Friday, February 26, 2021

கம்பன் கவித்தேன் – பாயிரம் 1

'பாயிரம்' என்பது நூலைப் பற்றி, நூலில் பயின்று வரும் பொருள், யாரால், எங்கு, எதற்காக எழுதப்பட்டது என்பதைப் பற்றிக் கூறுவது. பொதுவாக, ஒரு நூல் எவ்வாறு அமைய வேண்டும் என்று சொல்வது பொதுப் பாயிரம். குறிப்பிட்ட நூல் எவ்வாறு அமைந்துள்ளது எனச் சொல்வது சிறப்புப் பாயிரம்.

'பதிகம்' என்றும் இதை சொல்வதுண்டு. பதிற்றுப்பத்து போன்ற சங்க இலக்கியங்களில் ஒவ்வொரு தொகுதியிலும் சொல்லப்பட்ட கருத்துக்களை தொகுத்து கூறுவதாக 'பதிகம்' அமைந்திருக்கும்.

இக்காலத்தில் 'முன்னுரை' என்று வழங்கப்படுவது நாமனைவரும் அறிந்ததே. இதுவும் பாயிரமே! என்றாலும் இன்றைய முன்னுரை என்பது நூலாசிரியர் புகழ் பாடுவதாய் மாறுபட்டுவிட்டது.

பாயிரத்தை நூலாசிரியரே எழுதுவதும் உண்டு, பிறரால் எழுதப்படுவதுவுமுண்டு. சங்க இலக்கியங்களில் இவை பிறரால், பிற்காலத்தில் எழுதப்பட்டு சேர்ப்பிக்கப்பட்டது. திருக்குறளில் வள்ளுவர் தாமே பாயிரம் எழுதியிருப்பார். பாயிரவியல் என்று ஒரு இயலாகவே அமைத்திருப்பார். கடவுள் வாழ்த்து, வான் சிறப்பு, நீத்தார் பெருமை, அறன் வலியுறுத்தல் என்ற நான்கு அதிகாரங்கள் பாயிரவியலில் அமைந்திருக்கும். நினைத்த காரியம் நன்கு நிறைவேற ‘கடவுள் வாழ்த்துடன்’ துவங்குவது மரபு. அடுத்து, தான் சொல்லவந்த அறம், பொருள் இன்பம் முதலியன தழைப்பதற்கு ஆதாரமாய் இருப்பது மழை என்பதால் ‘வான் சிறப்பு’ பாடினார்.

நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு

என்பது வள்ளுவன் வாக்கல்லவா! பின் அவ்வறம், ஆகியவற்றை நாம் அறியக் காட்டும் நீத்தாரின், துறவிகளின் பெருமை கூறினார். பின் வீடுவேற்றிற்கு ஆதாரமான அறன் பற்றி பாடி பாயிரம் பகுதியை நிறைவு செய்திருப்பார்.

கம்பராமாயணத்திலும் பாயிரமாக கடவுள் வாழ்த்து, அவையடக்கம், நூல் வரலாறு, காவியம் பிறந்த களம் ஆகிய பகுதிகள் அமைந்துள்ளன. இது தற்சிறப்பு பாயிரம்.

கம்பராமாயணத்தின் 'கடவுள் வாழ்த்து' ஏற்புடை கடவுள் வாழ்த்து எனப்படும். எதைப்பற்றி எழுதுகிறோமோ அவ்விஷயத்திற்கான கடவுளை வாழ்த்தி பாடுவது, ஏற்புடை வாழ்த்து. கவி தன் விருப்ப தெய்வத்தை வாழ்த்துதல் வழிபடு கடவுள் வாழ்த்து.

இப்படி, ஒரு நூல் எவ்வாறு அமைய வேண்டும் என்பதற்கு சிறப்பாக இலக்கணங்கள் இருப்பது தமிழின் சிறப்பு. பல்லாயிரம் ஆண்டுகளாக நிலைத்து, தமிழ் செம்மொழியாய் அமைய இக்கட்டமைப்புகள் முக்கியமான காரணம். இன்றைய நிலையில் இவற்றை அறிவார் மிகச் சிலரே என்பது வருத்தமான விஷயம்.

கடவுள் வாழ்த்து – பாயிரம் - பாலகாண்டம்

கம்பன், பாயிரப் பகுதியிலும் மற்றும் ஒவ்வொரு காண்டத்தின் துவக்கத்திலும் 'கடவுள் வாழ்த்து' அமைத்திருப்பார்.

உலகம் யாவையும் தாம் உள ஆக்கலும்
நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையார் அவர்
தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே

சித் குணத்தர் தெரிவு அரும் நல் நிலை
எற்கு உணர்த்த அரிது எண்ணிய மூன்றனுள்
முன் குணத்தவரே முதலோர் அவர்
நல் குணக் கடல் ஆடுதல் நன்று! அரோ.

ஆதி அந்தம் அரி என யாவையும்
ஓதினார் அலகு இல்லன உள்ளன
வேதம் என்பன மெய் நெறி நன்மையன்
பாதம் அல்லது பற்றலர் பற்று இலார்.

கம்பன் கடவுள் வாழ்த்துப் பகுதியில் மூன்று பாக்களை செய்துள்ளார்.முதல் பாடல், தமிழறிந்தவர் பலருக்கும் பரிச்சயமானது. இப்பாடலில் ஆக்கல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருள்தல் என்ற ஐந்து தொழிலையும் விளையாட்டாகச் செய்யக் கூடியவர், அவரே இறைவன். அன்னவர்க்கே சரண் நாங்கள் என்று ஒன்றேயான பரம் பொருளை வணங்கி இருப்பார்.

அடுத்தப் பாடலில் சித் என்றால் அறிவு, மெய்யறிவாக விளங்கக் கூடியவரின், யாராலும் உணர்ந்துக் கொள்ள முடியாத நிலையை என்னால் உணர்த்தல் அரிது. என்றாலும் முன்னோர்கள் கூறிய மூன்று குணங்களாகிய சத்துவம். இராஜசம், தாமசம் ஆகிய குணங்களில் முதல் குணமான சாத்வீக குணம் கொண்டவரின் குணக்கடலில் நாம் திளைத்தல் நன்று அல்லவோ! அதாவது சாத்வீக குணம் கொண்டவரை வழிகாட்டியாகக் கொள்ளுதல் நாம் இறைவனை அடையும் வழி என்று காட்டியிருப்பார்.

அடுத்தப்பாடலில் அரியதான பலத்துறைகளிலும் முதலும் இறுதியும் கற்று ஓதியவரும், வேதங்களும், பற்றினைத் துறந்தவரும் முடிவில் பற்றக் கூடிய ஒரே பொருள் இறைவன் திருவடிகளே! என்று கூறியிருப்பார்.

இங்கு

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.

என்ற குறள் ஒப்பு நோக்கத்தக்கது.

முதல் பாடலில் பரம் பொருளான இறைவனை நேரிடையாகவும், அடுத்து அடியாரின் துணைக்கொண்டு அவர் வழிநடந்து அதன் மூலமாகவும் இறுதியில் அவனே கதி என்று சரணடைவதையும் காட்டுகிறார்.

எடுத்துக் கொண்ட காவியம் வைணவ இலக்கியம், கம்பரும் வைணவ சமயத்தை பின்பற்றுபவர் என்றாலும் கடவுள் வாழ்த்தில் ஒன்றேயான பரம்பொருளையேப் பேசுகிறார்.

கம்பனுக்கு முன்பு பக்தி இலக்கிய காலத்தில் சமயச் சண்டைகள் பெரிதும் காணப்பட்டன, இலக்கியங்களில் அதன் தாக்கத்தைக் காணலாம். எனவே சமயங்களுக்குள் சண்டை என்பது பேதைமை என்ற தன் பரம் பொருள் கருத்தை பல இடங்களில் கம்பன் கட்டியிருப்பார்.

ஆற்றுப் படலத்தில் ஒரு பாடல்

நீறு அணிந்த கடவுள் நிறத்த வான்
ஆறு அணிந்து சென்று. ஆர்கலி மேய்ந்து. அகில்
சேறு அணிந்த முலைத் திருமங்கைதன்
வீறு அணிந்தவன் மேனியின் மீண்டதே.

மழைப் பொழியும் ஒரு இயற்கை நிகழ்வு, அறிவியல் பூர்வமாக கடல் நீர் ஆவியாகி, மேலெழும்பி நீர் மிகுவதால் கறுத்து மின்னி இடித்து மழையாகப் பொழிகிறது. கம்பன் தன் சமய கருத்தைச் சொல்ல இவ்விடத்தைப் பயன் படுத்திக் கொள்கிறான்.

வெண்மையான மேகம், உடலெங்கும் திருநீறணிந்த சிவபெருமானைப் போல் காட்சியளிக்கிறதாம். வானத்தை அழகு செய்தவாறே சென்று கடலில் நீரை உண்டு அகில் என்ற வாசனைக் குழம்பணிந்த திருமகளால் பெருமை பெற்றவனான திருமாலின் கரிய வண்ணம் போல் மீண்டதாம்.

மேகம் என்பது ஒன்றே. அதுவே வெண்மையாகவும் கருமையாகவும் காட்சி அளிப்பது போல், பரம் பொருளே சிவனாகவும் பெருமாளாகவும் காட்சி தருகிறான் என்று மிக அழகான உவமையால் காட்டியிருப்பார்.

இதில் இன்னுமொரு அழகும் காணலாம். இங்கு 'ஆர்கலி மேய்ந்து' என்று சொல்லியிருப்பார். மாடுகள் மேயும் என்பது தெரியும். ஒரு பரந்த புல்வெளியில் மேயும் போது பசுமையான புல்லைமட்டும் மேலோட்டமாக மேய்ந்து உண்ணும். கடலில் மேல்பரப்பில் இருக்கும் நீர்தானே ஆவியாகி மேகமாகிறது. ஆழ் கடல் நீர் அல்லவே! அதனால் தான் மேகம் மேலோட்டமாக கடல் நீரை மேய்ந்ததாம்.

சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து.

என்பதற்கு இது சான்றல்லவா!!

மற்றொரு பாடல் – உலாவியற் படலத்தில். இராமன் வருகிறான். அவனை மிதிலை மக்கள் காண்கின்றனர். அவனது முழு உருவை யாராலும் காணமுடியாது நிற்கின்றனர் என இராமனின் உருவ அழகை காட்ட வந்த கம்பன்

தோள் கண்டார் தோளே கண்டார்;
தொடு கழல் கமலம் அன்ன
தாள் கண்டார் தாளே கண்டார்;
தடக் கை கண்டாரும் அஃதே;
வாள் கண்ட கண்ணார் யாரே
வடிவினை முடியக் கண்டார்?
ஊழ் கண்ட சமயத்து அன்னான்
உருவு கண்டாரை ஒத்தார்.

எங்கிறார். இராமனின் தோளைக் கண்டவர், தோளை மட்டுமே கண்டார். தோள் அழகில் மூழ்கியவர் மற்ற உறுப்புக்களை காண முடியாமல் நின்றார். தாளினை கண்டவர் தாள் மட்டுமே கண்டார். கையைக் கண்டாரும் அப்படியே என்றவர் அவர்கள் நிலையை

ஊழ் கண்ட சமயத்து அன்னான்
உருவு கண்டாரை ஒத்தார்.

என்கிறார். மாறுபட்ட கொள்கைகள் கொண்ட சமயத்தவர் பிற சமயத்தவரின் கொள்கைகளை காணாதார் போல இவர்கள் நிலை இருந்ததாக கூறுகிறார்.

வாள் கண்ட கண்ணார் யாரே
வடிவினை முடியக் கண்டார்?

அவன் உருவை யாரும் முழுதுமாக காணவில்லை. அதுபோல்தான் சமயங்களும் பரம்பொருளின் உண்மை நிலையை உணராது, முழு உண்மையைக் காணாது தாம் கண்டதே கொள்கை என்று நிற்கின்றன எனக் காட்டுகிறார். இங்கு யானையைத் தொட்டுணர்ந்த குருடர் கதை நினைவிற்கு வருகிறதல்லவா!!

அதேபோல் சீதையின் அழகைக் காட்டுமிடத்து, இன்னும் சிறப்பான ஒப்புமை ஒன்றைக் காட்டுகிறார் கம்பர். கோலங்காண் படலத்தில் இன்னுமொரு பாடல்

பல் இயல் நெறியின் பார்க்கும்
பரம் பொருள் என்ன. யார்க்கும்.
‘இல்லை.’ ‘உண்டு’. என்ன நின்ற
இடையினுக்கு இடுக்கண் செய்தார்.

சீதைக்கு அணிகலன் பூட்டுகிறார்கள். தலையில் , கழுத்தில் என பல அணிகலங்களை அணிந்ததை காட்டிய கம்பனுக்கு இடையணி இடும் நேரம் மட்டும் வருத்தம் மேலோங்குகிறது. ஏனென்றால் பல சமயத்தைச் சேர்ந்தவரும் கடவுள் 'உண்டு', 'இல்லை' என தம்முள் வாதம் செய்தும் 'இல்லை', 'உண்டு' என முடிவுக்கு வர இயலாத கடவுளைப் போல, இருக்கிறதா? இல்லையா? என்றறிய முடியாத இடைக்கு அணிகலன் இட்டு துன்பத்தைத் தந்தார்களாம்.

ஒரு பெண்ணின் இடையை வர்ணிக்கும் இடத்தில் பேரின்ப பொருளாகிய பரம் பொருளைப் பாடுவது கம்பனின் வல்லமைதானே!!

இதில் இன்னுமொரு அழகும் உண்டு, என்னதான் இடை உண்டா இல்லையா என்றாலும் இடையில்லாத மனிதரில்லையே! அதுபோல் தான் நாம் உண்டு இல்லை என்று எவ்வளவுதான் வாதித்தாலும் கடவுள் இருக்கிறார். நம்மால் அறியத்தான் முடிவதில்லை என்ற தனது நிலைப்பாட்டை மிக அழகாகக் கூறுகிறார்.

பிற காண்டங்களில் இருக்கும் கடவுள் வாழ்த்தையும் பாயிரத்தின் மற்ற பகுதியையும் அடுத்தப் பதிவில் சிந்திப்போம்.



அன்புடன்
உமா

Sunday, February 21, 2021

கம்பன் கவித்தேன், முன்னுரை

கம்பன் கவித்தேன்’ - முன்னுரை

         கம்பன் கவித்தேன் இத் தலைப்பு எனது பெருமதிப்பிற்கும் மரியாதைக்கும், மிகுந்த நட்பிற்கும் உரிய சென்னைத் துறைமுகத் தலைவர் திரு.ப.இரவீந்திரன் IRTS அவர்கள் எங்கள் அலுவலகத்தின் ஒரு நிகழ்விற்கு பரிந்துரைத்த ஒன்று.

           சிறப்பான தலைப்பு. நாம் தேனை எப்படி உண்போம்? தண்ணீர் போல் குடிக்க முடியுமா! உள்ளங்கையில் வைத்து, நாவால் நக்கி ஒவ்வொரு துளியையும் சுவைத்துதானே உண்ணமுடியும். அப்படித்தான் கம்பன் கவியையும், கதை படிப்பது போல் படித்துச் செல்லக்கூடாது. ஒவ்வொரு சொல்லையும் இரசித்துச் செல்ல வேண்டும்.

        தமிழின் மிக அற்புதமான காப்பியம் கம்பராமாயணம். ‘இராமாயண’ கதை அனைவரும் அறிந்ததுதான் என்றாலும் கம்பராமாயணத்தின் சிறப்பு, கதையோடு கம்பன் காட்டும் வாழ்வியல் நெறிகள், அறம், அதன் அற்புதமான மொழிவளம்.

    சோழர்கள் காலத்தில் கலை இலக்கியம் சிறந்து, மக்கள் செல்வச் செழிப்போடு வாழ்ந்தனர். அதன் காரணமாகவே சிறிது அறம் நழுவி, உலகியல் இன்பங்களில் அதிக ஈடுபாடு கொண்டனர். மக்களையும் மன்னனையும் அறவழிப்படுத்தவே கம்பராமாயணம் இயற்றப்பட்டது என்பர். பெரிய புராணமும் மன்னன் நல்லிலக்கியங்களைப் படித்து வழிகாட்டியாய் வாழ வேண்டும் என்பதனால் தானே எழுதப்பட்டது. என்வே கம்பன் தன் காப்பியத்தில் கதையோடு அறத்தையும் அதிகம் சொல்லியிருப்பான். இதனாலேயே இக்காப்பியம் எக்காலத்திற்கும் உரியதாக விளங்குகிறது.

    கம்பன் கவியின் மொழிவளம் அனைவரும் அறிந்து மகிழ தக்கது. கம்பராமாயணம் விருத்தப்பாவில், அரிதான கலிவிருத்தத்தில்  அமைந்த காப்பியம். கம்பன் மிக அதிகமான வாய்ப்பாடுகளில் அமைந்த கலி விருத்த வகைகளை பயன் படுத்திருப்பார். மற்ற ஆசிரிய விருத்தம், வஞ்சி விருத்தம் ஆகியவையும் நிறைந்து காணப்படும். இவரது பாக்களில் அமைந்துள்ள உவமைகள், உருவகங்கள் கற்றோர் வியக்கக் கூடியவை. அதனால் தான் கண்ணதாசன்
சத்தான கம்பனுக்கு ஈடு இன்னும்
வித்தாக வில்லை எனப்பாடு’
என்றார்.
           இங்கே நான் ஒரு உண்மையைச் சொல்லியாக வேண்டும். கம்பனை நான் இதுவரை முழுமையாக படித்ததில்லை. பலரது சொற்பொழிவுகளைக் கேட்டதும் அவ்வப்போது சிறிது சிறிதாக படித்ததும் தான் எனது நிலை. கம்பனை முழுவதுமாக படிக்க வேண்டும் என்ற என் ஆசையே இவ்வலைத்தளம் எழுத என்னைத் தூண்டியது. நாம் படிப்பதை எழுதினால் மனத்தில் பதியுமல்லவா!! அதுதான் என் நோக்கம்.

    கம்பராமாயணம் ஆறு காண்டங்களும் 123 படலங்களும் 10000க்கும் அதிகமான பாடல்களையும் கொண்டது. நான் எடுத்துக் கொண்ட காரியம் மிகப் பெரியது என்பதை உணர்கிறேன். துவங்கியாகிவிட்டது. காலவரையரை ஏதாவது உண்டா? என்றால். பதில் இல்லை என்னிடம். எப்பொழுதெல்லாம் தோன்றுகிறதோ அப்பொழுதெல்லாம் எழுதுவேன். முடிந்தவரையில் தொடர்ந்து எழுதுவேன். தொடர்ச்சியாக எழுதுவேன். படலம் படலமாகவா இல்லை பாடல் அடிப்படையிலா, முடிவெடுக்கவில்லை. படிக்க படிக்க நான் இரசித்ததை பகிர்ந்துக் கொள்கிறேனே!!

தும்பிக்கை யானும் துணைவருவான் தட்டாமல்
செம்மொழிச் சொல்தந்து காப்பாள் தமிழன்னை
எம்மோ டிணைந்திடுவீர் எண்ணங்கள் ஒன்றாக
'கம்பன் கவித்தேன்'
 சுவைப்போம்!


சந்திப்போம்!!

நம்பிக்கையுடன்
உமா