Sunday, March 28, 2021

கம்பன் கவித்தேன் - பாலகாண்டம் - நாட்டுப் படலம்

வாங்கரும் பாதம் நான்கும் வகுத்தவான் மீகி என்பான்
தீங்கவி செவிகள் ஆரத் தேவரும் பருகச் செய்தான்
ஆங்கவன் புகழ்ந்த நாட்டை அன்பெனும் நறவ மாந்தி
மூங்கையான் பேச லுற்றான் என்னயான் மொழிய லுற்றேன்.

    என்று நாட்டுப்படலத்தைத் துவங்குகிறார் கம்பன். நீக்குவதற்கு இயலாத செம்மையான நான்கு அடிகள் கொண்டதும் செவிகளுக்கு இன்பமளிக்கக்கூடியதுமான கவிகளை, தேவரும் மகிழுமாறு வால்மீகி என்பான் தந்தான். அவ்வினிய கவிகளால் அவன் புகழ்ந்த நாட்டை அன்பெனும் கள்ளுண்டு பேசயியலா, ஊமை பேச முயன்றதைப்போல் நான் கூறுகிறேன், என்கிறார்.

    பேச முடியாதவருக்கு பேச்சு வந்தால் எவ்வாறு நினைத்ததையெல்லாம் பேசிமுடிக்க முயல்வாரோ அவ்வாறு நானும் எழுத முயன்றேன் என்றும் கொள்ளலாம். அல்லது பேசயியலா ஒருவர் பேச முயன்றால் எப்படித் தெளிவில்லாமல் இருக்குமோ, அவ்வாறு தான் முயன்றதாக சொல்வதாகவும் கொள்ளலாம். அன்பு என்னும் நறவம் மாந்தி, அன்பும் கள்ளைப்போல் மயக்கத்தை தரக்கூடியதல்லவா! இது கம்பன் வால்மீகி மேல் வைத்திருந்த அன்பை, மதிப்பை நமக்கு உணர்த்துகிறது.

    மேலும் இப்பாடலில் ஒரு கவிதைக்கான முக்கிய இலக்கண கூறு ஒன்றை எடுத்துக் காட்டியிருப்பார் கம்பன். நீக்கிவிட இயலாத நான்கு அடிகள் கொண்ட பாடல்கள் என்பான். ஒரு கவிதை என்பது சொல்ல வந்த கருத்தை மிகவும் குறைந்த சொற்களில் தெளிவாகச் சொல்லவேண்டும். அப்படிச் சொல்லும் போது ஒரு சொல்லை எடுத்தாலும் பொருள் தராது. அதுமட்டுமில்லாமல் ஒரு சொல்லை இன்னுமொரு சொல்லிட்டு மாற்றியமைக்கவும் முடியாதபடி சிறப்பான சொற்களால் அமைக்கப்பட வேண்டும். இது கம்பன் காட்டும் நெறி.

இதன்படியே இப்படலம் முழுதும் உள்ளப் பாடல்களில் பல அணிகள், பின்வரு நிலை அணிகள், தற்குறிப்பேற்ற அணி, உவமையணி, எதிர்மறை உவமையணி, ஒருபொருட் பன்மொழி, பல பொருள் ஒருசொல் என பல இலக்கண கூறுகள் நாமறிந்துணர கிடைக்கின்றன. பார்ப்போம்.

இப்படலத்தில் கோசலத்தின் வளம், மருத நில காட்சி, நெய்தல் நில காட்சி, மக்கள் செழிப்பு ஆகியவற்றைக் காட்டுகிறார் கம்பன். என்னதான் வால்மீகி பாடிய நாட்டை தான் பாடுவதாகச் சொன்னாலும் கம்பன் காட்டும் வளங்களும் ,மக்கள் பண்பாடும், காட்சிகளும், காவிரி பாய்ந்து வளம் சேர்த்த சோழ பெரு நாட்டையும், தமிழ் மக்களையும் நம்கண்முன்னே நிறுத்துகின்றன என்பதில் மாற்றமில்லை. நாமும் சோழ நாட்டினையும் காவிரியையும் தமிழ் பண்பாட்டையும் மனத்தில் கொண்டே இக்காவியத்தை இரசிப்போம்.

வரம்பெலாம் முத்தம் தத்தும் மடையெலாம் பணில மாநீர்க்
குரம்பெலாம் செம்பொன் மேதிக் குழியெலாம் கழுநீர்க் கொள்ளை
பரம்பெலாம் பவளம் சாலிப் பரப்பெலாம் அன்னம் பாங்கர்க்
கரும்பெலாம் செந்தேன் சந்தக் காவெலாம் களிவண்டு ஈட்டம்.

    வயல் வரப்புக்களில் எல்லாம் முத்துக்கள், நீர்பாயும் இடங்களிலெல்லாம் சங்கு, அமைக்கப்பட்ட கரைகளிலெல்லாம் பொன், எருமைகள் சேற்றில் படியுமல்லவா, அங்கெல்லாம் செங்கழுநீர் மலர்கள், உழப்பட்ட நிலங்களில் பவளங்கள் இருந்தனவாம், விவசாயத்திற்கு பயன் படுத்தப்படாத நிலங்களில் கூட தேன் நிறைந்து ஓடியதாம் என்று பொதுவாக நாட்டின் வளம் சொல்கிறார். இங்கு முத்து, சங்கு போன்றவை நெய்தல் நிலப் பொருட்கள். கடலும் கடல் சார்ந்த இடத்திலும் காணப்படுபவை. ஆனால் இங்கு வயல், வயல் சார்ந்த மருத நிலத்தில் இருப்பதாக காட்டுவது திணை மயக்கம். நாம் ஆற்றுப்படலத்தில் முன்பே காண்டோமல்லவா, முல்லையை குறிஞ்சியாக்கி மருதத்தை முல்லையாக்கி, இப்படி நிலத்தன்மையை மாற்றி பாய்ந்ததல்லவா ஆற்று வெள்ளம்!!! அதை இங்கும் காட்டுகிறார் கம்பர்.

ஆறுபாய் அரவம் மள்ளர் ஆலை பாய் அமலை ஆலைச்
சாறு பாய் ஓதை வேலைச் சங்கின் வாய்ப் பொங்கும் ஓசை
ஏறு பாய் தமரம் நீரில் எருமை பாய் துழனி இன்ன
மாறு மாறு ஆகி தம்மில் மயங்கும்மா மருத வேலி..

இது ஒரு அழகான மருத நிலக் காட்சி. இங்கு ஆறு பாய்வதால் வரும் ஓசை, உழவர்கள் ஆலைகளில் ஏற்படுத்தும் ஓசை, அவ்வாலைகளில் கரும்பின் சாறு பாய்வதால் வரும் ஓசை , நீர்நிலைகளில் சங்குகள் இருந்தன எனப்பார்த்தோமல்லவா அவற்றில் எழும் ஓசை, எருதுகள் தம்முள் மோதுவதாலும், நீர் நிலைகளில் பாய்வதாலும் எழும் ஓசை என இவையெல்லாம் கலந்து ஒலிக்கும் என்று மருத வளம் காட்டுகிறார். இங்கு அரவம், அமலை, ஓதை, ஓசை தமரம், துழனி என்ற பல சொற்களும் 'ஓசை' என்ற ஒரு பொருளையேக் குறித்து நிற்கின்றன. இது பொருள் பின்வருநிலை அணி. தமிழுக்குரிய சிறப்பம்சங்களில் ஒன்று இது.

தாமரைப் படுவ வண்டும் தகை வரும் திருவும் தண் தார்க்
காமுகர்ப் படுவ மாதர் கண்களும் காமன் அம்பும்
மா முகில் படுவ வாரிப் பவளமும் வயங்கு முத்தும்
நாமுதல் படுவ மெய்யும் நாம நூல் பொருளு மன்னோ.

இப்பாடலில் ‘படுவ’ என்ற சொல் மீண்டும் மீண்டும் வந்து ‘தங்குதல்’ என்ற ஒரு பொருளையே தந்தது. எனவே இது சொல்பொருட் பின்வருநிலையணி. மேகங்கள் கடலிலிருந்து முத்து, பவளம் அனைத்தையும் எடுத்துக் கொண்டு மழையை மட்டும் பொழிந்து, மற்றதை தானே வைத்துக் கொண்டதாம். அதனால் தான் மழைநீரில்லா மேகம் வெண்மையாகவும் வானம் சிவந்தும் காணப்படுகிறதோ!! அழகு. விலைமாதர் கண்களும் காமன் வில்லும் காமுகரிடம் மட்டுமே தங்கும் என்று பிரித்துக் காட்டியவர், அம்மக்கள் நாவில் உண்மையும், ஞான நூல்களின் பொருளும் தங்குவன எனவும் தெளிவுறுத்துகிறார்.

தண்டலை மயில்கள் ஆடத் தாமரை விளக்கம் தாங்கக்
கொண்டல்கள் முழவின் ஏங்கக் குவளைகண் விழித்து நோக்கத்
தெண்திரை எழினி காட்டத் தேம்பிழி மகர யாழின்
வண்டுகள் இனிது பாட மருதம்வீற் றிருக்கும் மாதோ

என்ற பாடலில் மருத நில அழகையும்

முறை அறிந்து அவாவை நீக்கி முனிவுழி முனிந்து வெஃகும்
இறை அறிந்து உயிர்க்கு நல்கும் இசை கெழு வேந்தன் காக்கப்
பொறை தவிர்ந்து உயிர்க்கும் தெய்வப் பூதலம் தன்னில் பொன்னின்
நிறை பரம் சொரிந்து வங்கம் நெடு முதுகு ஆற்றும் நெய்தல்.

நெல்மலை யல்லன நிரைவரு தரளம்
சொன்மலை யல்லன தொடுகட லமிர்தம்
நன்மலை யல்லன நதிதரு நிதியம்
பொன்மலை யல்லன மணிபடு புளினம்

    என்ற பாடல்களில் நெய்தல் நில வளத்தையும் அழகாக் காட்சிப்படுத்துகிறார் கம்பன்.

    மருத நிலத்தில் மருதம் என்ற அரசவையில் ஒரு அழகிய ஆடல் காட்சி அரங்கேறுகிறது. இடித்துக் கொண்டு மழைவரும் நேரம் மயில்கள் ஆடுமல்லவா! இதோ சோலைகளில் மயில்கள் ஆடுகின்றன. மேகங்கள் முழ்வு போல் முழங்குகின்றன. அவற்றிற்கு குவிந்த தாமரை விளக்காக நிற்கிறது. அரங்கம் என்றால் விளக்கிருக்க வேண்டுமல்லவா! மாலை நேரம் தாமரை குவிந்து விளக்காக நிற்கிறது. அதே நேரம் குவளை மலர் கண்விழித்து இவ்வாடலைப் பார்கின்றதாம். தாமரை குவியும் நேரம் குவளை மலருமல்லவா!! அவை ஆடல் காண்போராக படுகிறது கம்பனுக்கு. நீர்நிலைகளில் அலை ஆடுகிறது அது திரைச்சீலை ஆடுவதாக காண்கிறார். திரையும் அமைந்துவிட்டது. இசைவேண்டுமே. இசைக்கா பஞ்சம்! யாழிசைப் போல் வண்டுகள் பாடுகின்றனவாம். இவ்வரிய காட்சியை கண்டவாறு மருதம் வீற்றிருந்ததாம்!! கற்பனைக்குக் கம்பன் அல்லவா!!

    அடுத்து நெய்தலைக் காட்டும் பொழுது

    ஆளும் முறை அறிந்து, பேராசைக்கொள்ளாமல், கோபம் காட்டவேண்டிய இடத்தில் கோபித்து, அளவறிந்து வரி பெற்று, தம் குடிகளின் நலன் கருதும் வேந்தன் நாட்டைக் காப்பதால் , அந்நில மகள் எவ்வாறு பாவச் சுமைநீங்கி இளைப்பாறுகிறாளோ அவ்வாறு மிகுந்த செல்வங்களை கொண்டு வந்த கப்பல்கள் தங்கள் சுமைகளை இறக்கிவைத்து இளைப்பாறுவதாய்க் காட்டுகிறார். இது அழகான உவமையணி.

இங்கு

அறிவுடை வேந்தன் நெறியறிந்து கொளினே,
கோடியாத்து, நாடுபெரிது நந்தும்;

என்ற புறப்பாடல் கருதத்தக்கது.

    அப்படி செல்வங்கள் நிறைந்த நெய்தல் நிலத்தில் நெல் மலையாக குவிக்கப்படாத இடங்களிலெல்லாம் முத்துக்கள் மலைகளாக இருந்தனவாம். முத்துக் குவியல்கள் இல்லாத இடங்களில் எல்லாம் உப்பு மலையாக குவிக்கப்பட்டிருந்தனவாம். உப்பை தொடுகடல் அமிர்தம் என்றுரைப்பது அழகு, நயமிக்கது. உண்மைதானே!! அப்படி உப்புக் குவியல் இல்லாத இடங்களில் ஆற்றில் அடித்துவரப்பட்ட பொன், மணி ஆகியன குவிந்து கிடந்தனவாம். எங்கு நோக்கினும் பொன்னும் பொருளுமாகக் கிடந்த நெய்தல் வளத்தை தனித்துவமாக எடுத்துரைப்பது கம்பன் திறமன்றோ!


இயல்புடை பெயர்வன மயின்மணி யிழையின்
வெயில்புடை பெயர்வன மிளிர்முலை குழலின்
புயல்புடை பெயர்வன பொழிலவர் விழியின்
கயல்புடை பெயர்வன கடிகமழ் கழனி.

இப்பாட்டில் மயில்கள் அந்நாட்டுப் பெண்களின் சாயலைப் பெற்று திரிகின்றன எனவும், அவர்கள் அணிந்துள்ள அணிகலங்காளைப் போல் வெயில் வீசியது எனவும், அவர்களின் கூந்தல் போல் மேகங்கள் இருந்தன எனவும் அவர்களது கண்களைப் போல் மீன்கள் துள்ளின எனவும் அமைத்திருப்பதால் இது எதிர்மறை உவமையணி.


ஆலைவாய் கரும்பின் தேனும் அரி தலை பாளைத் தேனும்
சோலைவாய்க் கனியின் தேனும் தொடைஇழி இறாலின் தேனும்
மாலைவாய் உகுத்த தேனும் வரம்பிகந்தோடி வங்க
வேலைவாய் மடுப்ப உண்டு மீனெலாங் களிக்குமாதோ.

இந்தப் பாடலில் 'தேன்' என்ற ஒரு சொல் கரும்பின் சாறு, கள், பழச் சாறு, தேன் கூட்டிலிருந்து வழியும் தேன், மலர்மாலைகளிலிருந்து வடியும் தேன் என்று பல பொருள் குறித்து வருவதால் இது சொல்பின்வருநிலையணி.


துருவை மென் பிணை ஈன்ற துளக்கு இலா
வரி மருப்பு இணை வன் தலை ஏற்றை வான்
உரும் இடித்து எனத் தாக்குறும் ஒல் ஒலி
வெருவி மால் வரை சூல் மழை மின்னுமே.

    மென்மையான பெண் ஆடு ஈன்ற செம்மறி கடாகள் வலியனவாக இருந்தன எனக் காட்டுகிறார். ஆண்களின் வலிமைக்கு பெண்கள் காராணமல்லவா!! பெண்ணை வலிமைக்குறைந்தவள் என்பது தகுமோ! சிந்திக்க வைக்கிறார்.

    அடுத்து காணும் இரண்டுப் பாடல்களிலும் சேவல் சண்டை, எருது சண்டை, செம்மறி சண்டை ஆகியன நடைமுறையிலிருந்தன எனக் காட்டுகிறார் கம்பன்


பொருந்திய மகளிரோடு வதுவையிற் பொருந்துவாரும்
பருந்தொடு நிழல் சென்று என்ன இயல் இசை பயன் துய்ப்பாரும்
மருந்தினும் இனிய கேள்வி செவியுற மாந்துவாரும்
விருந்தினர் முகம் கண்டு அன்ன விழா அணிவிரும்புவாரும்.

    இந்த பாடலில் பெருத்தம் பார்த்து மணமுடித்தனர் என்பது பெறப்படுகிறது, அப்படி மணமுடித்தவர், இசைப்பயன் துய்ப்பார், இதற்கு கம்பன் காட்டும் உவமை அழகு பருந்தொடு நிழல் செல்வது போல் என்கிறார் பருந்து மேலே பறக்கும் பொழுது அதன் நிழல் மேடு பள்ளம் என்று ஏற்ற இறக்கங்களில் எல்லாம் சென்றாலும் பருந்தோடு கூடவே செல்லும் அதுப் போல் இசையமைக்கப்பட்ட இயற்றமிழ் பாடல்களின் பலனும் ஒன்று போல் மக்களைச் சென்றடையும் என்று காட்டுவது சிறப்பு. அப்படி இசை அனுபவிப்பார், அமிழ்தத்தைவிட இனிய கேள்வி செல்வம் செவிவழி அனுபவிப்பாரும், செல்வத்துள் செல்வம் செவிச் செல்வமல்லவா!! விருந்தினர் முகம் கண்டு விருந்து அளிக்க விரும்புவாரும்,

மோப்பக் குழையும் அனிச்சம் முகந்திரிந்து
நோக்கக் குழையும் விருந்து.

என்பதால் விருந்தினர் முகம் பார்த்து விருந்து செய்தார்களாம்… இத்தோடு இப்பாடலின் பொருள் முடியவில்லை அடுத்த நான்கு பாடல்களிலும் கருத்து தொடர்கிறது.

கறுப்புறு மனமும் கண்ணிற் சிவப்புறு சூட்டுங் காட்டி
உறுப்புறு படையில் தாக்கி உறுபகை யின்றிச் சீறி
வெறுப் பில களிப்பின் வெம்போர் மதுகைய வீர வாழ்க்கை
மறுப்பட வாவி பேணா வாரணம் பொருத்து வாரும்.

    இந்தப்பாடலில் முன்பகை யின்றியே சினம் காட்டி , போர் செய்ய வெறுப்பில்லாத வீரம் கொண்ட சேவலை போரிடச் செய்வாரும் என்று ‘சேவல் சண்டை’ பற்றிய குறிப்பைத் தருகிறார். அடுத்தப்பாடலில் எருதுகளைச் சண்டையிடச் செய்ததையும் காட்டுகிறார்.


எருமை நாகு ஈன்ற செங்கண் ஏற்றையோடு ஏற்றை சீற்றத்து
உரும் இவை என்னதாக்கி ஊழுற நெருக்கி ஒன்றாய்
விரி இருள் இரண்டு கூறாய் வெகுண்டன அதனை நோக்கி
அரி இனம் குஞ்சி ஆர்ப்ப மஞ்சுற ஆர்க்கின்றாரும்.

இங்கு அவர்காட்டும் உவமை அழகு. இரண்டு எருதுகள் இரண்டும் ஒரே வலிமை கொண்டன. அவை மோதுவது இருள் இரண்டு கூறாக பிரிந்து தம்முள் மோதியதைப் போலிருந்தது என்கிறார். இங்கும் நாகு என்பது பெண் எருமை ஈன்ற ஆண் எருதுகள் வலிமை கொண்டன எனக்காட்டி பெண்ணினத்தின் பெருமை கூறி மகிழ்கிறார். அப்படி எருதுகளைச் சண்டையிடச் செய்து ஆரவாரம் செய்வாரும்


முள்ளரை முளரி வெள்ளி முளையிற முத்தும் பொன்னும்
தள்ளுற மணிகள் சிந்தச் சலஞ்சலம் புலம்பச் சாலில்
துள்ளிமீன் துடிப்ப ஆமை தலைபுடை சுரிப்பத் தூம்பின்
உள் வரால் ஒளிப்ப மள்ளர் உழுபகடு உரப்பு வாரும்.

    தாமரையின் முனை உடையுமாறும், முத்தும் பொன்னும் தள்ளுபடுமாறும், சங்குகள் புலம்புமாறும், மண்ணில் மீன்கள் துள்ளுமாறும் ஆமைகள் ஓட்டுக்குள் ஒடுங்குமாறு உழுபவர்கள் ஆகியோர் அந்நாட்டில் இருந்தனர் என்று இப்பாடலுடன் பொருள் முடிகிறது. இவ்வாறு ஒரு பொருள் பற்றி மூன்றிற்கும் மேலான பாடல்கள் அமைப்பது ‘குளகம்’ என்று கூறப்படும்.

    இன்னும் இப்படலத்தில் நெற் குவியலைக் குவித்து அடையாளமிட்டு பாதுகாத்தது, வறியவருக்கும் ஈந்து பின் விருந்தோடு உண்ண இல்லத்திற்கு நெற் கொண்டு சென்ற மக்கள் செயல், கரும்பை ஆலையிட்டு பிழிந்து சாறாக்கியது, இப்படி பலவற்றைக் காட்டுகிறார் கம்பர். மற்றும் எருமைகள் கன்றை நினைத்த மாத்திரத்திலேயே பால் சுரக்கும் தன்மையைக் காட்டுகிறார். அப்படி பால் வழிந்ததால் வயலில் நெற்பயிர்கள் செழித்து வளர்ந்தனவாம்


கொன்றை வேய்ங்குழற் கோவலர் முன்றிலில்
கன்று உறங்கும் குரவை கடைசியர்

என்று கொன்றையாலும் மூங்கிலாலும் குழல் செய்து இசைத்தனர் என்பதையும் காட்டுகிறார்.

மேலும் அந்நாட்டில் மக்களுக்கு

கலம் சுரக்கும் நிதியம் கணக்கு இலா
நிலம் சுரக்கும் நிறை வளம் நல் மணி
பிலம் சுரக்கும் பெறுதற்கு அரிய தம்
குலம் சுரக்கும் ஒழுக்கம் குடிக்கு எலாம்.

கப்பல்கள் நிறைந்த செல்வத்தை தரும், நிலம் நிறைந்த வளத்தைத் தரும், அதுமட்டுமின்றி சுரங்கம் தோண்டி அரிய மணிகளும் பெறப்பட்டன என்றும் காட்டுகிறார். அப்படிப்பட்ட மக்களின் குலம் அவர்களுக்கு ஒழுக்கத்தைக் கொடுத்தது என்றும் காட்டுகிறார். இப்பாடல் சுரக்கும் என்ற சொல் பல முறை வந்து ‘ இடையறாது தரும்’ என்ற ஒருபொருள் தந்ததால் சொற்பொருள் பின்வருநிலை அணி. சுரக்கும் என்று சொன்னதால் தடங்கலில்லாமல் நிறைசெல்வம் மிகுந்து இருந்ததைக் காட்டுகிறது.


இப்படி செல்வமும் ஒழுக்கமும் பெற்றதால் அங்கு


கூற்றம் இல்லையொர் குற்றம் இலாமையால்
சீற்றம் இல்லை தம் சிந்தையிற் செம்மையால்
ஆற்ற நல்லறம் அல்லது இலாமையால்
ஏற்றம் அன்றி இழித்தகவு இல்லையே

என்றும்

வண்மை இல்லை ஓர் வறுமை இன்மையால்
திண்மை இல்லை ஓர் செறுநர் இன்மையால்
உண்மை இல்லை பொய் உரை இலாமையால்
வெண்மை இல்லை பல் கேள்வி மேவலால்.

என்றும் அந்நாட்டின் சிறப்பைக் காட்டுகிறார். இங்கு சிந்தையின் செம்மையால் சினம் இல்லை என்று காட்டுவது அறிந்து மகிழத்தக்கது. சிந்தை தெளிவானால் சினம் இருக்காதல்லவா!!

இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத்
துறந்தார் துறந்தார் துணை

என்று வள்ளுவனும் காட்டுகிறாரல்லவா!!

இப்படி 61 விருத்தப் பாடல்களில் நாட்டின் அழகை அழகு கவிகளில் காட்டிய கம்பன், மேலும், கவிதையின் இலக்கணத்தை பின்னும் பல இடங்களில் பேசுகிறார். இதோ

செவ்விய மதுரம் சேர்ந்த நல் பொருளின் சீரிய கூரிய தீம் சொல்
வவ்விய கவிஞர்

என்று மிகச் சிறப்பாக கவிதைக்கு இலக்கணம் கூறும் அழகை அடுத்து நகரப்படலத்தில் காண்போம்.

விரைவில் மீண்டும் அடுத்தப் பதிவுடன்

அன்புடன் 
உமா

Sunday, March 14, 2021

கம்பன் கவித்தேன் – பாலகாண்டம் – ஆற்றுப்படலம்

          கம்பன் தன் இராமாவதாரத்தை மூல நூலான வால்மீகியின் கதையைத் தழுவியே எழுதினாலும் பல இடங்களில், தமிழ் இலக்கிய மரபை ஒட்டியும், பண்பாட்டை ஒட்டியும் சில மாற்றங்களை புகுத்தியிருப்பார். சில இடங்களில், சற்று மாற்றியும், புதிதாக சிலவற்றைப் படைத்தும், தான் சொல்ல வந்த அறக் கருத்துக்களை  நிலைநிறுத்தும் விதமாகவும், அவற்றிற்கு வலு சேர்க்கும் வகையிலும் தனது காப்பியத்தை எடுத்துச் செல்வார்.

கம்பனின் காவியத்தில் காணப்படும் இம்மாற்றங்கள் எப்படி இக்காப்பியத்திற்கு அழகும் பொருண்மையும் கூட்டுகின்றன என்பதை படித்து அறிந்த அறிஞர்கள் சொல்வழி நாம் படித்துணர்தல் சிறப்பு. உதாரணமாக https://www.youtube.com/watch?v=oWIILIOwdTg என்ற வலையொளித்தளத்தில் சுதாசேஷையன் அவர்களின் உரை, http://www.tamilvu.org/library/nationalized/pdf/30-c.srinivasan/kambanumvalimegium.pdf என்ற தமிழ் இணைய  கல்விக் கழகத்தின் கட்டுரை போன்றவற்றை படித்தறிதல் இன்பம் பயக்கும்.

ஒரு பெருங்காப்பியம் என்றால் நாடு, நகரம், ஆறு ஆகியவற்றை பாடுதல் தமிழ் மரபு. வால்மீகி இராமாயாணத்தில் இப்படலங்கள் இல்லை. தமிழ் மரபையொட்டி ஆறு, நாடு, நகரம் ஆகியவற்றை வர்ணித்து கம்பன் தன் காவியத்தைத் துவங்குகிறார்.

ஆற்றுப்படலம்

ஒரு பெருங்காப்பியத்தின் முதல் படலம், முதல் பாடல். கவி தன் காப்பியத்தின் உட் கருத்தை, அதன் சாரத்தை இதில் சொவதாக நாம் கொள்ளலாமல்லவா. பாடலைப் பார்போம்.

ஆசலம் புரி ஐம்பொறி வாளியும்
காசலம்பு முலையவர் கண் எனும்
பூசலம்பும் நெறியின் புறம் செலாக்
கோசலம் புனை ஆற்றணி கூறுவாம்.

    குற்றங்கள் இழைக்குன்ற ஐம்பொறிகளாகிய அம்பும், அணிகலன்கள் அணிந்த மார்பகங்களைக் கொண்ட பெண்களின் கண்கள் என்னும் பூசல் அம்பும், ஒழுக்க நெறியினின்று விலகிச் சொல்லாத கோசல நாட்டினை அழகு செய்யும் ஆற்றின் அழகைக்கூறுவோம் என்று துவங்குகிறார்.

இங்கு ஒன்றை நாம் நினைவில் கொள்ளவேண்டும். கம்பன் சோழ நாட்டைச் சேர்ந்தவர். சோழ நாட்டில் தான் இக்காவியம் எழுதப்படுகிறது. கோசலத்தையோ, சரயு நதியையோ கம்பன் கண்டதாக குறிப்பு எதுவுமில்லை. எனவே கம்பன் காட்டுவது சோழ நாடே என்றும் ஆறு என்பது காவிரியே என்றும் கொள்வதில் தவறேதுமில்லை.

ஆற்றை வர்ணிக்க வந்தவர் பொறியடக்கத்தைப் பேசுகிறார் என்றால், அப்படி ஒரு அதிசிறந்த நாட்டை, மக்களை அவர் காண விழைகிறார் எனலாம்.

இங்கு ஐம்பொறிகளை ‘அம்பு’ என்று சொன்னவர், பெண்களின் கண்களை ‘பூசலம்பு’ என்கிறார். போர்த் தொழிலில் வல்ல அம்பு என்கிறார். மனிதனின் பொறிகள் நெறி பிறழ்தல், தனிமனிதனின் கட்டுப்பாட்டிற்குள் உள்ளது. ஆனால் பெண்ணின் கண்களாகிய அம்பு பிறரை, ஆண்களை வென்று தன்பாலிழுக்கும் என்பதால் அவை பூசலம்புகள்.

            தனது பொறிகளின் கட்டிலிருந்து தம்மை பாதுகாப்பதைக் காட்டிலும் பெண்களின் கண்களாகிய பொறியிலிருந்து தம்மைக் காத்தல் மிகுந்த கடினம் என்பதால், அத் தன்மையை விளக்கும் விதமாக அடைமொழியிட்டுக் கூறுகிறார்.

            கம்பனின் காவியத்தில் சிறப்பான அம்சம். தாம் விளக்க வந்ததை அழகாக சொற்களில் காட்சிப் படுத்தி, நம் கண்முன்னே விரியச் செய்யும் அழகு.

ஆறு கோசலத்தில் இருப்பதாகக் காட்டிவிட்டார். கோசலம் நமக்கு இப்பொழுது மேலிருந்து ‘பறவை காணும் காட்சி’ போல் தெரிகிறது. Bird’s eye view. 

அடுத்ததாக வானத்தில் வெண்மேகங்கள் உலவுகின்றன. அவை கடலில் நீரை உண்டு கறுத்து மேலெழும்புகின்றன. இதன் நயத்தை நாம் முன்பே கண்டோம். அடுத்து இந்த கறுத்த மேகங்கள் நகர்ந்து மலையினருகில் வந்ததும் தடுக்கப்பட்டு மழையைப் பொழிகின்றன. இப்பொழுது சற்று அருகில் காட்சித் தெரிகிறது. மழைப் பொழியும் அழகு தெரிகிறது. 

மேகங்கள் காற்றினால் நகர்ந்து மலையால் தடுக்கப்பட்டு குளிச்சியால் மலைகளில் மழையைப் பொழிவது, அறிவியல் சார்ந்த இயற்கை நிகழ்வு. கவிக் கம்பனுக்கு இக்காட்சி வேறுவிதமாக தோன்றுகிறது.


பம்பி மேகம் பரந்தது பானுவால்
நம்பன் மாதுலன் வெம்மையை நண்ணினான்
அம்பின் ஆற்றுதும் என்று அகன்குன்றின்மேல்
இம்பர் வாரி எழுந்தது போன்றதே

          நதிகள் எல்லாம் கடலில் கலப்பதால், கடல், நதிகளின் கணவன் ஆகிறது.  நதி பிறந்த இடம் மலை என்பதால், மலை' கடலுக்கு மாமனாகிவிட்டதாம்.

  சூரியனின் வெப்பத்தை உணர்ந்த கடல் மலையாகிய மாமன் வெப்பமடைந்து இருப்பான் என்று எண்ணி, மழை நீரால் குளிர்வித்ததாம்.

புள்ளி மால்வரை பொன்னென நோக்கிவான்
வெள்ளி வீழிடை வீழ்த்தெனத் தாரைகள்

இப்பொழுது இன்னும் சற்று அருகில் மழை துளிகள் மலையில் வீழ்வது தெரிகிறது. வானிலிருந்து மழை பொழிவது வெள்ளி இழைப்போல் தெரிகிறது. கம்பனின் கற்பனை விரிகிறது. பொன்மயமான இமயமலையை மேலுகலகத்திற்கு ஈர்க்கும் பொருட்டு வெள்ளி இழைகளை வானவர் வீழ்த்தினராம்!! இப்படிச் சொல்லுகிறான் கம்பன். என்னே! அழகு.

இது இயற்கை நிகழ்வின் மேல் கவி தன் கற்பனையை ஏற்றிச் சொல்வதால் தற்குறிப்பேற்ற அணி.

இங்கு லெபனீய கவிஞன் கலீல் ஜிப்ரானின் ஒரு கவிதை ஒப்பு நோக்கத் தக்கது.

Song of the Rain என்ற பாடலில் கலீல் ஜிப்ரான்


I am dotted silver threads dropped from heaven
By the gods. Nature then takes me, to adorn
Her fields and valleys.

என்று மழையின் கூற்றாகச் சொல்லியிருப்பார்.

அடடா, கம்பனைப் படித்திருப்பானோ இக்கவி. அன்றி மேன்மையான கவிகளின் எண்ணம் ஒன்றுபட்டதாய் இருக்குமோ!!

இங்கு கம்பன் ஒரு அறத்தையும் நாமறியச் சொல்லுகிறார்.


உள்ளி யுள்ள எலாமுவந்து ஈயும்அவ்
வள்ளி யோரின் வழங்கின மேகமே

ஏற்போருக்கு எது தேவை என்பதை எண்ணிப் பார்த்து தம்மிடம் உள்ளதனைத்தையும் வாரிவழங்கும் வள்ளலைப் போல் மேகம் கொடுத்ததாம். 

    ஒழுக்கத்திற்குப் பின் ஈகை இங்கு வலியுறுத்தப்படுகிறது. அதுவும் எப்படி? தேவையறிந்து தம்மிடமுள்ளதனைத்தையும் கொடுக்க வேண்டும் என்கிறார்.  இங்கு ஆண்டாளின் ‘ஆழிமழைக்கண்ணா ஒன்று நீ கைகரவேல்’ என்ற சொற்றொடற் நமக்கு நினைவிற்கு வருகிறதல்லவா!!

    அப்படி வாரி வழங்கிய மேகத்தால் வெள்ளம் பெருகுவது, தனக்கு ஒரு பழிவந்தால் உயிர்வாழா நெறி நின்று, மானம் காத்து, அறவழியில் நாட்டை ஆளும் மன்னனின் புகழ் குறையாமல் பெருகுவதைப்போலவும், தக்கவருக்கு கொடுத்த தானத்தின் பயன் வீழாது ஓங்குவதைப் போலவும் பெருகுகிறது எனக் கூறுகிறார்.

மானம் நேர்ந்து அறம் நோக்கி மனுநெறி
போன தண் குடை வேந்தன் புகழ் என
ஞானம் முன்னிய நான்மறையாளர் கைத்
தானம் என்ன தழைத்தது நீத்தமே.

    இதுவரை கடல் நீர் மேகமாகி, கறுத்து, மழையாகி மலையில் பொழிகிறது என்று காட்டிய கம்பர், இன்னும் சற்று அருகில் சென்று இப்பொழுது மழையால் உண்டான நதியின் வெள்ளத்தைப் பார்கிறார். 

     வெள்ளத்தை வர்ணிக்கும் பொழுது கம்பனுக்கு கற்பனை ஊற்றெடுக்கிறது. இக்காப்பியத்தில் இல்லாத இலக்கண கூறுகளே இல்லை என்று கூறும் படியாக தன் கற்பனையால் நிறைத்திருப்பார் கம்பர். இங்கு சிலேடையாக வர்ணித்து நதி வெள்ளத்தைக் காட்டுகிறார்.

மலையின் உச்சியில் பெய்த மழை அதன் அடிவாரத்தை அடையும் அல்லவா? அதுவும் எப்படி? மலையின் பல வளங்களையும் அடித்துக் கொண்டு எடுத்து வருகிறது. அப்ப்டியே சமவெளியில் பாய்கிறது. இது எப்படி இருக்கிறதென்று கம்பன் சிலேடையில் காட்டுகிறார்.

பெரிய தனவந்தரை உச்சி முதல் பாதம் வரைத் தழுவிய விலைமகள் அவரது பொருளையெல்லாம் கவர்ந்து கொண்டு, அவரோடு இல்லாது விலகிவிடுவர். வெள்ளமும் மலையின் உச்சி முதல் அடிவரைத் தழுவி, அதன் வளங்களையெல்லாம் அடித்துக் கொண்டு மலையை விட்டு விலகி சமவெளியில் பாய்கிறது எனவே. நதி வெள்ளம் விலைமகளை ஒத்தது என்கிறார்.


மணியும் பொன்னும் மயில் தழைப்பீலியும்
அணியும் ஆனை வெண்கோடும் அகிலும் தண்
இணை இல் ஆரமும் இன்ன கொண்டு ஏகலான்
வணிக மாக்களை ஒத்ததுஅவ் வாரியே.

    இப்பாடலில் இன்னும் சற்று அருகில் சென்று காட்டுகிறார். இப்பொழுது என்ன என்ன பொருட்கள் அடித்து வரப்படுகின்றன எனத் தெரிகிறது. முத்து, பொன், மயில் பீலி, அழகிய யானைத் தந்தங்கள், சந்தனமரம் எனப் பலபொருட்களுடன் வருவதால் வெள்ளம் வணிகரை ஒத்து இருந்ததாம். உண்மைதானே! வாணிகப் பொருட்களல்லவா இவை.

    அவ்வெள்ளத்தில் பலநிற மலர்களும் பூந்தாதுக்களும் பொன்னும் அடித்து வருவதால் வானவில்லை ஒத்தது எனக் காட்டுகிறார்.


மலை எடுத்து மரங்கள் பறித்து மாடு
இலை முதல் பொருள் யாவையும் ஏந்தலான்
அலை கடல் தலை அன்று அணை வேண்டிய
நிலையுடைக் கவி நீத்தம்அந் நீத்தமே

       இப்பாடலில் மலைகளை பெயர்த்து மரங்களை வேருடன் பறித்து பக்கத்திலுள்ள இலை போன்ற பலவற்றையும் எடுத்துக் கடலில் சேர்ப்பதால் கடலில் இராமனுக்கு உதவியாக அணைக்கட்ட வந்த வானரங்களைப் போல் ஆறு இருந்தது என்று பின்னால் நடக்கவிருக்கும் நிகழ்வை இணைத்து காட்டி பாடுகிறார் கம்பர்.

ஈக்கள் வண்டொடு மொய்ப்ப வரம்பிகந்து
ஊக்க மேமிகுந்து உள்தெளிவு இன்றியே
தேக்கு எறிந்து வருதலின்தீம் புனல்
வாக்கும் தேன்நுகர் மாக்களை மானுமே

இப்பாடலில் குடிகாரரையும் வெள்ளத்தையும் சிலேடையாக்குகிறார். மாக்கள் என்பது தெளிவாற்ற சிந்தனையுள்ளவர்கள். குடிகாரருக்கு சிந்தனைத் தெளிவிருக்காதல்லவா!

இன்னும்


சரயு என்பது தாய்முலை யன்னது இவ்
உரவு நீர்நிலத்து ஓங்கும் உயிர்க்கெலாம்

குழவிக்கு, பால் நினைந்தூட்டும் தாயைப் போல் ஆறானது வாழும் உயிர்களுக்கெல்லாம் வேண்டுவனவற்றை தானாகத் தருமாம். நீரின்றி அமையாதல்லவா உலகு!


கொடிச்சியர் இடித்த சுண்ணம் குங்குமம் கோட்டம் ஏலம்
நடுக்குறு சந்தம் சிந்தூரத்தொடு நரந்தம் நாகம்
கடுக்கை ஆர் வேங்கை கோங்கு பச்சிலை கண்டில் வெண்ணெய்
அடுக்கலின் அளிந்த செந் தேன் அகிலொடு நாறும் அன்றே

தமது சொற்களால் படம்பிடிக்கும் கருவியை நதிக்கு மிக அருகில் எடுத்துச் சொல்கிறார் கம்பர்.இப்பாடலில் ஆற்று வெள்ளத்தின் வாசத்தைக் நாமுணரக் காட்டுகிறார். 

புராணக் கதைகளை உவமையாக்கிப் பாடுவது கவி மரபே.


செறிநறுந் தயிரும் பாலும் வெண்ணெயும் சேந்த நெய்யும்
உறியோடு வாரி உண்டு குருந்தொடு மருதம் உந்தி
மறி விழி ஆயர் மாதர் வனை துகில் வாரும் நீரால்
பொறி வரி அரவின் ஆடும் புனிதனும் போலும் அன்றே.

இப்பாடலில் கண்ணனின் லீலைகளை ஆற்றின் தன்மைக்கு உவமையாக்கி கம்பர் பாடியிருப்பது நயமிக்கது.

அடுத்த பாடல்களில் வினையின் தன்மையை சிலேடையாக்கிச் சொல்வதும் அறிந்து மகிழத்தக்கது.

முல்லையைக் குறிஞ்சி ஆக்கி மருதத்தை முல்லை ஆககி
புல்லிய நெய்தல் தன்னைப் பொருஅரு மருதம் ஆக்கி
எல்லைஇல் பொருள்கள் எல்லாம் இடை தடுமாறும் நீரால்
செல்லுறு கதியில் செல்லும் வினைஎனச் சென்றது அன்றே
.

வெள்ள நீர் சிக்கிய பொருட்களை எல்லாம் தன் போக்கிலேயே அடித்துச் செல்வது, உயிர்களை தன் வயத்திற்கு இயக்கும் வினைப் போன்றதாய் இருந்ததாம்.


காத்த கால் மள்ளர் வெள்ளக் கலிப்பறை கறங்கக் கைபோய்ச்
சேர்த்த நீர்த் திவலை பொன்னும் முத்தமும் திரையின் வீசி
நீத்த மாந்தலைய தாகி நிமிர்ந்து பார் கிழிய நீண்டு
கோத்த கால் ஒன்றின் ஒன்று குலம் எனப் பிரிந்த தன்றே.

இப்படி வந்த வெள்ளம் இப்பொழுது வாய்க்கால்களில் பாய்கிறது. ஒரு வாய்க்கால் வழியாக பல கிளை வாய்க்கால்களில் பாய்வது, ஒரு குலம் பலக் கிளைகளாக பிரிவதை போன்றிருந்தது என்கிறார்.


கல்லிடைப் பிறந்து போந்து கடலிடைக் கலந்த நீத்தம்
எல்லை இல் மறைகளாலும் இயம்ப அரும் பொருள் ஈது என்னத்
தொல்லையில் ஒன்றே ஆகி துறைதொறும் பரந்த சூழ்ச்சிப்
பல் பெருஞ் சமயம் சொல்லும் பொருளும் போல் பரந்தது அன்றே. 19

இப்பாடலில் பல சமயங்கள் காட்டும் கடவுள் நெறியோடு ஒப்பிட்டு தம் சமயக் கருத்தைச் சொல்கிறார் கம்பர்.

வேதங்களாலும் விளக்க முடியாத பரம்பொருள், எவ்வாறு பல சமையங்களாலும் பலவாறு காணப்படுகிறதோ! அவ்வாறே மலையில் தோன்றிய வெள்ளம் ஆறாகி வாய்க்கால் வழியோடி ஏரி, குளம் , குட்டை என்று பல்வேறு வடிவங்களில் திகழ்கிறது எனக் காட்டுகிறார். நதி வெள்ளம் எப்படி ஒன்றுதானோ அவ்வாறே பரம் பொருளும் ஒன்றே என்பது கம்பன் காட்டுவது.


தாதுகு சோலைதோறும் சண்பகக் காடுதோறும்
போத விழ் பொய்கைதோறும் புதுமணத்தடங்கள்தோறும்
மாதவி வேலிப் பூக வனந்தொறும் வயல்கள் தோறும்
ஓதிய உடம்புதோறும் உயிர்என உலாய தன்றே

    அவ்வெள்ளம் எப்படி இருந்தது என்றால் வேதங்களால் சொல்லப்பட்ட, உலகின் பல்வேறு உடல்களின் உள்ளும் இருக்கும் ஒரே உயிர் போல், சோலை, செண்பகக் காடு, பொய்கை, தடாகம், வயல்கள் ஆகிய எல்லாவற்றிலும் இருந்தது ஒரே வெள்ள நீர் என்று காட்டுகிறார்.

    பொதுவாக தெரிந்த பொருளை உவமையாக்கி தெரியாததை விளக்குவது உவமையணி. இங்கு காணா பொருளை உவமையாக்கி காட்டுவதன் மூலம் காட்டவந்ததையும் காணாப் பொருளையும் நாமுணரத்தருகிறார் கம்பர்.

    இப்படி கடலில் இருந்து நீர் மேகமாகி மலையில் பொழிந்து, குறிஞ்சி மலையிலிருந்து அருவியாக வீழ்ந்து, ஆறாக முல்லையில் பாய்ந்து மருத நில வாய்க்காலில் நுழைந்து, ஏரி, குளம் குட்டை என்று நிறைந்து பின் மீண்டும் நெய்தல் நிலத்தில் கடலை  அடையும் வெள்ளத்தை தன் சொல்லென்ற கருவியால் காணொளிக் காட்சி போல் நம் கண்முன்னே காட்சிப்படுத்தும் கம்பனின் திறம் அறிந்து மகிழத்தக்கது.

    இப்படலத்தில் ஒழுக்கம், ஈகை, தானம் பொன்ற அறங்களைப் பேசிய கம்பன், விலைமாதர், குடிகாரர் போன்றோரின் இழிநிலையையும் காட்டி மக்கள் வாழ்விற்கு நன்னெறியயைக் காட்டுகிறார். சமயங்களுக்குள் பேதம் பார்ப்பது பேதைமை என்பதையும் காட்டிச் செல்கிறார். இத்தனையும் கலிவிருத்தம் ஆசிரிய விருத்தம் போன்ற பா வகைகளும், உவமை, சிலேடை தற்குறிப்பேற்ற அணிகளும் கொண்ட தமிழின் சிறந்த இலக்கண கட்டுக்குள் நிறைத்து சொல்கிறார். கம்பனின் சொல் பொருள் அழகை இன்னும் இரசிப்போம்.

     அடுத்தப் பகுதியில் நாட்டுப்படலம். இப்படலம், நாட்டின் நிலவளம் , மக்கள் அவர்களின் பண்பு நலன், வாழ்வியல் நெறிகள், வழக்கங்கள், செல்வச் செழிப்பு என பலவற்றையும் காட்டக் கூடியது. அறிவோம் சுவைப்போம்..



அன்புடன்
உமா