Showing posts with label பாயிரம். Show all posts
Showing posts with label பாயிரம். Show all posts

Sunday, February 28, 2021

‘கம்பன் கவித்தேன்’ – பாயிரம் 3 -அவையடக்கம்

இப்பகுதியின் ஆறு பாடல்களும் தனது நூலைப் பற்றி மிகுந்த அவையடக்கத்துடன் கம்பன் நமக்கு சொல்லும் செய்தி
.
ஓசை பெற்று உயர் பால் கடல் உற்று ஒரு
பூசை முற்றவும் நக்குபு புக்கு என
ஆசை பற்றி அறையல் உற்றேன்; மற்று இக்
காசு இல் கொற்றத்து இராமன் கதை அரோ.

முதல் பாடலில், இக்கதையை தான் எதற்காக இயற்றினேன் என்று சொல்லுகிறார் கம்பர். ‘ஆசை பற்றி அறையலுற்றேன்’. அறைதல் என்றால் சொல்லுதல். ஆற்றல் காரணமாக அல்ல வெறும் ஆசையினாலேயே எழுதுகிறேன் என்கிறார் கம்பர்.

எதை எழுதினார் என்றால் ‘காசு இல் கொற்றத்து இராமன் கதை’. குற்றமற்ற இராமன் கதையை ஆசை மட்டுமே காரணமாக எழுதுகிறேன் என்று சொன்னவர் அதற்கு ஒரு அழகான உவமையைச் சொல்லுகிறார். இது கம்பனை சிறிதேனும் படித்தவர் அறிந்த பாடல் தான். ஒரு பூனை, ஆழ்ந்து அகன்ற ஒரு பாற்கடலை தன் நாவால் நக்கியே குடித்து விடமுடியும் என்று நினைத்து பாற்கடலை அடைந்ததைப் போல் இப்பெருங்காவியத்தை நான் சொல்லத் துணிந்தேன் என்கிறார்.

இங்கு உவமையாவது பூனையின் முயற்சி. பூனை உவமையானால். பூனையால் எப்படி முடியாதோ அப்படி முடியாத காரியம் இது என்பது போல் ஆகிவிடும். ஆயின்

பூனையால் பாற்கலை குடித்து விட முடியாது தான். என்றாலும் பேராசைக் காரணமாக நக்கியே குடிக்க முயல்கிறது. அதுபோல் குற்றமற்ற இராமன் பெருமையையும் யாராலும் சொல்லுவிட முடியாது. என்றாலும் ஆசை காரணமாக நான் சொல்லத் துணிந்தேன் என்கிறார்.

இப்படி இக்காவியம் முழுவதும் இருக்கும் கம்பனின் உவமைகள் தனிச் சிறப்பு வாய்ந்தவை. இக்காலத்தில் கம்பனை எடுத்தாளாத படைப்பாளிகளே இல்லை எனலாம்.

அடுத்தப் பாடல் இன்னும் அழகு.

நொய்தின் நொய்ய சொல் நூற்கல் உற்றேன்: எனை?
வைத வைவின் மராமரம் ஏழ் தொளை
எய்த எய்தவற்கு எய்திய மாக்கதை
செய்த செய் தவன் சொல் நின்ற தேயத்தே.

கவிச்சக்ரவர்த்தி’ என்றும் ‘கம்பர் கவியே கவி’ என்றும் புகழப்படும் கம்பன் தன் கவிக்கு கொடுத்த அடைமொழி என்னதெரியுமா? ‘நொய்தின் நொய்ய சொல்’ ‘நொய்ய சொல்’ என்பது கருத்தாழமற்ற வெற்றுச் சொற்கள் என பொருள் படும்.

இன்றைய படைப்பாளிகளை எண்ணிப் பாருங்கள். பணமும் பதவியும் இருந்துவிட்டால் வெட்கமின்றி புத்தகம் வெளியிடுகிறார்கள். சற்றேனும் சொந்த கற்பனையோ, கருத்தோ இருப்பதில்லை. ஆயின் தற்புகழ்ச்சி மட்டும் புகைப்படத்துடன் பெரியதாய் இருக்கும். வெட்கம்.

ஆனால் மொழியின் ஆழத்தையும் கற்பனையின் உச்சத்தையும் தொட்ட கம்பன் தன் கவியை நொய்தின் நொய்ய சொல்’ என்கிறான். ஆனால் இப்பாடலிலேயே அவனது புலமையை, சொல் ஆளுமையை நம்மால் உணரமுடியும்.

வைத - பெரியோர்கள் சினத்தில் சாபமிட்டுச் சொல்லிய

வைவின் வசைச்சொல்

மராமரம் ஏழ் தொளை எய்த – ஏழு மரங்கள் தொளைப் படுமாறு 

எய்தவற்கு – அப்படி அம்பை எய்தியவருக்கு -செலுத்திவருக்கு

எய்திய - அமைந்த

மாக்கதை செய்த – பெருங்கதையை இயற்றிய

செய்தவன்- செய்த தவத்தையுடையவன் இங்கு வால்மீகியை குறிக்கிறது

இப்படி வைத வைவின், எய்த எய்தவற்கு, செய்த செய்தவம் என்று சொல்லோடும் பொருளோடும் விளையாடிய கவி தன் சொல்லை ‘நொய்தின் நொய்ய’ என்றானே! என்னே! அவன் எளிமை!!

கருத்துக்கு வருவோம்.

இப்பாடலில் கம்பர் தான் வால்மீகியின் அடியொற்றியே இக்கதையை எழுதியதாக நமக்குத் தெரிவிக்கிறார்.

இங்கும் ஒரு அருமையான உவமையைக் காட்டுகிறார். பெரியவர்கள் சினந்து சாபமிட்டுச் சொல்லும் ஒரு சொல் எவ்வாறு ஏழுதலைமுறையினரைத் தாக்குமோ! அவ்வாறு ஒரே அம்பு எய்தி மிகப்பெரிய ஏழு மரங்கள் ஒன்றாகத் துளைப்படுமாறு செய்த இராமனது கதையை, தான் செய்த தவத்தின் காரணமாக எழுதும் பேறு பெற்றவரான வால்மீகியின் சொல்லை அடிப்படையாகக் கொண்டே நான் இக்காவியத்தை எழுதினேன் என்கிறார். செய்தவத்தான் என்று வால்மீகியைக் குறிப்பிடுகின்றார்.

கம்பராமாயாணத்தின் சிறப்பே அது காட்டும் வாழ்வியல் நெறிகள் என்பதை முன்பே கண்டோம். இங்கு மிக முக்கியமான ஒரு செய்தியை நமக்குச் சொல்கிறார் கம்பர். பெரியவர்கள் சினத்து சொல்லின் அது நம் தலைமுறைகள் ஏழினையும் தாக்கும் என்பது தான் அது. எனவே பெரிய தவமுடையவர், முன்னோர்கள் சினமுறுமாறு நாம் நடக்கக் கூடாது. இது அன்றும் இன்றும் என்றும் கடைபிடிக்கவேண்டிய நெறி.

திருப்பாவையில் ஆண்டாளும் ‘செய்யாதனச் செய்யோம்’ என்று சொல்லவில்லையா!

வள்ளுவனும் பெரியாரைப் பிழையாமை என்ற அதிகாரத்தில்

இறந்துஅமைந்த சார்புஉடையர் ஆயினும் உய்யார்
சிறந்துஅமைந்த சீரார் செறின்

எவ்வளவுதான் பெருமையும் புகழும் நட்பும் உடையவராயினும், பெரிய தவமுடையவர் அவர்களை வெகுண்டால் உய்ய மாட்டார்கள் என்று சொல்லவில்லயா?

மனத்தில் கொள்வோம்.

அடுத்த பாடல்

வையம் என்னை இகழவும் மாசு எனக்கு
எய்தவும் இது இயம்புவது யாது? எனில்
பொய் இல் கேள்விப் புலமையினோர் புகல்
தெய்வ மாக் கவி மாட்சி தெரிக்கவே.

வையம் என்றால் உலகம். இங்கு கற்றறிந்த பெரியோரை குறித்தது. கற்றறிந்தவர் என்னை இகழுமாறும் , குற்றம் அல்லது ஏளனத்திற்கு தான் ஆளாகுமாறும் இக்கதையை நான் ஏன் இயம்புகிறேன் என்றால் ‘ பொய் இல் கேள்வி புலவர் தெய்வத் தன்மையால் சொல்லிய கவியின் பெருமைச் சொல்லும் அவாவினாலே என்கிறார். அக்கவியில் உள்ள ஆழ்ந்த கருத்துக்களைச் சொல்லவேண்டும் என்பதாலேயே.. தமிழில் வள்ளுவரை ‘பொய்யாமொழிப் புலவன்’ என்கிறோமல்லவா. அவ்வாறே வடமொழியில் வசிட்டர், வால்மீகி போன்றோரை பொய் இல் கேள்வி புலவர் என்பர். தெய்வ அருள் இருந்தால் மட்டுமே ஆழ்ந்த அக்கவிகள் சாத்தியம் என்பதால் தெய்வ மாக் கவி என்கிறார்.

துறை அடுத்த விருத்தத் தொகைக் கவிக்கு
உறை அடுத்த செவிகளுக்கு ஓதில் யாழ்
நறை அடுத்த அசுண நல் மாச் செவிப்
பறை அடுத்தது போலும் என் பா அரோ.

அடுத்தப் பாடலில் ‘அசுணம்’ என்ற ஒரு விலங்கைப் பற்றிய குறிப்பைத் தருகிறார். மா என்றால் விலங்கு அசுண மா என்பது மிகவும் ஆச்சரியமான விலங்காகத் தெரிகிறது. அது மென்மையான யாழ் இசையைக் கேட்டால் தன் இடத்தை விட்டு வெளிவருமாம். இரசிக்குமாம். அதுவே சற்று இறைந்து ஒலிக்கக் கூடிய பறை போன்ற இசைச் கேட்டால் இறந்தே விடுமாம்.

இங்கு அவ்விலங்கின் இயல்பை உவமையாக்கி செறிவுற்ற நல்ல விருத்தப் பாக்களை கேட்ட செவிகளுக்கு, எனது பாக்களை கேட்கும் பொழுது அசுண மாவின் காதில் பறை கேட்டது போல் இருக்கும் என்கிறார்.

இப்படியெல்லம் தன் கவியை மிக எளிமையானது என்று சொன்னவர் அடுத்த இரண்டு பாடல்களில் பிழையிருப்பின் பொறுத்தருள வேண்டும் என்று, இயல், இசை, நாடகம் என்றமைந்த முத்தமிழிலும் முறையாக கற்றுணர்ந்த சிறந்த பெரியோரை வணங்கி கேட்பார் போல் எழுதுகின்றார்.

முத்தமிழ்த் துறையின் முறை போகிய
உத்தமக் கவிகட்கு ஒன்று உணர்த்துவன்;
பித்தர் சொன்னவும் பேதையர் சொன்னவும்
பத்தர் சொன்னவும் பன்னப் பெறுபவோ?

பித்தர் பிதற்றிய சொற்களையும், அறிவற்ற பேதையர் சொன்ன சொற்களையும் மேலும் பக்தியின் மேலீட்டால் பக்தர் சொன்ன சொல்லையும் பெரிதாக எண்ணி ஆராய்வதுண்டோ அது போல் எங்கவியையும் நீவீர் ஏற்க வேண்டும் என்று சொல்கிறார்.


அறையும் ஆடு அரங்கும் மடப் பிள்ளைகள்
தறையில் கீறிடில் தச்சரும் காய்வரோ?
இறையும் ஞானம் இலாத என் புன் கவி
முறையின் நூல் உணர்ந்தாரும் முனிவரோ?

சிறு பிள்ளைகள் கற்பனையில் ஆடலரங்கும் அறையும் அமைத்து தரையில் கோடு கிழித்து கற்பனை வீடுகட்டி விளையாடினால், சிற்பி அல்லது இக்காலத்தில் கட்டிடத்துறையில் வல்லுனர்கள் என்று வைத்துக் கொள்ளலாம், அது தவறு என்று காய்வரோ? மாட்டர்கள் அல்லவா! அவ்வாறே, சிறிதும் ஞானமில்லாத என் புன் கவிகளை முறையாக நூல் உணர்ந்த பெரியோர் தவறாக கொள்வரோ! கொள்ளக் கூடாது என்று கவி கூறுகிறார்.

மடமை அல்லது அறியாமை உடைய சிறு குழந்தைகள் அவ்வாறு கற்பனையில் வீடு கட்டி விளையாடுதல் அவர்களது சிறப்பையே காட்டுகிறது. இது மனத்தால் இரசிக்க வேண்டியது. அறிவால் ஆராய வேண்டியதல்ல. எனவே உணர்வு பூர்வமான ஒருவிஷயத்தை அறிவு பூர்வமாக அணுகலாகாது என்று சொல்வதாயும் இதைக் கொள்ளலாம்.

இப்படி பல உவமைகளால் தன் காப்பியத்தை அறிமுகபடுத்திய கவி, இந்நூலிற்கு மூல நூல் எது என்பதை இப்பாடலில் சொல்கிறார்.

தேவ பாடையின் இக் கதை செய்தவர்
மூவர் ஆனவர் தம் உளும் முந்திய
நாவினார் உரையின்படி நான் தமிழ்ப்
பாவினால் இது உணர்த்திய பண்பு. அரோ.

வடமொழியில் இராம கதையை செய்தவர் மூவர். வான்மீகி, வசிட்டர், போதாயனார். இவர்களுள் முன்னவராகிய வான்மீகியின் உரைப் படியே தான் தமிழ்ப் பாவினால் இக்காவியத்தைச் செய்துள்ளேன் என்று நூல் வரலாறு அறிவிக்கிறார். முன்பே, செய் தவன் சொல் நின்ற தேயத்தே’ என்று சொன்னாரல்லவா!

அடுத்து

இக்காப்பியம் எழுதபட்ட இடத்தை பதிவு செய்கிறார்.

நடையில் நின்று உயர் நாயகன் தோற்றத்தின்
இடை நிகழ்ந்த இராம அவதாரப் பேர்த்
தொடை நிரம்பிய தோம் அறு மாக்கதை
சடையன் வெண்ணெய் நல்லூர் வயின் தந்ததே

ஒழுக்கத்தில் நின்று உயர்ந்த திருமாலின் அவதாரங்களின் ஒன்றான இராமாவதாரத்தைச் சொல்லும், செய்யுள்களால் ஆன குற்றமற்ற சிறந்த இக்காப்பியம் சடையப்பரின் திருவெண்ணெய் நல்லூரில் இயற்றப்பட்டது என்பது கருத்து.

இங்கு நடையில் நின்றுயர் நாயகன் என்று சொன்னதற்கொப்ப காப்பியம் முழுதும் இராமனின் குணநலனை பல இடங்களில் சிறப்பாக காட்டியிருப்பார். முக்கியமாக தமிழ் பண்பாட்டிற்கொப்ப காட்டியிருப்பார். இதற்காகவே வான்மீகியிடமிருந்தும் மாறுபடும் சில இடங்களும் உண்டு.

உதாரணமாக அகலிகை கல்லாக இருந்த பொழுது இராமனின் கால் பட்டு உருபெற்றதாக வால்மீகத்தில் இருக்கும் அதுவே கம்பன் அமைக்கும் போது இராமனின் கால் துகள் பட்டதாக காட்டுவார். இவ்வாறு பல இடங்களில் தமிழ் பண்பையும் ஒழுக்கத்தையும் காட்டி நாம் இன்றும் கற்க வேண்டிய பல விஷயங்களை பாடியிருப்பார்.

கம்பரின் தமிழையும் தமிழரின் பண்பையும் கம்பனின் கவிமூலம் கற்போம். அடுத்த பதிவில் கம்பராமாயண நூலுக்குள் நுழைவோம். ஒவ்வொரு படலத்திலுமுள்ள கருத்தை, நயமிக்க சில கவிதைகளை சிந்தித்து மகிழ்வோம்.


அன்புடன்
உமா



Saturday, February 27, 2021

‘கம்பன் கவித்தேன்’ – பாயிரம் 2- கடவுள் வாழ்த்து - தொடர்ச்சி

வான்நின்று இழிந்து, வரம்பு இகந்த
மா பூதத்தின் வைப்பு எங்கும்,
ஊனும் உயிரும் உணர்வும்போல்,
உள்ளும் புறத்தும் உளன் என்ப -
கூனும் சிறிய கோத்தாயும்
கொடுமை இழப்ப, கோல் துறந்து,
கானும் கடலும் கடந்து, இமையோர்
இடுக்கண் தீர்த்த கழல் வேந்தன்.

இப்பாடல் பாயிரப் பகுதியில் அமையவில்லை என்றாலும், அயோத்தியா காண்டத்தில் அமைந்த கடவுள் வாழ்த்துப் பகுதி என்பதால், ‘இறை’ கொள்கையை கம்பன் எவ்வாறு அழகாக எடுத்துச் சொல்கிறான் என்பதை அறியும் விதமாக இப்பகுதியில் இதனை நாம் சிந்திப்போம்.

அயோத்தியா காண்டத்தில் தான் இராமாயணத்தின் முக்கிய முதல் திருப்பம் இடம்பெறுகிறது. கூனியின் சூழ்ச்சியும் இராமன் கானேகுதலும் இக்காண்டத்தில் நடைப்பெறுகிறது. 

கிட்டத்தட்ட இராமாயணத்தின் சுருக்கமாக இப்பாடல் அமைந்திருக்கிறது. கூனியும், ‘கூனும்’ என்பது ஆகுபெயர்,  சிறிய கோத்தாயும் செய்த கொடுமையினால் கோல் துறந்து, கானும் கடலும் கடந்து அமரர் இடர் தீர்த்து வீரக் கழலணிந்த வேந்தன் என்று இராமாயணக் கதை இதில்  சொல்லப்பட்டிருப்பது அழகு.

இங்கு ‘கோல் துறந்து’ என்று கம்பன் சொல்லியிருப்பதும் அறிந்து மகிழத்தக்கது. அவன் பரம் பொருள். அவனே அனைத்துமாய் இருப்பவன். அவனே உலகை ஆள்பவன். அவன் அரசாட்சியை இழத்தல் என்பது சரியாகுமா? அவதார நோக்கம் நிறைவேறவே அரசாட்சி அவனால் துறக்கப்பட்டது என்பதைச் சொல்லும் விதமாக ‘கோன் துறந்து’ என்று கூறியிருப்பார் கம்பன்.

இப்பாடலின் முதல் நான்கு வரிகள் இறைவனின் இயல்பை அருமையாக எடுத்தியம்புகின்றன. வானின்று இழிந்து என்பது கடவுள் தம்நிலையிலிருந்து இறங்கி வந்து, எல்லையில்லா ஐம்பெரும் பூதங்களாலான இவ்வுலகம் முழுவதும்

ஊனும் உயிரும் உணர்வும்போல்,
உள்ளும் புறத்தும் உளன் என்ப -

ஊன் என்றால் உடல். இறைவன் உடம்பில் உயிர் போல உள்ளும், உடலுக்கு உணர்வைப் போல் புறத்தேயும் இருப்பவன்.

அப்படிப்பட்ட இறைவனே!

கூன் கொண்ட உடலை உடைய கூனியும்,சிறிய கோத்தாயாகிய கைகேயியும் செய்த கொடுமையினால் கோல் துறந்து, கான் கடந்து, இமையோர் இடுக்கன் தீர்த்தவனாகிய இராமனாக அவதரித்தவன். என்கிறார். கம்பன் இக்காவியத்திற்கு இட்ட பெயரே ‘இராமாவதாரம்’ தானே!

மேலும் இறைவனின் தன்மையை ஆரண்ய காண்டத்தின் கடவுள் வாழ்த்தில்

பேதியாது நிமிர் பேத உருவம் பிறழ்கிலா
ஓதி ஓதி உணருந்தொறும் உணர்ச்சி உதவும்
வேதம் வேதியர் விரிஞ்சன்முதலோர் தெரிகிலா
ஆதி நாதர் அவர் எம் அறிவினுக்கு அறிவு அரோ.

பேதம் என்றால் வேறுபாடு, மாற்றம், தனது உயர்ந்த நிலையிலிருந்து வேறுபடாமல், தன்னிலிருந்து தோன்றும் உருவங்களிலிருந்தும் தான் வேறுபடாமலும், மீண்டும் மீண்டும் ஆராய்ந்து உணரும் போது மெய்யறிவைத் தரும், வேதமும் அதை ஓதும் அந்தணரும், பிரமனும் அறிந்து கொள்ள இயலாத முழு முதற்கடவுள், அவர் நம் சிற்றறிவுக்கு அறியும் பொருளாகவும் உள்ளார். எனவும்

கிட்கிந்தா காண்டத்தில்

மூன்று உரு எனக் குணம்
மும்மை ஆம் முதல்,
தோன்று உரு எவையும்,
அம் முதலைச் சொல்லுதற்கு
ஏன்று உரு அமைந்தவும்,
இடையில் நின்றவும்,
சான்றவர் உணர்வினுக்கு
உணர்வும், ஆயினான்

சிவன், விஷ்னு பிரமன் என்று மூன்று உருவும், சாத்வீகம், இராஜசம், தாமசம் என்ற மூன்று குணஙகளும் கொண்டவனாய் உலகில் தோன்றிய அனைத்து தத்துவங்களாயும், அவனை அறிந்து கொள்ளும் வகையில் உலகில் உருவங்களாயும் அவ்வுருவில் நின்ற உயிராகவும், ஞானிகளால் உணர்ந்து கொள்ளும் படியாகவும் இருப்பவன் என்றும் காட்டுகிறார்

சைவ இலக்கியமாகிய சிவபுரானத்திலும் மாணிக்கவாசகர்

நிலம் தன்மேல் வந்து அருளி நீள்கழல்கள் காட்டி,
நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத் ⁠
தாயிற் சிறந்த தயா ஆன தத்துவனே
என்றும்
கூர்த்த மெய் ஞானத்தால் கொண்டு உணர்வார் தம்கருத்தில் ⁠
நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண் உணர்வே

எனவும் பாடியிருக்கிறாரே!! 

அடுத்து சுந்தர காண்டத்தில்
அலங்கலில் தோன்றும் பொய்ம்மை
அரவு எனப் பூதம் ஐந்தும்
விலங்கிய விகாரப் பாட்டின்
வேறுபாடு உற்ற வீக்கம்
கலங்குவது எவரைக் கண்டால், ‘
அவர் என்ப, கைவில் ஏந்தி
இலங்கையில் பொருதார் அன்றே,
மறைகளுக்கு இறுதி ஆவார்!

அலங்கலில் தோன்றும் பொய்மை அரவு, இருளில் மாலையானது பாம்பென தோற்றம் அளிப்பது போல் ஐம்பூதங்கள் இணைந்து வேறுவேறாக நின்ற பன்மைத் தோற்றம் யாரைக்கண்டால் மறையுமோ அவரே வேதங்களுக்கெல்லாம் இறுதியாக இருப்பவர், அவரே கையில் வில்லேந்தி இலங்கையில் போர் புரிந்தார் என்கிறார். இருளில் பூமாலையானது பாம்பாக தோற்றம் அளித்தாலும் வெளிச்சம் வந்ததும் அது பூமாலைதான் என்பது புலப்படும் அதுபோல் மெய்ஞானம் வந்தால் இயற்கையின் பல்வேறு உருவங்களும் இறைவனே என்ற தெளிவு பிறக்கும். அந்த மெய்ஞானமாக விளங்குபவரே கடவுள் எனக் காட்டுகிறார். இங்கும் அக்கடவுளே இராமனாய் வந்தார் எனக் காட்டும் விதமாய், அவரே இலங்கையில் பொருதார் எனச் சொல்லுகிறார்.

பொய் ஆயின எல்லாம் போய் அகல வந்தருளி
மெய் ஞானம் ஆகி மிளிர் கின்ற மெய்ச் சுடரே

அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல் அறிவே

என்று எல்லாமாய் நிற்கும் பரம் பொருளைப் மாணிக்கவாசகரும் பாடவில்லையா!

இப்படி மறைகளுக்கு, வேதங்களுக்கெல்லாம் இறுதிப் பொருளாய் விளங்கக்கூடிய இறைவனின் தன்மையை மிக அருமையாக காட்டிய கம்பன் யுத்த காண்டத்தின் வாழ்த்தில் முத்தாய்ப்பாக

ஒன்றே என்னின் ஒன்றே ஆம்,
பல என்று உரைக்கின் பலவே ஆம்,
அன்றே என்னின் அன்றேயாம்,
ஆமே என்னின் ஆமே ஆம்,
இன்றே என்னின் இன்றேயாம்,
உளது என்று உரைக்கில் உளதேயாம்,
நன்றே நம்பி குடிவாழ்க்கை!
நமக்கு இங்கு என்னோ! பிழைப்பு? அம்மா!

ஒன்றுதான் என்றால் பரம்பொருள் ஒன்றுதான். பல என்று சொன்னாலும், ஐம்பூதங்காளாலான பல பொருளாகவும் அவற்றின் உள்ளுறு உயிராகவும் உணர்வாகவும் பலவாக இருப்பதும் அவனே! 
உலக பொருட்களின், ஞாயிறு, திங்கள் போல், இவற்றின் தன்மையைப் போல் பன்மடங்கு வாய்த்தவன் எனக் கூறி 'ஆம்' என்று காட்டினாலும், 
இல்லை, இவை அவன் தன்மையின் ஒருத்துளியே என்பதால் 'இல்லை' என்றாலும் அவ்வாறே. 
'உளது' என்று காடடினால் 'உளதாயும்' இருக்கக்கூடிய இறைவனின் நிலை மிகப் பெரியது அதை உணர்ந்து உய்வது எவ்வாறு என்று கூறும் கம்பன், அப்பரம் பொருளே இராமனாய் இறங்கி வந்து நாம் உய்ய வழிகாட்டுகிறான் என்பதை கடவுள் வாழ்த்து பகுதியிலும் நூலின் பல இடங்களில் அனுமன் வாயிலாகவும் மண்டோதரி வாயிலாகவும் கூறுகிறார்.

இப்படிப்பட்ட இராமனின் அவதாரப் பெருமையை, கம்பன், தான் 'ஆசைபற்றி அறையலுற்றதாக' அவையடக்கத்தில் கூறும் அழகை அடுத்தப் பகுதியில் சிந்திப்போம்.


அன்புடன்
உமா

Friday, February 26, 2021

கம்பன் கவித்தேன் – பாயிரம் 1

'பாயிரம்' என்பது நூலைப் பற்றி, நூலில் பயின்று வரும் பொருள், யாரால், எங்கு, எதற்காக எழுதப்பட்டது என்பதைப் பற்றிக் கூறுவது. பொதுவாக, ஒரு நூல் எவ்வாறு அமைய வேண்டும் என்று சொல்வது பொதுப் பாயிரம். குறிப்பிட்ட நூல் எவ்வாறு அமைந்துள்ளது எனச் சொல்வது சிறப்புப் பாயிரம்.

'பதிகம்' என்றும் இதை சொல்வதுண்டு. பதிற்றுப்பத்து போன்ற சங்க இலக்கியங்களில் ஒவ்வொரு தொகுதியிலும் சொல்லப்பட்ட கருத்துக்களை தொகுத்து கூறுவதாக 'பதிகம்' அமைந்திருக்கும்.

இக்காலத்தில் 'முன்னுரை' என்று வழங்கப்படுவது நாமனைவரும் அறிந்ததே. இதுவும் பாயிரமே! என்றாலும் இன்றைய முன்னுரை என்பது நூலாசிரியர் புகழ் பாடுவதாய் மாறுபட்டுவிட்டது.

பாயிரத்தை நூலாசிரியரே எழுதுவதும் உண்டு, பிறரால் எழுதப்படுவதுவுமுண்டு. சங்க இலக்கியங்களில் இவை பிறரால், பிற்காலத்தில் எழுதப்பட்டு சேர்ப்பிக்கப்பட்டது. திருக்குறளில் வள்ளுவர் தாமே பாயிரம் எழுதியிருப்பார். பாயிரவியல் என்று ஒரு இயலாகவே அமைத்திருப்பார். கடவுள் வாழ்த்து, வான் சிறப்பு, நீத்தார் பெருமை, அறன் வலியுறுத்தல் என்ற நான்கு அதிகாரங்கள் பாயிரவியலில் அமைந்திருக்கும். நினைத்த காரியம் நன்கு நிறைவேற ‘கடவுள் வாழ்த்துடன்’ துவங்குவது மரபு. அடுத்து, தான் சொல்லவந்த அறம், பொருள் இன்பம் முதலியன தழைப்பதற்கு ஆதாரமாய் இருப்பது மழை என்பதால் ‘வான் சிறப்பு’ பாடினார்.

நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு

என்பது வள்ளுவன் வாக்கல்லவா! பின் அவ்வறம், ஆகியவற்றை நாம் அறியக் காட்டும் நீத்தாரின், துறவிகளின் பெருமை கூறினார். பின் வீடுவேற்றிற்கு ஆதாரமான அறன் பற்றி பாடி பாயிரம் பகுதியை நிறைவு செய்திருப்பார்.

கம்பராமாயணத்திலும் பாயிரமாக கடவுள் வாழ்த்து, அவையடக்கம், நூல் வரலாறு, காவியம் பிறந்த களம் ஆகிய பகுதிகள் அமைந்துள்ளன. இது தற்சிறப்பு பாயிரம்.

கம்பராமாயணத்தின் 'கடவுள் வாழ்த்து' ஏற்புடை கடவுள் வாழ்த்து எனப்படும். எதைப்பற்றி எழுதுகிறோமோ அவ்விஷயத்திற்கான கடவுளை வாழ்த்தி பாடுவது, ஏற்புடை வாழ்த்து. கவி தன் விருப்ப தெய்வத்தை வாழ்த்துதல் வழிபடு கடவுள் வாழ்த்து.

இப்படி, ஒரு நூல் எவ்வாறு அமைய வேண்டும் என்பதற்கு சிறப்பாக இலக்கணங்கள் இருப்பது தமிழின் சிறப்பு. பல்லாயிரம் ஆண்டுகளாக நிலைத்து, தமிழ் செம்மொழியாய் அமைய இக்கட்டமைப்புகள் முக்கியமான காரணம். இன்றைய நிலையில் இவற்றை அறிவார் மிகச் சிலரே என்பது வருத்தமான விஷயம்.

கடவுள் வாழ்த்து – பாயிரம் - பாலகாண்டம்

கம்பன், பாயிரப் பகுதியிலும் மற்றும் ஒவ்வொரு காண்டத்தின் துவக்கத்திலும் 'கடவுள் வாழ்த்து' அமைத்திருப்பார்.

உலகம் யாவையும் தாம் உள ஆக்கலும்
நிலை பெறுத்தலும் நீக்கலும் நீங்கலா
அலகு இலா விளையாட்டு உடையார் அவர்
தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே

சித் குணத்தர் தெரிவு அரும் நல் நிலை
எற்கு உணர்த்த அரிது எண்ணிய மூன்றனுள்
முன் குணத்தவரே முதலோர் அவர்
நல் குணக் கடல் ஆடுதல் நன்று! அரோ.

ஆதி அந்தம் அரி என யாவையும்
ஓதினார் அலகு இல்லன உள்ளன
வேதம் என்பன மெய் நெறி நன்மையன்
பாதம் அல்லது பற்றலர் பற்று இலார்.

கம்பன் கடவுள் வாழ்த்துப் பகுதியில் மூன்று பாக்களை செய்துள்ளார்.முதல் பாடல், தமிழறிந்தவர் பலருக்கும் பரிச்சயமானது. இப்பாடலில் ஆக்கல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருள்தல் என்ற ஐந்து தொழிலையும் விளையாட்டாகச் செய்யக் கூடியவர், அவரே இறைவன். அன்னவர்க்கே சரண் நாங்கள் என்று ஒன்றேயான பரம் பொருளை வணங்கி இருப்பார்.

அடுத்தப் பாடலில் சித் என்றால் அறிவு, மெய்யறிவாக விளங்கக் கூடியவரின், யாராலும் உணர்ந்துக் கொள்ள முடியாத நிலையை என்னால் உணர்த்தல் அரிது. என்றாலும் முன்னோர்கள் கூறிய மூன்று குணங்களாகிய சத்துவம். இராஜசம், தாமசம் ஆகிய குணங்களில் முதல் குணமான சாத்வீக குணம் கொண்டவரின் குணக்கடலில் நாம் திளைத்தல் நன்று அல்லவோ! அதாவது சாத்வீக குணம் கொண்டவரை வழிகாட்டியாகக் கொள்ளுதல் நாம் இறைவனை அடையும் வழி என்று காட்டியிருப்பார்.

அடுத்தப்பாடலில் அரியதான பலத்துறைகளிலும் முதலும் இறுதியும் கற்று ஓதியவரும், வேதங்களும், பற்றினைத் துறந்தவரும் முடிவில் பற்றக் கூடிய ஒரே பொருள் இறைவன் திருவடிகளே! என்று கூறியிருப்பார்.

இங்கு

பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்று விடற்கு.

என்ற குறள் ஒப்பு நோக்கத்தக்கது.

முதல் பாடலில் பரம் பொருளான இறைவனை நேரிடையாகவும், அடுத்து அடியாரின் துணைக்கொண்டு அவர் வழிநடந்து அதன் மூலமாகவும் இறுதியில் அவனே கதி என்று சரணடைவதையும் காட்டுகிறார்.

எடுத்துக் கொண்ட காவியம் வைணவ இலக்கியம், கம்பரும் வைணவ சமயத்தை பின்பற்றுபவர் என்றாலும் கடவுள் வாழ்த்தில் ஒன்றேயான பரம்பொருளையேப் பேசுகிறார்.

கம்பனுக்கு முன்பு பக்தி இலக்கிய காலத்தில் சமயச் சண்டைகள் பெரிதும் காணப்பட்டன, இலக்கியங்களில் அதன் தாக்கத்தைக் காணலாம். எனவே சமயங்களுக்குள் சண்டை என்பது பேதைமை என்ற தன் பரம் பொருள் கருத்தை பல இடங்களில் கம்பன் கட்டியிருப்பார்.

ஆற்றுப் படலத்தில் ஒரு பாடல்

நீறு அணிந்த கடவுள் நிறத்த வான்
ஆறு அணிந்து சென்று. ஆர்கலி மேய்ந்து. அகில்
சேறு அணிந்த முலைத் திருமங்கைதன்
வீறு அணிந்தவன் மேனியின் மீண்டதே.

மழைப் பொழியும் ஒரு இயற்கை நிகழ்வு, அறிவியல் பூர்வமாக கடல் நீர் ஆவியாகி, மேலெழும்பி நீர் மிகுவதால் கறுத்து மின்னி இடித்து மழையாகப் பொழிகிறது. கம்பன் தன் சமய கருத்தைச் சொல்ல இவ்விடத்தைப் பயன் படுத்திக் கொள்கிறான்.

வெண்மையான மேகம், உடலெங்கும் திருநீறணிந்த சிவபெருமானைப் போல் காட்சியளிக்கிறதாம். வானத்தை அழகு செய்தவாறே சென்று கடலில் நீரை உண்டு அகில் என்ற வாசனைக் குழம்பணிந்த திருமகளால் பெருமை பெற்றவனான திருமாலின் கரிய வண்ணம் போல் மீண்டதாம்.

மேகம் என்பது ஒன்றே. அதுவே வெண்மையாகவும் கருமையாகவும் காட்சி அளிப்பது போல், பரம் பொருளே சிவனாகவும் பெருமாளாகவும் காட்சி தருகிறான் என்று மிக அழகான உவமையால் காட்டியிருப்பார்.

இதில் இன்னுமொரு அழகும் காணலாம். இங்கு 'ஆர்கலி மேய்ந்து' என்று சொல்லியிருப்பார். மாடுகள் மேயும் என்பது தெரியும். ஒரு பரந்த புல்வெளியில் மேயும் போது பசுமையான புல்லைமட்டும் மேலோட்டமாக மேய்ந்து உண்ணும். கடலில் மேல்பரப்பில் இருக்கும் நீர்தானே ஆவியாகி மேகமாகிறது. ஆழ் கடல் நீர் அல்லவே! அதனால் தான் மேகம் மேலோட்டமாக கடல் நீரை மேய்ந்ததாம்.

சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை
வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து.

என்பதற்கு இது சான்றல்லவா!!

மற்றொரு பாடல் – உலாவியற் படலத்தில். இராமன் வருகிறான். அவனை மிதிலை மக்கள் காண்கின்றனர். அவனது முழு உருவை யாராலும் காணமுடியாது நிற்கின்றனர் என இராமனின் உருவ அழகை காட்ட வந்த கம்பன்

தோள் கண்டார் தோளே கண்டார்;
தொடு கழல் கமலம் அன்ன
தாள் கண்டார் தாளே கண்டார்;
தடக் கை கண்டாரும் அஃதே;
வாள் கண்ட கண்ணார் யாரே
வடிவினை முடியக் கண்டார்?
ஊழ் கண்ட சமயத்து அன்னான்
உருவு கண்டாரை ஒத்தார்.

எங்கிறார். இராமனின் தோளைக் கண்டவர், தோளை மட்டுமே கண்டார். தோள் அழகில் மூழ்கியவர் மற்ற உறுப்புக்களை காண முடியாமல் நின்றார். தாளினை கண்டவர் தாள் மட்டுமே கண்டார். கையைக் கண்டாரும் அப்படியே என்றவர் அவர்கள் நிலையை

ஊழ் கண்ட சமயத்து அன்னான்
உருவு கண்டாரை ஒத்தார்.

என்கிறார். மாறுபட்ட கொள்கைகள் கொண்ட சமயத்தவர் பிற சமயத்தவரின் கொள்கைகளை காணாதார் போல இவர்கள் நிலை இருந்ததாக கூறுகிறார்.

வாள் கண்ட கண்ணார் யாரே
வடிவினை முடியக் கண்டார்?

அவன் உருவை யாரும் முழுதுமாக காணவில்லை. அதுபோல்தான் சமயங்களும் பரம்பொருளின் உண்மை நிலையை உணராது, முழு உண்மையைக் காணாது தாம் கண்டதே கொள்கை என்று நிற்கின்றன எனக் காட்டுகிறார். இங்கு யானையைத் தொட்டுணர்ந்த குருடர் கதை நினைவிற்கு வருகிறதல்லவா!!

அதேபோல் சீதையின் அழகைக் காட்டுமிடத்து, இன்னும் சிறப்பான ஒப்புமை ஒன்றைக் காட்டுகிறார் கம்பர். கோலங்காண் படலத்தில் இன்னுமொரு பாடல்

பல் இயல் நெறியின் பார்க்கும்
பரம் பொருள் என்ன. யார்க்கும்.
‘இல்லை.’ ‘உண்டு’. என்ன நின்ற
இடையினுக்கு இடுக்கண் செய்தார்.

சீதைக்கு அணிகலன் பூட்டுகிறார்கள். தலையில் , கழுத்தில் என பல அணிகலங்களை அணிந்ததை காட்டிய கம்பனுக்கு இடையணி இடும் நேரம் மட்டும் வருத்தம் மேலோங்குகிறது. ஏனென்றால் பல சமயத்தைச் சேர்ந்தவரும் கடவுள் 'உண்டு', 'இல்லை' என தம்முள் வாதம் செய்தும் 'இல்லை', 'உண்டு' என முடிவுக்கு வர இயலாத கடவுளைப் போல, இருக்கிறதா? இல்லையா? என்றறிய முடியாத இடைக்கு அணிகலன் இட்டு துன்பத்தைத் தந்தார்களாம்.

ஒரு பெண்ணின் இடையை வர்ணிக்கும் இடத்தில் பேரின்ப பொருளாகிய பரம் பொருளைப் பாடுவது கம்பனின் வல்லமைதானே!!

இதில் இன்னுமொரு அழகும் உண்டு, என்னதான் இடை உண்டா இல்லையா என்றாலும் இடையில்லாத மனிதரில்லையே! அதுபோல் தான் நாம் உண்டு இல்லை என்று எவ்வளவுதான் வாதித்தாலும் கடவுள் இருக்கிறார். நம்மால் அறியத்தான் முடிவதில்லை என்ற தனது நிலைப்பாட்டை மிக அழகாகக் கூறுகிறார்.

பிற காண்டங்களில் இருக்கும் கடவுள் வாழ்த்தையும் பாயிரத்தின் மற்ற பகுதியையும் அடுத்தப் பதிவில் சிந்திப்போம்.



அன்புடன்
உமா