாலகாண்டம் - நாட்டுப் படலம்

வாங்கரும் பாதம் நான்கும் வகுத்தவான் மீகி என்பான்
தீங்கவி செவிகள் ஆரத் தேவரும் பருகச் செய்தான்
ஆங்கவன் புகழ்ந்த நாட்டை அன்பெனும் நறவ மாந்தி
மூங்கையான் பேச லுற்றான் என்னயான் மொழிய லுற்றேன்.

    என்று நாட்டுப்படலத்தைத் துவங்குகிறார் கம்பன். நீக்குவதற்கு இயலாத செம்மையான நான்கு அடிகள் கொண்டதும் செவிகளுக்கு இன்பமளிக்கக்கூடியதுமான கவிகளை, தேவரும் மகிழுமாறு வால்மீகி என்பான் தந்தான். அவ்வினிய கவிகளால் அவன் புகழ்ந்த நாட்டை அன்பெனும் கள்ளுண்டு பேசயியலா, ஊமை பேச முயன்றதைப்போல் நான் கூறுகிறேன், என்கிறார்.

    பேச முடியாதவருக்கு பேச்சு வந்தால் எவ்வாறு நினைத்ததையெல்லாம் பேசிமுடிக்க முயல்வாரோ அவ்வாறு நானும் எழுத முயன்றேன் என்றும் கொள்ளலாம். அல்லது பேசயியலா ஒருவர் பேச முயன்றால் எப்படித் தெளிவில்லாமல் இருக்குமோ, அவ்வாறு தான் முயன்றதாக சொல்வதாகவும் கொள்ளலாம். அன்பு என்னும் நறவம் மாந்தி, அன்பும் கள்ளைப்போல் மயக்கத்தை தரக்கூடியதல்லவா! இது கம்பன் வால்மீகி மேல் வைத்திருந்த அன்பை, மதிப்பை நமக்கு உணர்த்துகிறது.

    மேலும் இப்பாடலில் ஒரு கவிதைக்கான முக்கிய இலக்கண கூறு ஒன்றை எடுத்துக் காட்டியிருப்பார் கம்பன். நீக்கிவிட இயலாத நான்கு அடிகள் கொண்ட பாடல்கள் என்பான். ஒரு கவிதை என்பது சொல்ல வந்த கருத்தை மிகவும் குறைந்த சொற்களில் தெளிவாகச் சொல்லவேண்டும். அப்படிச் சொல்லும் போது ஒரு சொல்லை எடுத்தாலும் பொருள் தராது. அதுமட்டுமில்லாமல் ஒரு சொல்லை இன்னுமொரு சொல்லிட்டு மாற்றியமைக்கவும் முடியாதபடி சிறப்பான சொற்களால் அமைக்கப்பட வேண்டும். இது கம்பன் காட்டும் நெறி.

இதன்படியே இப்படலம் முழுதும் உள்ளப் பாடல்களில் பல அணிகள், பின்வரு நிலை அணிகள், தற்குறிப்பேற்ற அணி, உவமையணி, எதிர்மறை உவமையணி, ஒருபொருட் பன்மொழி, பல பொருள் ஒருசொல் என பல இலக்கண கூறுகள் நாமறிந்துணர கிடைக்கின்றன. பார்ப்போம்.

இப்படலத்தில் கோசலத்தின் வளம், மருத நில காட்சி, நெய்தல் நில காட்சி, மக்கள் செழிப்பு ஆகியவற்றைக் காட்டுகிறார் கம்பன். என்னதான் வால்மீகி பாடிய நாட்டை தான் பாடுவதாகச் சொன்னாலும் கம்பன் காட்டும் வளங்களும் ,மக்கள் பண்பாடும், காட்சிகளும், காவிரி பாய்ந்து வளம் சேர்த்த சோழ பெரு நாட்டையும், தமிழ் மக்களையும் நம்கண்முன்னே நிறுத்துகின்றன என்பதில் மாற்றமில்லை. நாமும் சோழ நாட்டினையும் காவிரியையும் தமிழ் பண்பாட்டையும் மனத்தில் கொண்டே இக்காவியத்தை இரசிப்போம்.

வரம்பெலாம் முத்தம் தத்தும் மடையெலாம் பணில மாநீர்க்
குரம்பெலாம் செம்பொன் மேதிக் குழியெலாம் கழுநீர்க் கொள்ளை
பரம்பெலாம் பவளம் சாலிப் பரப்பெலாம் அன்னம் பாங்கர்க்
கரும்பெலாம் செந்தேன் சந்தக் காவெலாம் களிவண்டு ஈட்டம்.

    வயல் வரப்புக்களில் எல்லாம் முத்துக்கள், நீர்பாயும் இடங்களிலெல்லாம் சங்கு, அமைக்கப்பட்ட கரைகளிலெல்லாம் பொன், எருமைகள் சேற்றில் படியுமல்லவா, அங்கெல்லாம் செங்கழுநீர் மலர்கள், உழப்பட்ட நிலங்களில் பவளங்கள் இருந்தனவாம், விவசாயத்திற்கு பயன் படுத்தப்படாத நிலங்களில் கூட தேன் நிறைந்து ஓடியதாம் என்று பொதுவாக நாட்டின் வளம் சொல்கிறார். இங்கு முத்து, சங்கு போன்றவை நெய்தல் நிலப் பொருட்கள். கடலும் கடல் சார்ந்த இடத்திலும் காணப்படுபவை. ஆனால் இங்கு வயல், வயல் சார்ந்த மருத நிலத்தில் இருப்பதாக காட்டுவது திணை மயக்கம். நாம் ஆற்றுப்படலத்தில் முன்பே காண்டோமல்லவா, முல்லையை குறிஞ்சியாக்கி மருதத்தை முல்லையாக்கி, இப்படி நிலத்தன்மையை மாற்றி பாய்ந்ததல்லவா ஆற்று வெள்ளம்!!! அதை இங்கும் காட்டுகிறார் கம்பர்.

ஆறுபாய் அரவம் மள்ளர் ஆலை பாய் அமலை ஆலைச்
சாறு பாய் ஓதை வேலைச் சங்கின் வாய்ப் பொங்கும் ஓசை
ஏறு பாய் தமரம் நீரில் எருமை பாய் துழனி இன்ன
மாறு மாறு ஆகி தம்மில் மயங்கும்மா மருத வேலி..

இது ஒரு அழகான மருத நிலக் காட்சி. இங்கு ஆறு பாய்வதால் வரும் ஓசை, உழவர்கள் ஆலைகளில் ஏற்படுத்தும் ஓசை, அவ்வாலைகளில் கரும்பின் சாறு பாய்வதால் வரும் ஓசை , நீர்நிலைகளில் சங்குகள் இருந்தன எனப்பார்த்தோமல்லவா அவற்றில் எழும் ஓசை, எருதுகள் தம்முள் மோதுவதாலும், நீர் நிலைகளில் பாய்வதாலும் எழும் ஓசை என இவையெல்லாம் கலந்து ஒலிக்கும் என்று மருத வளம் காட்டுகிறார். இங்கு அரவம், அமலை, ஓதை, ஓசை தமரம், துழனி என்ற பல சொற்களும் 'ஓசை' என்ற ஒரு பொருளையேக் குறித்து நிற்கின்றன. இது பொருள் பின்வருநிலை அணி. தமிழுக்குரிய சிறப்பம்சங்களில் ஒன்று இது.

தாமரைப் படுவ வண்டும் தகை வரும் திருவும் தண் தார்க்
காமுகர்ப் படுவ மாதர் கண்களும் காமன் அம்பும்
மா முகில் படுவ வாரிப் பவளமும் வயங்கு முத்தும்
நாமுதல் படுவ மெய்யும் நாம நூல் பொருளு மன்னோ.

இப்பாடலில் ‘படுவ’ என்ற சொல் மீண்டும் மீண்டும் வந்து ‘தங்குதல்’ என்ற ஒரு பொருளையே தந்தது. எனவே இது சொல்பொருட் பின்வருநிலையணி. மேகங்கள் கடலிலிருந்து முத்து, பவளம் அனைத்தையும் எடுத்துக் கொண்டு மழையை மட்டும் பொழிந்து, மற்றதை தானே வைத்துக் கொண்டதாம். அதனால் தான் மழைநீரில்லா மேகம் வெண்மையாகவும் வானம் சிவந்தும் காணப்படுகிறதோ!! அழகு. விலைமாதர் கண்களும் காமன் வில்லும் காமுகரிடம் மட்டுமே தங்கும் என்று பிரித்துக் காட்டியவர், அம்மக்கள் நாவில் உண்மையும், ஞான நூல்களின் பொருளும் தங்குவன எனவும் தெளிவுறுத்துகிறார்.

தண்டலை மயில்கள் ஆடத் தாமரை விளக்கம் தாங்கக்
கொண்டல்கள் முழவின் ஏங்கக் குவளைகண் விழித்து நோக்கத்
தெண்திரை எழினி காட்டத் தேம்பிழி மகர யாழின்
வண்டுகள் இனிது பாட மருதம்வீற் றிருக்கும் மாதோ

என்ற பாடலில் மருத நில அழகையும்

முறை அறிந்து அவாவை நீக்கி முனிவுழி முனிந்து வெஃகும்
இறை அறிந்து உயிர்க்கு நல்கும் இசை கெழு வேந்தன் காக்கப்
பொறை தவிர்ந்து உயிர்க்கும் தெய்வப் பூதலம் தன்னில் பொன்னின்
நிறை பரம் சொரிந்து வங்கம் நெடு முதுகு ஆற்றும் நெய்தல்.

நெல்மலை யல்லன நிரைவரு தரளம்
சொன்மலை யல்லன தொடுகட லமிர்தம்
நன்மலை யல்லன நதிதரு நிதியம்
பொன்மலை யல்லன மணிபடு புளினம்

    என்ற பாடல்களில் நெய்தல் நில வளத்தையும் அழகாக் காட்சிப்படுத்துகிறார் கம்பன்.

    மருத நிலத்தில் மருதம் என்ற அரசவையில் ஒரு அழகிய ஆடல் காட்சி அரங்கேறுகிறது. இடித்துக் கொண்டு மழைவரும் நேரம் மயில்கள் ஆடுமல்லவா! இதோ சோலைகளில் மயில்கள் ஆடுகின்றன. மேகங்கள் முழ்வு போல் முழங்குகின்றன. அவற்றிற்கு குவிந்த தாமரை விளக்காக நிற்கிறது. அரங்கம் என்றால் விளக்கிருக்க வேண்டுமல்லவா! மாலை நேரம் தாமரை குவிந்து விளக்காக நிற்கிறது. அதே நேரம் குவளை மலர் கண்விழித்து இவ்வாடலைப் பார்கின்றதாம். தாமரை குவியும் நேரம் குவளை மலருமல்லவா!! அவை ஆடல் காண்போராக படுகிறது கம்பனுக்கு. நீர்நிலைகளில் அலை ஆடுகிறது அது திரைச்சீலை ஆடுவதாக காண்கிறார். திரையும் அமைந்துவிட்டது. இசைவேண்டுமே. இசைக்கா பஞ்சம்! யாழிசைப் போல் வண்டுகள் பாடுகின்றனவாம். இவ்வரிய காட்சியை கண்டவாறு மருதம் வீற்றிருந்ததாம்!! கற்பனைக்குக் கம்பன் அல்லவா!!

    அடுத்து நெய்தலைக் காட்டும் பொழுது

    ஆளும் முறை அறிந்து, பேராசைக்கொள்ளாமல், கோபம் காட்டவேண்டிய இடத்தில் கோபித்து, அளவறிந்து வரி பெற்று, தம் குடிகளின் நலன் கருதும் வேந்தன் நாட்டைக் காப்பதால் , அந்நில மகள் எவ்வாறு பாவச் சுமைநீங்கி இளைப்பாறுகிறாளோ அவ்வாறு மிகுந்த செல்வங்களை கொண்டு வந்த கப்பல்கள் தங்கள் சுமைகளை இறக்கிவைத்து இளைப்பாறுவதாய்க் காட்டுகிறார். இது அழகான உவமையணி.

இங்கு

அறிவுடை வேந்தன் நெறியறிந்து கொளினே,
கோடியாத்து, நாடுபெரிது நந்தும்;

என்ற புறப்பாடல் கருதத்தக்கது.

    அப்படி செல்வங்கள் நிறைந்த நெய்தல் நிலத்தில் நெல் மலையாக குவிக்கப்படாத இடங்களிலெல்லாம் முத்துக்கள் மலைகளாக இருந்தனவாம். முத்துக் குவியல்கள் இல்லாத இடங்களில் எல்லாம் உப்பு மலையாக குவிக்கப்பட்டிருந்தனவாம். உப்பை தொடுகடல் அமிர்தம் என்றுரைப்பது அழகு, நயமிக்கது. உண்மைதானே!! அப்படி உப்புக் குவியல் இல்லாத இடங்களில் ஆற்றில் அடித்துவரப்பட்ட பொன், மணி ஆகியன குவிந்து கிடந்தனவாம். எங்கு நோக்கினும் பொன்னும் பொருளுமாகக் கிடந்த நெய்தல் வளத்தை தனித்துவமாக எடுத்துரைப்பது கம்பன் திறமன்றோ!


இயல்புடை பெயர்வன மயின்மணி யிழையின்
வெயில்புடை பெயர்வன மிளிர்முலை குழலின்
புயல்புடை பெயர்வன பொழிலவர் விழியின்
கயல்புடை பெயர்வன கடிகமழ் கழனி.

இப்பாட்டில் மயில்கள் அந்நாட்டுப் பெண்களின் சாயலைப் பெற்று திரிகின்றன எனவும், அவர்கள் அணிந்துள்ள அணிகலங்காளைப் போல் வெயில் வீசியது எனவும், அவர்களின் கூந்தல் போல் மேகங்கள் இருந்தன எனவும் அவர்களது கண்களைப் போல் மீன்கள் துள்ளின எனவும் அமைத்திருப்பதால் இது எதிர்மறை உவமையணி.


ஆலைவாய் கரும்பின் தேனும் அரி தலை பாளைத் தேனும்
சோலைவாய்க் கனியின் தேனும் தொடைஇழி இறாலின் தேனும்
மாலைவாய் உகுத்த தேனும் வரம்பிகந்தோடி வங்க
வேலைவாய் மடுப்ப உண்டு மீனெலாங் களிக்குமாதோ.

இந்தப் பாடலில் 'தேன்' என்ற ஒரு சொல் கரும்பின் சாறு, கள், பழச் சாறு, தேன் கூட்டிலிருந்து வழியும் தேன், மலர்மாலைகளிலிருந்து வடியும் தேன் என்று பல பொருள் குறித்து வருவதால் இது சொல்பின்வருநிலையணி.


துருவை மென் பிணை ஈன்ற துளக்கு இலா
வரி மருப்பு இணை வன் தலை ஏற்றை வான்
உரும் இடித்து எனத் தாக்குறும் ஒல் ஒலி
வெருவி மால் வரை சூல் மழை மின்னுமே.

    மென்மையான பெண் ஆடு ஈன்ற செம்மறி கடாகள் வலியனவாக இருந்தன எனக் காட்டுகிறார். ஆண்களின் வலிமைக்கு பெண்கள் காராணமல்லவா!! பெண்ணை வலிமைக்குறைந்தவள் என்பது தகுமோ! சிந்திக்க வைக்கிறார்.

    அடுத்து காணும் இரண்டுப் பாடல்களிலும் சேவல் சண்டை, எருது சண்டை, செம்மறி சண்டை ஆகியன நடைமுறையிலிருந்தன எனக் காட்டுகிறார் கம்பன்


பொருந்திய மகளிரோடு வதுவையிற் பொருந்துவாரும்
பருந்தொடு நிழல் சென்று என்ன இயல் இசை பயன் துய்ப்பாரும்
மருந்தினும் இனிய கேள்வி செவியுற மாந்துவாரும்
விருந்தினர் முகம் கண்டு அன்ன விழா அணிவிரும்புவாரும்.

    இந்த பாடலில் பெருத்தம் பார்த்து மணமுடித்தனர் என்பது பெறப்படுகிறது, அப்படி மணமுடித்தவர், இசைப்பயன் துய்ப்பார், இதற்கு கம்பன் காட்டும் உவமை அழகு பருந்தொடு நிழல் செல்வது போல் என்கிறார் பருந்து மேலே பறக்கும் பொழுது அதன் நிழல் மேடு பள்ளம் என்று ஏற்ற இறக்கங்களில் எல்லாம் சென்றாலும் பருந்தோடு கூடவே செல்லும் அதுப் போல் இசையமைக்கப்பட்ட இயற்றமிழ் பாடல்களின் பலனும் ஒன்று போல் மக்களைச் சென்றடையும் என்று காட்டுவது சிறப்பு. அப்படி இசை அனுபவிப்பார், அமிழ்தத்தைவிட இனிய கேள்வி செல்வம் செவிவழி அனுபவிப்பாரும், செல்வத்துள் செல்வம் செவிச் செல்வமல்லவா!! விருந்தினர் முகம் கண்டு விருந்து அளிக்க விரும்புவாரும்,

மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து.

என்பதால் விருந்தினர் முகம் பார்த்து விருந்து செய்தார்களாம்… இத்தோடு இப்பாடலின் பொருள் முடியவில்லை அடுத்த நான்கு பாடல்களிலும் கருத்து தொடர்கிறது.

கறுப்புறு மனமும் கண்ணிற் சிவப்புறு சூட்டுங் காட்டி
உறுப்புறு படையில் தாக்கி உறுபகை யின்றிச் சீறி
வெறுப் பில களிப்பின் வெம்போர் மதுகைய வீர வாழ்க்கை
மறுப்பட வாவி பேணா வாரணம் பொருத்து வாரும்.

    இந்தப்பாடலில் முன்பகை யின்றியே சினம் காட்டி , போர் செய்ய வெறுப்பில்லாத வீரம் கொண்ட சேவலை போரிடச் செய்வாரும் என்று ‘சேவல் சண்டை’ பற்றிய குறிப்பைத் தருகிறார். அடுத்தப்பாடலில் எருதுகளைச் சண்டையிடச் செய்ததையும் காட்டுகிறார்.


எருமை நாகு ஈன்ற செங்கண் ஏற்றையோடு ஏற்றை சீற்றத்து
உரும் இவை என்னதாக்கி ஊழுற நெருக்கி ஒன்றாய்
விரி இருள் இரண்டு கூறாய் வெகுண்டன அதனை நோக்கி
அரி இனம் குஞ்சி ஆர்ப்ப மஞ்சுற ஆர்க்கின்றாரும்.

இங்கு அவர்காட்டும் உவமை அழகு. இரண்டு எருதுகள் இரண்டும் ஒரே வலிமை கொண்டன. அவை மோதுவது இருள் இரண்டு கூறாக பிரிந்து தம்முள் மோதியதைப் போலிருந்தது என்கிறார். இங்கும் நாகு என்பது பெண் எருமை ஈன்ற ஆண் எருதுகள் வலிமை கொண்டன எனக்காட்டி பெண்ணினத்தின் பெருமை கூறி மகிழ்கிறார். அப்படி எருதுகளைச் சண்டையிடச் செய்து ஆரவாரம் செய்வாரும்


முள்ளரை முளரி வெள்ளி முளையிற முத்தும் பொன்னும்
தள்ளுற மணிகள் சிந்தச் சலஞ்சலம் புலம்பச் சாலில்
துள்ளிமீன் துடிப்ப ஆமை தலைபுடை சுரிப்பத் தூம்பின்
உள் வரால் ஒளிப்ப மள்ளர் உழுபகடு உரப்பு வாரும்.

    தாமரையின் முனை உடையுமாறும், முத்தும் பொன்னும் தள்ளுபடுமாறும், சங்குகள் புலம்புமாறும், மண்ணில் மீன்கள் துள்ளுமாறும் ஆமைகள் ஓட்டுக்குள் ஒடுங்குமாறு உழுபவர்கள் ஆகியோர் அந்நாட்டில் இருந்தனர் என்று இப்பாடலுடன் பொருள் முடிகிறது. இவ்வாறு ஒரு பொருள் பற்றி மூன்றிற்கும் மேலான பாடல்கள் அமைப்பது ‘குளகம்’ என்று கூறப்படும்.

    இன்னும் இப்படலத்தில் நெற் குவியலைக் குவித்து அடையாளமிட்டு பாதுகாத்தது, வறியவருக்கும் ஈந்து பின் விருந்தோடு உண்ண இல்லத்திற்கு நெற் கொண்டு சென்ற மக்கள் செயல், கரும்பை ஆலையிட்டு பிழிந்து சாறாக்கியது, இப்படி பலவற்றைக் காட்டுகிறார் கம்பர். மற்றும் எருமைகள் கன்றை நினைத்த மாத்திரத்திலேயே பால் சுரக்கும் தன்மையைக் காட்டுகிறார். அப்படி பால் வழிந்ததால் வயலில் நெற்பயிர்கள் செழித்து வளர்ந்தனவாம்


கொன்றை வேய்ங்குழற் கோவலர் முன்றிலில்
கன்று உறங்கும் குரவை கடைசியர்

என்று கொன்றையாலும் மூங்கிலாலும் குழல் செய்து இசைத்தனர் என்பதையும் காட்டுகிறார்.

மேலும் அந்நாட்டில் மக்களுக்கு

கலம் சுரக்கும் நிதியம் கணக்கு இலா
நிலம் சுரக்கும் நிறை வளம் நல் மணி
பிலம் சுரக்கும் பெறுதற்கு அரிய தம்
குலம் சுரக்கும் ஒழுக்கம் குடிக்கு எலாம்.

கப்பல்கள் நிறைந்த செல்வத்தை தரும், நிலம் நிறைந்த வளத்தைத் தரும், அதுமட்டுமின்றி சுரங்கம் தோண்டி அரிய மணிகளும் பெறப்பட்டன என்றும் காட்டுகிறார். அப்படிப்பட்ட மக்களின் குலம் அவர்களுக்கு ஒழுக்கத்தைக் கொடுத்தது என்றும் காட்டுகிறார். இப்பாடல் சுரக்கும் என்ற சொல் பல முறை வந்து ‘ இடையறாது தரும்’ என்ற ஒருபொருள் தந்ததால் சொற்பொருள் பின்வருநிலை அணி. சுரக்கும் என்று சொன்னதால் தடங்கலில்லாமல் நிறைசெல்வம் மிகுந்து இருந்ததைக் காட்டுகிறது.


இப்படி செல்வமும் ஒழுக்கமும் பெற்றதால் அங்கு


கூற்றம் இல்லையொர் குற்றம் இலாமையால்
சீற்றம் இல்லை தம் சிந்தையிற் செம்மையால்
ஆற்ற நல்லறம் அல்லது இலாமையால்
ஏற்றம் அன்றி இழித்தகவு இல்லையே

என்றும்

வண்மை இல்லை ஓர் வறுமை இன்மையால்
திண்மை இல்லை ஓர் செறுநர் இன்மையால்
உண்மை இல்லை பொய் உரை இலாமையால்
வெண்மை இல்லை பல் கேள்வி மேவலால்.

என்றும் அந்நாட்டின் சிறப்பைக் காட்டுகிறார். இங்கு சிந்தையின் செம்மையால் சினம் இல்லை என்று காட்டுவது அறிந்து மகிழத்தக்கது. சிந்தை தெளிவானால் சினம் இருக்காதல்லவா!!

இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை

என்று வள்ளுவனும் காட்டுகிறாரல்லவா!!

இப்படி 61 விருத்தப் பாடல்களில் நாட்டின் அழகை அழகு கவிகளில் காட்டிய கம்பன், மேலும், கவிதையின் இலக்கணத்தை பின்னும் பல இடங்களில் பேசுகிறார். இதோ

செவ்விய மதுரம் சேர்ந்த நல் பொருளின் சீரிய கூரிய தீம் சொல்
வவ்விய கவிஞர்

என்று மிகச் சிறப்பாக கவிதைக்கு இலக்கணம் கூறும் அழகை அடுத்து நகரப்படலத்தில் காண்போம்.

விரைவில் மீண்டும் அடுத்தப் பதிவுடன்

அன்புடன் 
உமா

Sunday, March 14, 2021

கம்பன் கவித்தேன் – பாலகாண்டம் – ஆற்றுப்படலம்

          கம்பன் தன் இராமாவதாரத்தை மூல நூலான வால்மீகியின் கதையைத் தழுவியே எழுதினாலும் பல இடங்களில், தமிழ் இலக்கிய மரபை ஒட்டியும், பண்பாட்டை ஒட்டியும் சில மாற்றங்களை புகுத்தியிருப்பார். சில இடங்களில், சற்று மாற்றியும், புதிதாக சிலவற்றைப் படைத்தும், தான் சொல்ல வந்த அறக் கருத்துக்களை  நிலைநிறுத்தும் விதமாகவும், அவற்றிற்கு வலு சேர்க்கும் வகையிலும் தனது காப்பியத்தை எடுத்துச் செல்வார்.

கம்பனின் காவியத்தில் காணப்படும் இம்மாற்றங்கள் எப்படி இக்காப்பியத்திற்கு அழகும் பொருண்மையும் கூட்டுகின்றன என்பதை படித்து அறிந்த அறிஞர்கள் சொல்வழி நாம் படித்துணர்தல் சிறப்பு. உதாரணமாக https://www.youtube.com/watch?v=oWIILIOwdTg என்ற வலையொளித்தளத்தில் சுதாசேஷையன் அவர்களின் உரை, http://www.tamilvu.org/library/nationalized/pdf/30-c.srinivasan/kambanumvalimegium.pdf என்ற தமிழ் இணைய  கல்விக் கழகத்தின் கட்டுரை போன்றவற்றை படித்தறிதல் இன்பம் பயக்கும்.

ஒரு பெருங்காப்பியம் என்றால் நாடு, நகரம், ஆறு ஆகியவற்றை பாடுதல் தமிழ் மரபு. வால்மீகி இராமாயாணத்தில் இப்படலங்கள் இல்லை. தமிழ் மரபையொட்டி ஆறு, நாடு, நகரம் ஆகியவற்றை வர்ணித்து கம்பன் தன் காவியத்தைத் துவங்குகிறார்.

ஆற்றுப்படலம்

ஒரு பெருங்காப்பியத்தின் முதல் படலம், முதல் பாடல். கவி தன் காப்பியத்தின் உட் கருத்தை, அதன் சாரத்தை இதில் சொவதாக நாம் கொள்ளலாமல்லவா. பாடலைப் பார்போம்.

ஆசலம் புரி ஐம்பொறி வாளியும்
காசலம்பு முலையவர் கண் எனும்
பூசலம்பும் நெறியின் புறம் செலாக்
கோசலம் புனை ஆற்றணி கூறுவாம்.

    குற்றங்கள் இழைக்குன்ற ஐம்பொறிகளாகிய அம்பும், அணிகலன்கள் அணிந்த மார்பகங்களைக் கொண்ட பெண்களின் கண்கள் என்னும் பூசல் அம்பும், ஒழுக்க நெறியினின்று விலகிச் சொல்லாத கோசல நாட்டினை அழகு செய்யும் ஆற்றின் அழகைக்கூறுவோம் என்று துவங்குகிறார்.

இங்கு ஒன்றை நாம் நினைவில் கொள்ளவேண்டும். கம்பன் சோழ நாட்டைச் சேர்ந்தவர். சோழ நாட்டில் தான் இக்காவியம் எழுதப்படுகிறது. கோசலத்தையோ, சரயு நதியையோ கம்பன் கண்டதாக குறிப்பு எதுவுமில்லை. எனவே கம்பன் காட்டுவது சோழ நாடே என்றும் ஆறு என்பது காவிரியே என்றும் கொள்வதில் தவறேதுமில்லை.

ஆற்றை வர்ணிக்க வந்தவர் பொறியடக்கத்தைப் பேசுகிறார் என்றால், அப்படி ஒரு அதிசிறந்த நாட்டை, மக்களை அவர் காண விழைகிறார் எனலாம்.

இங்கு ஐம்பொறிகளை ‘அம்பு’ என்று சொன்னவர், பெண்களின் கண்களை ‘பூசலம்பு’ என்கிறார். போர்த் தொழிலில் வல்ல அம்பு என்கிறார். மனிதனின் பொறிகள் நெறி பிறழ்தல், தனிமனிதனின் கட்டுப்பாட்டிற்குள் உள்ளது. ஆனால் பெண்ணின் கண்களாகிய அம்பு பிறரை, ஆண்களை வென்று தன்பாலிழுக்கும் என்பதால் அவை பூசலம்புகள்.

            தனது பொறிகளின் கட்டிலிருந்து தம்மை பாதுகாப்பதைக் காட்டிலும் பெண்களின் கண்களாகிய பொறியிலிருந்து தம்மைக் காத்தல் மிகுந்த கடினம் என்பதால், அத் தன்மையை விளக்கும் விதமாக அடைமொழியிட்டுக் கூறுகிறார்.

            கம்பனின் காவியத்தில் சிறப்பான அம்சம். தாம் விளக்க வந்ததை அழகாக சொற்களில் காட்சிப் படுத்தி, நம் கண்முன்னே விரியச் செய்யும் அழகு.

ஆறு கோசலத்தில் இருப்பதாகக் காட்டிவிட்டார். கோசலம் நமக்கு இப்பொழுது மேலிருந்து ‘பறவை காணும் காட்சி’ போல் தெரிகிறது. Bird’s eye view. 

அடுத்ததாக வானத்தில் வெண்மேகங்கள் உலவுகின்றன. அவை கடலில் நீரை உண்டு கறுத்து மேலெழும்புகின்றன. இதன் நயத்தை நாம் முன்பே கண்டோம். அடுத்து இந்த கறுத்த மேகங்கள் நகர்ந்து மலையினருகில் வந்ததும் தடுக்கப்பட்டு மழையைப் பொழிகின்றன. இப்பொழுது சற்று அருகில் காட்சித் தெரிகிறது. மழைப் பொழியும் அழகு தெரிகிறது. 

மேகங்கள் காற்றினால் நகர்ந்து மலையால் தடுக்கப்பட்டு குளிச்சியால் மலைகளில் மழையைப் பொழிவது, அறிவியல் சார்ந்த இயற்கை நிகழ்வு. கவிக் கம்பனுக்கு இக்காட்சி வேறுவிதமாக தோன்றுகிறது.


பம்பி மேகம் பரந்தது பானுவால்
நம்பன் மாதுலன் வெம்மையை நண்ணினான்
அம்பின் ஆற்றுதும் என்று அகன்குன்றின்மேல்
இம்பர் வாரி எழுந்தது போன்றதே

          நதிகள் எல்லாம் கடலில் கலப்பதால், கடல், நதிகளின் கணவன் ஆகிறது.  நதி பிறந்த இடம் மலை என்பதால், மலை' கடலுக்கு மாமனாகிவிட்டதாம்.

  சூரியனின் வெப்பத்தை உணர்ந்த கடல் மலையாகிய மாமன் வெப்பமடைந்து இருப்பான் என்று எண்ணி, மழை நீரால் குளிர்வித்ததாம்.

புள்ளி மால்வரை பொன்னென நோக்கிவான்
வெள்ளி வீழிடை வீழ்த்தெனத் தாரைகள்

இப்பொழுது இன்னும் சற்று அருகில் மழை துளிகள் மலையில் வீழ்வது தெரிகிறது. வானிலிருந்து மழை பொழிவது வெள்ளி இழைப்போல் தெரிகிறது. கம்பனின் கற்பனை விரிகிறது. பொன்மயமான இமயமலையை மேலுகலகத்திற்கு ஈர்க்கும் பொருட்டு வெள்ளி இழைகளை வானவர் வீழ்த்தினராம்!! இப்படிச் சொல்லுகிறான் கம்பன். என்னே! அழகு.

இது இயற்கை நிகழ்வின் மேல் கவி தன் கற்பனையை ஏற்றிச் சொல்வதால் தற்குறிப்பேற்ற அணி.

இங்கு லெபனீய கவிஞன் கலீல் ஜிப்ரானின் ஒரு கவிதை ஒப்பு நோக்கத் தக்கது.

Song of the Rain என்ற பாடலில் கலீல் ஜிப்ரான்


I am dotted silver threads dropped from heaven
By the gods. Nature then takes me, to adorn
Her fields and valleys.

என்று மழையின் கூற்றாகச் சொல்லியிருப்பார்.

அடடா, கம்பனைப் படித்திருப்பானோ இக்கவி. அன்றி மேன்மையான கவிகளின் எண்ணம் ஒன்றுபட்டதாய் இருக்குமோ!!

இங்கு கம்பன் ஒரு அறத்தையும் நாமறியச் சொல்லுகிறார்.


உள்ளி யுள்ள எலாமுவந்து ஈயும்அவ்
வள்ளி யோரின் வழங்கின மேகமே

ஏற்போருக்கு எது தேவை என்பதை எண்ணிப் பார்த்து தம்மிடம் உள்ளதனைத்தையும் வாரிவழங்கும் வள்ளலைப் போல் மேகம் கொடுத்ததாம். 

    ஒழுக்கத்திற்குப் பின் ஈகை இங்கு வலியுறுத்தப்படுகிறது. அதுவும் எப்படி? தேவையறிந்து தம்மிடமுள்ளதனைத்தையும் கொடுக்க வேண்டும் என்கிறார்.  இங்கு ஆண்டாளின் ‘ஆழிமழைக்கண்ணா ஒன்று நீ கைகரவேல்’ என்ற சொற்றொடற் நமக்கு நினைவிற்கு வருகிறதல்லவா!!

    அப்படி வாரி வழங்கிய மேகத்தால் வெள்ளம் பெருகுவது, தனக்கு ஒரு பழிவந்தால் உயிர்வாழா நெறி நின்று, மானம் காத்து, அறவழியில் நாட்டை ஆளும் மன்னனின் புகழ் குறையாமல் பெருகுவதைப்போலவும், தக்கவருக்கு கொடுத்த தானத்தின் பயன் வீழாது ஓங்குவதைப் போலவும் பெருகுகிறது எனக் கூறுகிறார்.

மானம் நேர்ந்து அறம் நோக்கி மனுநெறி
போன தண் குடை வேந்தன் புகழ் என
ஞானம் முன்னிய நான்மறையாளர் கைத்
தானம் என்ன தழைத்தது நீத்தமே.

    இதுவரை கடல் நீர் மேகமாகி, கறுத்து, மழையாகி மலையில் பொழிகிறது என்று காட்டிய கம்பர், இன்னும் சற்று அருகில் சென்று இப்பொழுது மழையால் உண்டான நதியின் வெள்ளத்தைப் பார்கிறார். 

     வெள்ளத்தை வர்ணிக்கும் பொழுது கம்பனுக்கு கற்பனை ஊற்றெடுக்கிறது. இக்காப்பியத்தில் இல்லாத இலக்கண கூறுகளே இல்லை என்று கூறும் படியாக தன் கற்பனையால் நிறைத்திருப்பார் கம்பர். இங்கு சிலேடையாக வர்ணித்து நதி வெள்ளத்தைக் காட்டுகிறார்.

மலையின் உச்சியில் பெய்த மழை அதன் அடிவாரத்தை அடையும் அல்லவா? அதுவும் எப்படி? மலையின் பல வளங்களையும் அடித்துக் கொண்டு எடுத்து வருகிறது. அப்ப்டியே சமவெளியில் பாய்கிறது. இது எப்படி இருக்கிறதென்று கம்பன் சிலேடையில் காட்டுகிறார்.

பெரிய தனவந்தரை உச்சி முதல் பாதம் வரைத் தழுவிய விலைமகள் அவரது பொருளையெல்லாம் கவர்ந்து கொண்டு, அவரோடு இல்லாது விலகிவிடுவர். வெள்ளமும் மலையின் உச்சி முதல் அடிவரைத் தழுவி, அதன் வளங்களையெல்லாம் அடித்துக் கொண்டு மலையை விட்டு விலகி சமவெளியில் பாய்கிறது எனவே. நதி வெள்ளம் விலைமகளை ஒத்தது என்கிறார்.


மணியும் பொன்னும் மயில் தழைப்பீலியும்
அணியும் ஆனை வெண்கோடும் அகிலும் தண்
இணை இல் ஆரமும் இன்ன கொண்டு ஏகலான்
வணிக மாக்களை ஒத்ததுஅவ் வாரியே.

    இப்பாடலில் இன்னும் சற்று அருகில் சென்று காட்டுகிறார். இப்பொழுது என்ன என்ன பொருட்கள் அடித்து வரப்படுகின்றன எனத் தெரிகிறது. முத்து, பொன், மயில் பீலி, அழகிய யானைத் தந்தங்கள், சந்தனமரம் எனப் பலபொருட்களுடன் வருவதால் வெள்ளம் வணிகரை ஒத்து இருந்ததாம். உண்மைதானே! வாணிகப் பொருட்களல்லவா இவை.

    அவ்வெள்ளத்தில் பலநிற மலர்களும் பூந்தாதுக்களும் பொன்னும் அடித்து வருவதால் வானவில்லை ஒத்தது எனக் காட்டுகிறார்.


மலை எடுத்து மரங்கள் பறித்து மாடு
இலை முதல் பொருள் யாவையும் ஏந்தலான்
அலை கடல் தலை அன்று அணை வேண்டிய
நிலையுடைக் கவி நீத்தம்அந் நீத்தமே

       இப்பாடலில் மலைகளை பெயர்த்து மரங்களை வேருடன் பறித்து பக்கத்திலுள்ள இலை போன்ற பலவற்றையும் எடுத்துக் கடலில் சேர்ப்பதால் கடலில் இராமனுக்கு உதவியாக அணைக்கட்ட வந்த வானரங்களைப் போல் ஆறு இருந்தது என்று பின்னால் நடக்கவிருக்கும் நிகழ்வை இணைத்து காட்டி பாடுகிறார் கம்பர்.

ஈக்கள் வண்டொடு மொய்ப்ப வரம்பிகந்து
ஊக்க மேமிகுந்து உள்தெளிவு இன்றியே
தேக்கு எறிந்து வருதலின்தீம் புனல்
வாக்கும் தேன்நுகர் மாக்களை மானுமே

இப்பாடலில் குடிகாரரையும் வெள்ளத்தையும் சிலேடையாக்குகிறார். மாக்கள் என்பது தெளிவாற்ற சிந்தனையுள்ளவர்கள். குடிகாரருக்கு சிந்தனைத் தெளிவிருக்காதல்லவா!

இன்னும்


சரயு என்பது தாய்முலை யன்னது இவ்
உரவு நீர்நிலத்து ஓங்கும் உயிர்க்கெலாம்

குழவிக்கு, பால் நினைந்தூட்டும் தாயைப் போல் ஆறானது வாழும் உயிர்களுக்கெல்லாம் வேண்டுவனவற்றை தானாகத் தருமாம். நீரின்றி அமையாதல்லவா உலகு!


கொடிச்சியர் இடித்த சுண்ணம் குங்குமம் கோட்டம் ஏலம்
நடுக்குறு சந்தம் சிந்தூரத்தொடு நரந்தம் நாகம்
கடுக்கை ஆர் வேங்கை கோங்கு பச்சிலை கண்டில் வெண்ணெய்
அடுக்கலின் அளிந்த செந் தேன் அகிலொடு நாறும் அன்றே

தமது சொற்களால் படம்பிடிக்கும் கருவியை நதிக்கு மிக அருகில் எடுத்துச் சொல்கிறார் கம்பர்.இப்பாடலில் ஆற்று வெள்ளத்தின் வாசத்தைக் நாமுணரக் காட்டுகிறார். 

புராணக் கதைகளை உவமையாக்கிப் பாடுவது கவி மரபே.


செறிநறுந் தயிரும் பாலும் வெண்ணெயும் சேந்த நெய்யும்
உறியோடு வாரி உண்டு குருந்தொடு மருதம் உந்தி
மறி விழி ஆயர் மாதர் வனை துகில் வாரும் நீரால்
பொறி வரி அரவின் ஆடும் புனிதனும் போலும் அன்றே.

இப்பாடலில் கண்ணனின் லீலைகளை ஆற்றின் தன்மைக்கு உவமையாக்கி கம்பர் பாடியிருப்பது நயமிக்கது.

அடுத்த பாடல்களில் வினையின் தன்மையை சிலேடையாக்கிச் சொல்வதும் அறிந்து மகிழத்தக்கது.

முல்லையைக் குறிஞ்சி ஆக்கி மருதத்தை முல்லை ஆககி
புல்லிய நெய்தல் தன்னைப் பொருஅரு மருதம் ஆக்கி
எல்லைஇல் பொருள்கள் எல்லாம் இடை தடுமாறும் நீரால்
செல்லுறு கதியில் செல்லும் வினைஎனச் சென்றது அன்றே
.

வெள்ள நீர் சிக்கிய பொருட்களை எல்லாம் தன் போக்கிலேயே அடித்துச் செல்வது, உயிர்களை தன் வயத்திற்கு இயக்கும் வினைப் போன்றதாய் இருந்ததாம்.


காத்த கால் மள்ளர் வெள்ளக் கலிப்பறை கறங்கக் கைபோய்ச்
சேர்த்த நீர்த் திவலை பொன்னும் முத்தமும் திரையின் வீசி
நீத்த மாந்தலைய தாகி நிமிர்ந்து பார் கிழிய நீண்டு
கோத்த கால் ஒன்றின் ஒன்று குலம் எனப் பிரிந்த தன்றே.

இப்படி வந்த வெள்ளம் இப்பொழுது வாய்க்கால்களில் பாய்கிறது. ஒரு வாய்க்கால் வழியாக பல கிளை வாய்க்கால்களில் பாய்வது, ஒரு குலம் பலக் கிளைகளாக பிரிவதை போன்றிருந்தது என்கிறார்.


கல்லிடைப் பிறந்து போந்து கடலிடைக் கலந்த நீத்தம்
எல்லை இல் மறைகளாலும் இயம்ப அரும் பொருள் ஈது என்னத்
தொல்லையில் ஒன்றே ஆகி துறைதொறும் பரந்த சூழ்ச்சிப்
பல் பெருஞ் சமயம் சொல்லும் பொருளும் போல் பரந்தது அன்றே. 19

இப்பாடலில் பல சமயங்கள் காட்டும் கடவுள் நெறியோடு ஒப்பிட்டு தம் சமயக் கருத்தைச் சொல்கிறார் கம்பர்.

வேதங்களாலும் விளக்க முடியாத பரம்பொருள், எவ்வாறு பல சமையங்களாலும் பலவாறு காணப்படுகிறதோ! அவ்வாறே மலையில் தோன்றிய வெள்ளம் ஆறாகி வாய்க்கால் வழியோடி ஏரி, குளம் , குட்டை என்று பல்வேறு வடிவங்களில் திகழ்கிறது எனக் காட்டுகிறார். நதி வெள்ளம் எப்படி ஒன்றுதானோ அவ்வாறே பரம் பொருளும் ஒன்றே என்பது கம்பன் காட்டுவது.


தாதுகு சோலைதோறும் சண்பகக் காடுதோறும்
போத விழ் பொய்கைதோறும் புதுமணத்தடங்கள்தோறும்
மாதவி வேலிப் பூக வனந்தொறும் வயல்கள் தோறும்
ஓதிய உடம்புதோறும் உயிர்என உலாய தன்றே

    அவ்வெள்ளம் எப்படி இருந்தது என்றால் வேதங்களால் சொல்லப்பட்ட, உலகின் பல்வேறு உடல்களின் உள்ளும் இருக்கும் ஒரே உயிர் போல், சோலை, செண்பகக் காடு, பொய்கை, தடாகம், வயல்கள் ஆகிய எல்லாவற்றிலும் இருந்தது ஒரே வெள்ள நீர் என்று காட்டுகிறார்.

    பொதுவாக தெரிந்த பொருளை உவமையாக்கி தெரியாததை விளக்குவது உவமையணி. இங்கு காணா பொருளை உவமையாக்கி காட்டுவதன் மூலம் காட்டவந்ததையும் காணாப் பொருளையும் நாமுணரத்தருகிறார் கம்பர்.

    இப்படி கடலில் இருந்து நீர் மேகமாகி மலையில் பொழிந்து, குறிஞ்சி மலையிலிருந்து அருவியாக வீழ்ந்து, ஆறாக முல்லையில் பாய்ந்து மருத நில வாய்க்காலில் நுழைந்து, ஏரி, குளம் குட்டை என்று நிறைந்து பின் மீண்டும் நெய்தல் நிலத்தில் கடலை  அடையும் வெள்ளத்தை தன் சொல்லென்ற கருவியால் காணொளிக் காட்சி போல் நம் கண்முன்னே காட்சிப்படுத்தும் கம்பனின் திறம் அறிந்து மகிழத்தக்கது.

    இப்படலத்தில் ஒழுக்கம், ஈகை, தானம் பொன்ற அறங்களைப் பேசிய கம்பன், விலைமாதர், குடிகாரர் போன்றோரின் இழிநிலையையும் காட்டி மக்கள் வாழ்விற்கு நன்னெறியயைக் காட்டுகிறார். சமயங்களுக்குள் பேதம் பார்ப்பது பேதைமை என்பதையும் காட்டிச் செல்கிறார். இத்தனையும் கலிவிருத்தம் ஆசிரிய விருத்தம் போன்ற பா வகைகளும், உவமை, சிலேடை தற்குறிப்பேற்ற அணிகளும் கொண்ட தமிழின் சிறந்த இலக்கண கட்டுக்குள் நிறைத்து சொல்கிறார். கம்பனின் சொல் பொருள் அழகை இன்னும் இரசிப்போம்.

     அடுத்தப் பகுதியில் நாட்டுப்படலம். இப்படலம், நாட்டின் நிலவளம் , மக்கள் அவர்களின் பண்பு நலன், வாழ்வியல் நெறிகள், வழக்கங்கள், செல்வச் செழிப்பு என பலவற்றையும் காட்டக் கூடியது. அறிவோம் சுவைப்போம்..



அன்புடன்
உமா

Sunday, February 28, 2021

‘கம்பன் கவித்தேன்’ – பாயிரம் 3 -அவையடக்கம்

இப்பகுதியின் ஆறு பாடல்களும் தனது நூலைப் பற்றி மிகுந்த அவையடக்கத்துடன் கம்பன் நமக்கு சொல்லும் செய்தி
.
ஓசை பெற்று உயர் பால் கடல் உற்று ஒரு
பூசை முற்றவும் நக்குபு புக்கு என
ஆசை பற்றி அறையல் உற்றேன்; மற்று இக்
காசு இல் கொற்றத்து இராமன் கதை அரோ.

முதல் பாடலில், இக்கதையை தான் எதற்காக இயற்றினேன் என்று சொல்லுகிறார் கம்பர். ‘ஆசை பற்றி அறையலுற்றேன்’. அறைதல் என்றால் சொல்லுதல். ஆற்றல் காரணமாக அல்ல வெறும் ஆசையினாலேயே எழுதுகிறேன் என்கிறார் கம்பர்.

எதை எழுதினார் என்றால் ‘காசு இல் கொற்றத்து இராமன் கதை’. குற்றமற்ற இராமன் கதையை ஆசை மட்டுமே காரணமாக எழுதுகிறேன் என்று சொன்னவர் அதற்கு ஒரு அழகான உவமையைச் சொல்லுகிறார். இது கம்பனை சிறிதேனும் படித்தவர் அறிந்த பாடல் தான். ஒரு பூனை, ஆழ்ந்து அகன்ற ஒரு பாற்கடலை தன் நாவால் நக்கியே குடித்து விடமுடியும் என்று நினைத்து பாற்கடலை அடைந்ததைப் போல் இப்பெருங்காவியத்தை நான் சொல்லத் துணிந்தேன் என்கிறார்.

இங்கு உவமையாவது பூனையின் முயற்சி. பூனை உவமையானால். பூனையால் எப்படி முடியாதோ அப்படி முடியாத காரியம் இது என்பது போல் ஆகிவிடும். ஆயின்

பூனையால் பாற்கலை குடித்து விட முடியாது தான். என்றாலும் பேராசைக் காரணமாக நக்கியே குடிக்க முயல்கிறது. அதுபோல் குற்றமற்ற இராமன் பெருமையையும் யாராலும் சொல்லுவிட முடியாது. என்றாலும் ஆசை காரணமாக நான் சொல்லத் துணிந்தேன் என்கிறார்.

இப்படி இக்காவியம் முழுவதும் இருக்கும் கம்பனின் உவமைகள் தனிச் சிறப்பு வாய்ந்தவை. இக்காலத்தில் கம்பனை எடுத்தாளாத படைப்பாளிகளே இல்லை எனலாம்.

அடுத்தப் பாடல் இன்னும் அழகு.

நொய்தின் நொய்ய சொல் நூற்கல் உற்றேன்: எனை?
வைத வைவின் மராமரம் ஏழ் தொளை
எய்த எய்தவற்கு எய்திய மாக்கதை
செய்த செய் தவன் சொல் நின்ற தேயத்தே.

கவிச்சக்ரவர்த்தி’ என்றும் ‘கம்பர் கவியே கவி’ என்றும் புகழப்படும் கம்பன் தன் கவிக்கு கொடுத்த அடைமொழி என்னதெரியுமா? ‘நொய்தின் நொய்ய சொல்’ ‘நொய்ய சொல்’ என்பது கருத்தாழமற்ற வெற்றுச் சொற்கள் என பொருள் படும்.

இன்றைய படைப்பாளிகளை எண்ணிப் பாருங்கள். பணமும் பதவியும் இருந்துவிட்டால் வெட்கமின்றி புத்தகம் வெளியிடுகிறார்கள். சற்றேனும் சொந்த கற்பனையோ, கருத்தோ இருப்பதில்லை. ஆயின் தற்புகழ்ச்சி மட்டும் புகைப்படத்துடன் பெரியதாய் இருக்கும். வெட்கம்.

ஆனால் மொழியின் ஆழத்தையும் கற்பனையின் உச்சத்தையும் தொட்ட கம்பன் தன் கவியை நொய்தின் நொய்ய சொல்’ என்கிறான். ஆனால் இப்பாடலிலேயே அவனது புலமையை, சொல் ஆளுமையை நம்மால் உணரமுடியும்.

வைத - பெரியோர்கள் சினத்தில் சாபமிட்டுச் சொல்லிய

வைவின் வசைச்சொல்

மராமரம் ஏழ் தொளை எய்த – ஏழு மரங்கள் தொளைப் படுமாறு 

எய்தவற்கு – அப்படி அம்பை எய்தியவருக்கு -செலுத்திவருக்கு

எய்திய - அமைந்த

மாக்கதை செய்த – பெருங்கதையை இயற்றிய

செய்தவன்- செய்த தவத்தையுடையவன் இங்கு வால்மீகியை குறிக்கிறது

இப்படி வைத வைவின், எய்த எய்தவற்கு, செய்த செய்தவம் என்று சொல்லோடும் பொருளோடும் விளையாடிய கவி தன் சொல்லை ‘நொய்தின் நொய்ய’ என்றானே! என்னே! அவன் எளிமை!!

கருத்துக்கு வருவோம்.

இப்பாடலில் கம்பர் தான் வால்மீகியின் அடியொற்றியே இக்கதையை எழுதியதாக நமக்குத் தெரிவிக்கிறார்.

இங்கும் ஒரு அருமையான உவமையைக் காட்டுகிறார். பெரியவர்கள் சினந்து சாபமிட்டுச் சொல்லும் ஒரு சொல் எவ்வாறு ஏழுதலைமுறையினரைத் தாக்குமோ! அவ்வாறு ஒரே அம்பு எய்தி மிகப்பெரிய ஏழு மரங்கள் ஒன்றாகத் துளைப்படுமாறு செய்த இராமனது கதையை, தான் செய்த தவத்தின் காரணமாக எழுதும் பேறு பெற்றவரான வால்மீகியின் சொல்லை அடிப்படையாகக் கொண்டே நான் இக்காவியத்தை எழுதினேன் என்கிறார். செய்தவத்தான் என்று வால்மீகியைக் குறிப்பிடுகின்றார்.

கம்பராமாயாணத்தின் சிறப்பே அது காட்டும் வாழ்வியல் நெறிகள் என்பதை முன்பே கண்டோம். இங்கு மிக முக்கியமான ஒரு செய்தியை நமக்குச் சொல்கிறார் கம்பர். பெரியவர்கள் சினத்து சொல்லின் அது நம் தலைமுறைகள் ஏழினையும் தாக்கும் என்பது தான் அது. எனவே பெரிய தவமுடையவர், முன்னோர்கள் சினமுறுமாறு நாம் நடக்கக் கூடாது. இது அன்றும் இன்றும் என்றும் கடைபிடிக்கவேண்டிய நெறி.

திருப்பாவையில் ஆண்டாளும் ‘செய்யாதனச் செய்யோம்’ என்று சொல்லவில்லையா!

வள்ளுவனும் பெரியாரைப் பிழையாமை என்ற அதிகாரத்தில்

இறந்துஅமைந்த சார்புஉடையர் ஆயினும் உய்யார்
சிறந்துஅமைந்த சீரார் செறின்

எவ்வளவுதான் பெருமையும் புகழும் நட்பும் உடையவராயினும், பெரிய தவமுடையவர் அவர்களை வெகுண்டால் உய்ய மாட்டார்கள் என்று சொல்லவில்லயா?

மனத்தில் கொள்வோம்.

அடுத்த பாடல்

வையம் என்னை இகழவும் மாசு எனக்கு
எய்தவும் இது இயம்புவது யாது? எனில்
பொய் இல் கேள்விப் புலமையினோர் புகல்
தெய்வ மாக் கவி மாட்சி தெரிக்கவே.

வையம் என்றால் உலகம். இங்கு கற்றறிந்த பெரியோரை குறித்தது. கற்றறிந்தவர் என்னை இகழுமாறும் , குற்றம் அல்லது ஏளனத்திற்கு தான் ஆளாகுமாறும் இக்கதையை நான் ஏன் இயம்புகிறேன் என்றால் ‘ பொய் இல் கேள்வி புலவர் தெய்வத் தன்மையால் சொல்லிய கவியின் பெருமைச் சொல்லும் அவாவினாலே என்கிறார். அக்கவியில் உள்ள ஆழ்ந்த கருத்துக்களைச் சொல்லவேண்டும் என்பதாலேயே.. தமிழில் வள்ளுவரை ‘பொய்யாமொழிப் புலவன்’ என்கிறோமல்லவா. அவ்வாறே வடமொழியில் வசிட்டர், வால்மீகி போன்றோரை பொய் இல் கேள்வி புலவர் என்பர். தெய்வ அருள் இருந்தால் மட்டுமே ஆழ்ந்த அக்கவிகள் சாத்தியம் என்பதால் தெய்வ மாக் கவி என்கிறார்.

துறை அடுத்த விருத்தத் தொகைக் கவிக்கு
உறை அடுத்த செவிகளுக்கு ஓதில் யாழ்
நறை அடுத்த அசுண நல் மாச் செவிப்
பறை அடுத்தது போலும் என் பா அரோ.

அடுத்தப் பாடலில் ‘அசுணம்’ என்ற ஒரு விலங்கைப் பற்றிய குறிப்பைத் தருகிறார். மா என்றால் விலங்கு அசுண மா என்பது மிகவும் ஆச்சரியமான விலங்காகத் தெரிகிறது. அது மென்மையான யாழ் இசையைக் கேட்டால் தன் இடத்தை விட்டு வெளிவருமாம். இரசிக்குமாம். அதுவே சற்று இறைந்து ஒலிக்கக் கூடிய பறை போன்ற இசைச் கேட்டால் இறந்தே விடுமாம்.

இங்கு அவ்விலங்கின் இயல்பை உவமையாக்கி செறிவுற்ற நல்ல விருத்தப் பாக்களை கேட்ட செவிகளுக்கு, எனது பாக்களை கேட்கும் பொழுது அசுண மாவின் காதில் பறை கேட்டது போல் இருக்கும் என்கிறார்.

இப்படியெல்லம் தன் கவியை மிக எளிமையானது என்று சொன்னவர் அடுத்த இரண்டு பாடல்களில் பிழையிருப்பின் பொறுத்தருள வேண்டும் என்று, இயல், இசை, நாடகம் என்றமைந்த முத்தமிழிலும் முறையாக கற்றுணர்ந்த சிறந்த பெரியோரை வணங்கி கேட்பார் போல் எழுதுகின்றார்.

முத்தமிழ்த் துறையின் முறை போகிய
உத்தமக் கவிகட்கு ஒன்று உணர்த்துவன்;
பித்தர் சொன்னவும் பேதையர் சொன்னவும்
பத்தர் சொன்னவும் பன்னப் பெறுபவோ?

பித்தர் பிதற்றிய சொற்களையும், அறிவற்ற பேதையர் சொன்ன சொற்களையும் மேலும் பக்தியின் மேலீட்டால் பக்தர் சொன்ன சொல்லையும் பெரிதாக எண்ணி ஆராய்வதுண்டோ அது போல் எங்கவியையும் நீவீர் ஏற்க வேண்டும் என்று சொல்கிறார்.


அறையும் ஆடு அரங்கும் மடப் பிள்ளைகள்
தறையில் கீறிடில் தச்சரும் காய்வரோ?
இறையும் ஞானம் இலாத என் புன் கவி
முறையின் நூல் உணர்ந்தாரும் முனிவரோ?

சிறு பிள்ளைகள் கற்பனையில் ஆடலரங்கும் அறையும் அமைத்து தரையில் கோடு கிழித்து கற்பனை வீடுகட்டி விளையாடினால், சிற்பி அல்லது இக்காலத்தில் கட்டிடத்துறையில் வல்லுனர்கள் என்று வைத்துக் கொள்ளலாம், அது தவறு என்று காய்வரோ? மாட்டர்கள் அல்லவா! அவ்வாறே, சிறிதும் ஞானமில்லாத என் புன் கவிகளை முறையாக நூல் உணர்ந்த பெரியோர் தவறாக கொள்வரோ! கொள்ளக் கூடாது என்று கவி கூறுகிறார்.

மடமை அல்லது அறியாமை உடைய சிறு குழந்தைகள் அவ்வாறு கற்பனையில் வீடு கட்டி விளையாடுதல் அவர்களது சிறப்பையே காட்டுகிறது. இது மனத்தால் இரசிக்க வேண்டியது. அறிவால் ஆராய வேண்டியதல்ல. எனவே உணர்வு பூர்வமான ஒருவிஷயத்தை அறிவு பூர்வமாக அணுகலாகாது என்று சொல்வதாயும் இதைக் கொள்ளலாம்.

இப்படி பல உவமைகளால் தன் காப்பியத்தை அறிமுகபடுத்திய கவி, இந்நூலிற்கு மூல நூல் எது என்பதை இப்பாடலில் சொல்கிறார்.

தேவ பாடையின் இக் கதை செய்தவர்
மூவர் ஆனவர் தம் உளும் முந்திய
நாவினார் உரையின்படி நான் தமிழ்ப்
பாவினால் இது உணர்த்திய பண்பு. அரோ.

வடமொழியில் இராம கதையை செய்தவர் மூவர். வான்மீகி, வசிட்டர், போதாயனார். இவர்களுள் முன்னவராகிய வான்மீகியின் உரைப் படியே தான் தமிழ்ப் பாவினால் இக்காவியத்தைச் செய்துள்ளேன் என்று நூல் வரலாறு அறிவிக்கிறார். முன்பே, செய் தவன் சொல் நின்ற தேயத்தே’ என்று சொன்னாரல்லவா!

அடுத்து

இக்காப்பியம் எழுதபட்ட இடத்தை பதிவு செய்கிறார்.

நடையில் நின்று உயர் நாயகன் தோற்றத்தின்
இடை நிகழ்ந்த இராம அவதாரப் பேர்த்
தொடை நிரம்பிய தோம் அறு மாக்கதை
சடையன் வெண்ணெய் நல்லூர் வயின் தந்ததே

ஒழுக்கத்தில் நின்று உயர்ந்த திருமாலின் அவதாரங்களின் ஒன்றான இராமாவதாரத்தைச் சொல்லும், செய்யுள்களால் ஆன குற்றமற்ற சிறந்த இக்காப்பியம் சடையப்பரின் திருவெண்ணெய் நல்லூரில் இயற்றப்பட்டது என்பது கருத்து.

இங்கு நடையில் நின்றுயர் நாயகன் என்று சொன்னதற்கொப்ப காப்பியம் முழுதும் இராமனின் குணநலனை பல இடங்களில் சிறப்பாக காட்டியிருப்பார். முக்கியமாக தமிழ் பண்பாட்டிற்கொப்ப காட்டியிருப்பார். இதற்காகவே வான்மீகியிடமிருந்தும் மாறுபடும் சில இடங்களும் உண்டு.

உதாரணமாக அகலிகை கல்லாக இருந்த பொழுது இராமனின் கால் பட்டு உருபெற்றதாக வால்மீகத்தில் இருக்கும் அதுவே கம்பன் அமைக்கும் போது இராமனின் கால் துகள் பட்டதாக காட்டுவார். இவ்வாறு பல இடங்களில் தமிழ் பண்பையும் ஒழுக்கத்தையும் காட்டி நாம் இன்றும் கற்க வேண்டிய பல விஷயங்களை பாடியிருப்பார்.

கம்பரின் தமிழையும் தமிழரின் பண்பையும் கம்பனின் கவிமூலம் கற்போம். அடுத்த பதிவில் கம்பராமாயண நூலுக்குள் நுழைவோம். ஒவ்வொரு படலத்திலுமுள்ள கருத்தை, நயமிக்க சில கவிதைகளை சிந்தித்து மகிழ்வோம்.


அன்புடன்
உமா



Saturday, February 27, 2021

‘கம்பன் கவித்தேன்’ – பாயிரம் 2- கடவுள் வாழ்த்து - தொடர்ச்சி

வான்நின்று இழிந்து, வரம்பு இகந்த
மா பூதத்தின் வைப்பு எங்கும்,
ஊனும் உயிரும் உணர்வும்போல்,
உள்ளும் புறத்தும் உளன் என்ப -
கூனும் சிறிய கோத்தாயும்
கொடுமை இழப்ப, கோல் துறந்து,
கானும் கடலும் கடந்து, இமையோர்
இடுக்கண் தீர்த்த கழல் வேந்தன்.

இப்பாடல் பாயிரப் பகுதியில் அமையவில்லை என்றாலும், அயோத்தியா காண்டத்தில் அமைந்த கடவுள் வாழ்த்துப் பகுதி என்பதால், ‘இறை’ கொள்கையை கம்பன் எவ்வாறு அழகாக எடுத்துச் சொல்கிறான் என்பதை அறியும் விதமாக இப்பகுதியில் இதனை நாம் சிந்திப்போம்.

அயோத்தியா காண்டத்தில் தான் இராமாயணத்தின் முக்கிய முதல் திருப்பம் இடம்பெறுகிறது. கூனியின் சூழ்ச்சியும் இராமன் கானேகுதலும் இக்காண்டத்தில் நடைப்பெறுகிறது. 

கிட்டத்தட்ட இராமாயணத்தின் சுருக்கமாக இப்பாடல் அமைந்திருக்கிறது. கூனியும், ‘கூனும்’ என்பது ஆகுபெயர்,  சிறிய கோத்தாயும் செய்த கொடுமையினால் கோல் துறந்து, கானும் கடலும் கடந்து அமரர் இடர் தீர்த்து வீரக் கழலணிந்த வேந்தன் என்று இராமாயணக் கதை இதில்  சொல்லப்பட்டிருப்பது அழகு.

இங்கு ‘கோல் துறந்து’ என்று கம்பன் சொல்லியிருப்பதும் அறிந்து மகிழத்தக்கது. அவன் பரம் பொருள். அவனே அனைத்துமாய் இருப்பவன். அவனே உலகை ஆள்பவன். அவன் அரசாட்சியை இழத்தல் என்பது சரியாகுமா? அவதார நோக்கம் நிறைவேறவே அரசாட்சி அவனால் துறக்கப்பட்டது என்பதைச் சொல்லும் விதமாக ‘கோன் துறந்து’ என்று கூறியிருப்பார் கம்பன்.

இப்பாடலின் முதல் நான்கு வரிகள் இறைவனின் இயல்பை அருமையாக எடுத்தியம்புகின்றன. வானின்று இழிந்து என்பது கடவுள் தம்நிலையிலிருந்து இறங்கி வந்து, எல்லையில்லா ஐம்பெரும் பூதங்களாலான இவ்வுலகம் முழுவதும்

ஊனும் உயிரும் உணர்வும்போல்,
உள்ளும் புறத்தும் உளன் என்ப -

ஊன் என்றால் உடல். இறைவன் உடம்பில் உயிர் போல உள்ளும், உடலுக்கு உணர்வைப் போல் புறத்தேயும் இருப்பவன்.

அப்படிப்பட்ட இறைவனே!

கூன் கொண்ட உடலை உடைய கூனியும்,சிறிய கோத்தாயாகிய கைகேயியும் செய்த கொடுமையினால் கோல் துறந்து, கான் கடந்து, இமையோர் இடுக்கன் தீர்த்தவனாகிய இராமனாக அவதரித்தவன். என்கிறார். கம்பன் இக்காவியத்திற்கு இட்ட பெயரே ‘இராமாவதாரம்’ தானே!

மேலும் இறைவனின் தன்மையை ஆரண்ய காண்டத்தின் கடவுள் வாழ்த்தில்

பேதியாது நிமிர் பேத உருவம் பிறழ்கிலா
ஓதி ஓதி உணருந்தொறும் உணர்ச்சி உதவும்
வேதம் வேதியர் விரிஞ்சன்முதலோர் தெரிகிலா
ஆதி நாதர் அவர் எம் அறிவினுக்கு அறிவு அரோ.

பேதம் என்றால் வேறுபாடு, மாற்றம், தனது உயர்ந்த நிலையிலிருந்து வேறுபடாமல், தன்னிலிருந்து தோன்றும் உருவங்களிலிருந்தும் தான் வேறுபடாமலும், மீண்டும் மீண்டும் ஆராய்ந்து உணரும் போது மெய்யறிவைத் தரும், வேதமும் அதை ஓதும் அந்தணரும், பிரமனும் அறிந்து கொள்ள இயலாத முழு முதற்கடவுள், அவர் நம் சிற்றறிவுக்கு அறியும் பொருளாகவும் உள்ளார். எனவும்

கிட்கிந்தா காண்டத்தில்

மூன்று உரு எனக் குணம்
மும்மை ஆம் முதல்,
தோன்று உரு எவையும்,
அம் முதலைச் சொல்லுதற்கு
ஏன்று உரு அமைந்தவும்,
இடையில் நின்றவும்,
சான்றவர் உணர்வினுக்கு
உணர்வும், ஆயினான்

சிவன், விஷ்னு பிரமன் என்று மூன்று உருவும், சாத்வீகம், இராஜசம், தாமசம் என்ற மூன்று குணஙகளும் கொண்டவனாய் உலகில் தோன்றிய அனைத்து தத்துவங்களாயும், அவனை அறிந்து கொள்ளும் வகையில் உலகில் உருவங்களாயும் அவ்வுருவில் நின்ற உயிராகவும், ஞானிகளால் உணர்ந்து கொள்ளும் படியாகவும் இருப்பவன் என்றும் காட்டுகிறார்

சைவ இலக்கியமாகிய சிவபுரானத்திலும் மாணிக்கவாசகர்

நிலம் தன்மேல் வந்து அருளி நீள்கழல்கள் காட்டி,
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் ⁠
தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே
என்றும்
கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தில் ⁠
நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண் உணர்வே

எனவும் பாடியிருக்கிறாரே!! 

அடுத்து சுந்தர காண்டத்தில்
அலங்கலில் தோன்றும் பொய்ம்மை
அரவு எனப் பூதம் ஐந்தும்
விலங்கிய விகாரப் பாட்டின்
வேறுபாடு உற்ற வீக்கம்
கலங்குவது எவரைக் கண்டால், ‘
அவர் என்ப, கைவில் ஏந்தி
இலங்கையில் பொருதார் அன்றே,
மறைகளுக்கு இறுதி ஆவார்!

அலங்கலில் தோன்றும் பொய்மை அரவு, இருளில் மாலையானது பாம்பென தோற்றம் அளிப்பது போல் ஐம்பூதங்கள் இணைந்து வேறுவேறாக நின்ற பன்மைத் தோற்றம் யாரைக்கண்டால் மறையுமோ அவரே வேதங்களுக்கெல்லாம் இறுதியாக இருப்பவர், அவரே கையில் வில்லேந்தி இலங்கையில் போர் புரிந்தார் என்கிறார். இருளில் பூமாலையானது பாம்பாக தோற்றம் அளித்தாலும் வெளிச்சம் வந்ததும் அது பூமாலைதான் என்பது புலப்படும் அதுபோல் மெய்ஞானம் வந்தால் இயற்கையின் பல்வேறு உருவங்களும் இறைவனே என்ற தெளிவு பிறக்கும். அந்த மெய்ஞானமாக விளங்குபவரே கடவுள் எனக் காட்டுகிறார். இங்கும் அக்கடவுளே இராமனாய் வந்தார் எனக் காட்டும் விதமாய், அவரே இலங்கையில் பொருதார் எனச் சொல்லுகிறார்.

பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி
மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே

அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே

என்று எல்லாமாய் நிற்கும் பரம் பொருளைப் மாணிக்கவாசகரும் பாடவில்லையா!

இப்படி மறைகளுக்கு, வேதங்களுக்கெல்லாம் இறுதிப் பொருளாய் விளங்கக்கூடிய இறைவனின் தன்மையை மிக அருமையாக காட்டிய கம்பன் யுத்த காண்டத்தின் வாழ்த்தில் முத்தாய்ப்பாக

ஒன்றே என்னின் ஒன்றே ஆம்,
பல என்று உரைக்கின் பலவே ஆம்,
அன்றே என்னின் அன்றேயாம்,
ஆமே என்னின் ஆமே ஆம்,
இன்றே என்னின் இன்றேயாம்,
உளது என்று உரைக்கில் உளதேயாம்,
நன்றே நம்பி குடிவாழ்க்கை!
நமக்கு இங்கு என்னோ! பிழைப்பு? அம்மா!

ஒன்றுதான் என்றால் பரம்பொருள் ஒன்றுதான். பல என்று சொன்னாலும், ஐம்பூதங்காளாலான பல பொருளாகவும் அவற்றின் உள்ளுறு உயிராகவும் உணர்வாகவும் பலவாக இருப்பதும் அவனே! 
உலக பொருட்களின், ஞாயிறு, திங்கள் போல், இவற்றின் தன்மையைப் போல் பன்மடங்கு வாய்த்தவன் எனக் கூறி 'ஆம்' என்று காட்டினாலும், 
இல்லை, இவை அவன் தன்மையின் ஒருத்துளியே என்பதால் 'இல்லை' என்றாலும் அவ்வாறே. 
'உளது' என்று காடடினால் 'உளதாயும்' இருக்கக்கூடிய இறைவனின் நிலை மிகப் பெரியது அதை உணர்ந்து உய்வது எவ்வாறு என்று கூறும் கம்பன், அப்பரம் பொருளே இராமனாய் இறங்கி வந்து நாம் உய்ய வழிகாட்டுகிறான் என்பதை கடவுள் வாழ்த்து பகுதியிலும் நூலின் பல இடங்களில் அனுமன் வாயிலாகவும் மண்டோதரி வாயிலாகவும் கூறுகிறார்.

இப்படிப்பட்ட இராமனின் அவதாரப் பெருமையை, கம்பன், தான் 'ஆசைபற்றி அறையலுற்றதாக' அவையடக்கத்தில் கூறும் அழகை அடுத்தப் பகுதியில் சிந்திப்போம்.


அன்புடன்
உமா